Skip to main content

எந்தக் கூட்டணிக்கும் விசுவாசம் இல்லாத பாமக! -திருமாவளவன் பேட்டி

Published on 19/02/2019 | Edited on 19/02/2019



2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். 
 

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இடம்பெறுவதற்கான முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் அதிமுக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?
 

இது எதிர்பார்த்ததுதான். இதில் அதிர்ச்சியடைய ஒன்றும் கிடையாது. வழக்கம்போல இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். எந்தப் பக்கம் பேரம் படிந்ததோ அந்தப் பக்கம் போயிருக்கிறார்கள். இது திமுகவுக்கும் தெரியும், அதிமுகவுக்கும் தெரியும். திமுகவிடம் பேசிக்கொண்டே அதிமுகவிடம் பேரத்தை உயர்த்துவம், அதிமுகவிடம் பேசிக்கொண்டே திமுகவிடம் பேரத்தை உயர்த்துவதும்தான் அவர்களுடைய அரசியல் யுத்தி. அந்த வகையில் அதிமுகவுடன் பேரம் படிந்ததால் அவர்களின் கூட்டணி உறுதியாகியுள்ளது. 

 

thol thirumavalavan

 

இது அதிமுக கூட்டணிக்கு பலம் சேர்ப்பது என்பதைவிட பலவீனமாகத்தான் அமையும். மாநிலத்தில் அதிமுக ஆளும்கட்சி. மத்தியில் ஆளும் கட்சி பாஜக. வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிரான உளவியல் எப்போதும் மக்களிடம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு நிர்வாகத் திறன் இல்லாத ஆட்சியாக உள்ளது. மத்திய அரசைப் பொறுத்தவரையில் வெளிப்படையாக மோடி எதிர்ப்பு நிலை பல்வேறு காரணங்களால் இருக்கிறது. ஆகையால் மோடி எதிர்ப்பு நிலை, எடப்பாடி எதிர்ப்பு நிலை, அதோடு எந்தக் கூட்டணிக்கும் விசுவாசம் இல்லாத பாமக இணைப்பு இவையெல்லாம் சேரும்போது அதிமுக அணி பலவீனம் அடையுமே தவிர, பலம் பெறாது. 

 

aiadmk - dmk alliance


 

ஏற்கனவே பாமக வாங்கிய வாக்கு வங்கியை கணக்கு எடுக்கிறார்கள். அந்த வாக்குகள் திமுக, அதிமுக எதிர்ப்பு என்பதை காட்டி வாங்கின வாக்குகள். அந்த நேரத்தில் திமுகவில் உள்ள வன்னியர்கள், அதிமுகவில் உள்ள வன்னியர்கள், மாற்றம் வேண்டும் என நினைத்த அதிமுக - திமுக எதிர்ப்பு வன்னியர்களும் பாமகவுக்கு ஓட்டு போட்டார்கள். இப்போது அதிமுக கூட்டணி என்ற நிலையை அவர்கள் எடுத்தவுடனேயே மற்ற கட்சியைச் சேர்ந்த வன்னியர்கள் தற்போது பாமகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அதனால் அதிமுக அணிக்கு எந்த லாபமும் கிடையாது. ஏற்கனவே பெற்ற வாக்குகள் பாமகவுக்கு கிடைக்காது. 
 

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கேட்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது?
 

இன்னும் பேச்சுவார்த்தை முறையாக தொடங்கவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகிறது. கூட்டணி கட்சிகளை அழைத்துப் பேசும்போது நாங்கள் பேசுவோம். 
 

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதாக சொல்லியிருந்தீர்கள். திமுக தலைமை வேறு தொகுதியை ஒதுக்கினால் ஏற்பீர்களா? சிதம்பரம் தொகுதிதான் என உறுதியாக இருப்பீர்களா?
 

அப்படி ஒன்றும் கிடையாது. என்னுடைய சொந்தத் தொகுதி என்பதால் 1999, 2004, 2009, 2014 என தொடச்சியாக நான்கு முறை போட்டியிட்டுள்ளேன். சொந்த தொகுதி என்பதால் என்னுடைய விருப்பத்தை தெரிவித்தேன். இருந்தாலும் கூட்டணி தலைமையிடம் பேசித்தான் முடிவு செய்யப்படும். 
 

உங்கள் கூட்டணியில் இன்னும் யார் யார் எல்லாம் இணையலாம் என விரும்புகிறீர்கள்?
 

அது திமுகவுக்கான அதிகாரம் மற்றும் உரிமை. கூட்டணிக்கு பலம் சேர்க்க யாரிடம் பேச வேண்டும் என்ற கருத்தை நாம் சொல்ல முடியாது. அதனை திமுகதான் முடிவு செய்யும். 
 

விஜயகாந்த்தை பியூஸ் கோயல் சந்திப்பதாக கூறப்படுகிறதே?
 

இதுவும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. 

 

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.