Skip to main content

பாஜகவை தோற்கடிக்கும் அதிமுக... உற்சாகத்தில் கனிமொழி...!

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

தூத்துக்குடி பாராளுமன்ற  தொகுதி எப்போதும் இல்லாத அளவிற்கு தேர்தல் பரபரப்புடன் இயங்க தொடங்கியுள்ளது. கடந்த மே 22-ம் தேதி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு மயான அமைதி கொண்டிருந்த தூத்துக்குடி தற்போது இரண்டு தனிப்பெரும் அடையாளமிக்க வேட்பாளர்கள் கனிமொழி, தமிழிசை களம் இறக்கப்பட்டதின் மூலம் விஐபி தொகுதியுடன் விறுவிறுப்பும் தொற்றிக்கொண்டுள்ளது. அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, தமாக என ஒரு பட்டாளம் பாஜகவிற்கும், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் கட்சி, என மற்றொரு பக்கம் திமுக அணி திரட்ட, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் தனிப்பாதையுடன் தேர்தல் சூட்டை கிளப்ப தொடங்கி விட்டனர்.

 

kanimozhi

 

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் எதனை நோக்கி வாக்குகளை சேகரிக்கிறார் என்கிற கேள்வியும், எதன் அடிப்படையில் கனிமொழி, தமிழிசை போன்றோர் களமிறக்கப்பட்டுள்ளனர் என்கிற புதிரான கேள்வியும் எல்லோர் மனதிலும் ஆழமாக எழுகிறது.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் ஒவ்வொரு தாலுகா வாரியும் ஒவ்வொரு பிரச்சினைகள் உள்ளது. அதுமட்டுமின்றி பொது பிரச்சனைகளான குடிநீர் பிரச்சனை, விவசாய பிரச்சனை, சுகாதார சீர்கேடுகள், கிராமப்புற அடிப்படை மேம்பாடு சீரமைப்பின்மை, தொழில் வருவாய் இழப்பு குறைபாடுகள், உப்பு உற்பத்திக்கு கூடுதல் விலை, மீனவ வாழ்வாதார பாதிப்புகள், பயிர் காப்பீடு நிலுவை,  என பல நூறு பிரச்சனைகள் உள்ள நிலையில் இவற்றையெல்லாம் சரி செய்வோம் என்கிற எண்ணத்திலா அல்லது சரி செய்யப்பட்டு விட்டது என்கிற எண்ணத்தில் ஆளும்கட்சி கூட்டணி பிஜேபியும், எதிர்கட்சி கூட்டணி திமுகவும் தேர்தல் களத்தில் வாக்குகளை பெற வந்துள்ளனர் என்ற ஒற்றை கேள்வி எல்லா தூத்துக்குடி மாவட்ட  மக்களிடத்திலும் தோன்றுகிறது.

 

சில வருடங்களுக்கு முன்பே ஒவ்வொரு தொகுதி வாரியாக கள ஆய்வுகளை கணக்கிட்டு வந்த  திமுக, வரும் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி  தொகுதியில்  போட்டியிட்டால் நூறு சதவீதம் ஜெயித்து விடலாம் என்கிற உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் தான் கனிமொழியை அங்கே நிறுத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதிமுக செல்வாக்கு அனைத்தும் ஜெயலலிதா இறப்பிற்கு பின்பு இல்லாமல் போய்விட்டது. அதற்கு அதிமுக கோஷ்டி சண்டையும், அதன் விளைவாக பல ஆண்டுகளாக அதிமுக தொண்டர்கள் கண்டுகொள்ளப்படாமல் விட்டதே காரணம், அவ்வாறான சந்தர்ப்ப சூழலை தனக்கு சாதகமாக்கி தற்போதைய முதல்நிலை கருத்து கணிப்பில் கனிமொழியின் வெற்றி வாய்ப்பு கனிய தொடங்கி உள்ளது என்றே கூறலாம்.

 

அதிமுகவின் இரும்பு கோட்டையான தூத்துக்குடியை பாஜகவின் வாக்கு வங்கிக்காக துரும்பாக்கி விட்டனர் இந்த எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் என புலம்புகின்றனர் அதிமுக தொண்டர்கள். தற்போது பாஜகவிற்கு  தூத்துக்குடி தொகுதி வழங்கப்பட்டுள்ளதால் இனி வரும் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் ஆதிக்கமாகிவிடும் இதன் மூலம் இனி ஒவ்வொரு வார்டு தேர்தலிலும் கூட நமக்கு வாய்ப்பிருக்காது என்கிற புகைச்சலுடன் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதோடு  தினகரன் அணி வேட்பாளரை ஆதரித்து விட வேண்டும் என்ற சிந்தனையுடன் உள்ளனர் அதிமுக விசுவாசிகள்.

 

thamizhisai

 

என்னதான் மதரீதியாக, ஜாதி ரீதியாக வாக்குகளை பெற பாஜக திட்டமிட்டாலும் அதனை நடைமுறைப்படுத்த அதிமுக தொண்டர்கள் தான் அவசியமாக செயல்பட்டாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். பாஜக பழம் பறிக்க நாம் ஏன் ஏணியாக நிற்க வேண்டும் பறித்த  பின் நம்மை வீசி எறியமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என ஒவ்வொரு கிராமப்புற அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் சந்தேக கண்ணோட்டம் எழ தொடங்கியுள்ளது. கட்சியை அடகு வைத்து ஆட்சியை நடத்தும் அளவிற்கு அதிமுகவை கொண்டு சென்ற பன்னீர்செலவம், எடப்பாடி பழனிசாமியைவிட தன்மானத்தோடு மிக பெரிய ஆளும் தேசிய கட்சியை எதிர்க்கும் தினகரனை நம்பி தேர்தலை சந்தித்து விடலாம் என்கிற விரக்தியின் உச்சத்தில் உள்ளனர் தூத்துக்குடி அதிமுக தொண்டர்கள்.

 

எப்படியாவது எம்பி சீட்டை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சித செல்லப்பாண்டியன், சீட் கிடைக்காமல் போனது மட்டுமின்றி மாவட்ட செயலாளர் பதவியும் பறி போனதின் துக்கம் தாளாமல் இலங்கை தீவு ஓய்விற்கே சென்று விட்டார். விளாத்திகுளம் மார்க்கண்டேயனின் அமைச்சர் கடம்பூர் ராஜூ  மீதான வெறுப்புணர்வு, தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமி கோஷ்டி வசமிருந்த தூத்துக்குடி, தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின் பன்னீர்செல்வம் கோஷ்டி வசமாகி உள்ளது  என பல வழிகளில் அதிமுக ரணகோலபட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் தூத்துக்குடி தொகுதி அதிமுக வசம் வரும் இல்லையென்றால்  கூட்டணி வசம் ஒப்படைக்கப்பட்டு நமக்கான பதவியை இனி வருங்காலங்களில் தக்க வைக்க முடியாது என்பதால் தேர்தல் களப்பணியாற்றினாலும் வாக்களிப்பது மட்டும் பாஜகவிற்கு எதிராக இருக்க வேண்டும் என்கிறது ரகசிய திட்டங்களுடன் அதிமுக வட்டாரங்கள்.

 

 

 

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

'திமுக ஆட்சிபோல் மத்தியிலும் வரவேண்டும்' - தீவிர பரப்புரையில் கனிமொழி

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'DMK must come to the center as a government' - Kanimozhi in intense lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, அங்குள்ள பசுவந்தனை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''பெரும்பான்மையான இந்து மக்களை ஏமாற்றி நாங்கள் தான் உங்களுக்கு எல்லா உதவியும் செய்வோம் என்று சொல்கிறார்களே தவிர, அந்த மக்களுக்கு வேலை கூட கிடைப்பதில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார். போய் கேட்டால் பக்கோடா போடுங்க அதுவும் வேலை தான் என்கிறார். இப்படிப்பட்ட ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். எல்லா மக்களையும் அரவணைத்து நடக்கக்கூடிய ஆட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அதே போன்ற ஒரு ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி என்ற ஒன்றுதான் இந்த நாட்டின் மக்களை பாதுகாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பாதுகாக்கக் கூடிய ஆட்சியை நாம் அங்கே உருவாக்க வேண்டும். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய். அதேபோல பெட்ரோல் 75 ரூபாய்க்கு வழங்கப்படும். அதேபோல் டீசல் 65 ரூபாய்க்கு வழங்கப்படும். விவசாயக் கடன்,கல்விக் கடன் ரத்து செய்யப்படும். டோல்கேட் எல்லாம் அகற்றப்படும். இதெல்லாம் நம்முடைய முதலமைச்சர் தந்திருக்கும் வாக்குறுதி. இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ஓட்டு போட வேண்டும். வெயிலாக இருக்கிறது என வீட்டில் உட்கார்ந்து இருக்கக் கூடாது. நம்முடைய ஜனநாயக கடமையாக ஓட்டு போட வேண்டும். அதேபோல் தூத்துக்குடியில் உங்களுக்காக மீண்டும் பணியாற்றக்கூடிய வாய்ப்பை எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்''என்றார்.