Skip to main content

அ.தி.மு.க. யார் வசம்? டெல்லியில் நடந்த ரகசிய ஆலோசனை!

Published on 05/10/2020 | Edited on 05/10/2020
ops

 

 

ஜெயலலிதா, சசிகலா இல்லாமல் கடந்த நான்கு வருடமாக அ.தி.மு.க. இயங்கியது. சசிகலா மீண்டும் அரசியல் அரங்கத்திற்கு வருகிறார். மீண்டும் பழைய அ.தி.மு.க.வாக சசிகலாவுடன் இணைந்து பயணிக்குமா? அல்லது ஒரு புதிய ஓபிஎஸ் தலைமையை அ.தி.மு.க. ஏற்குமா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. திங்கட்கிழமை செயற்குழு தொடர்பாக சனிக்கிழமையே விவாதங்கள் தொடங்கிவிட்டன.

 

அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்திற்கு சேர்ந்து வந்த ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் செயற்குழுவில் எதைப்பற்றி விவாதிக்கலாம் என அமர்ந்து பேசினார்கள். செயற்குழுவில் இருவருக்கும் ஒத்தகருத்துள்ள தீர்மானங்களை நிறைவேற்றுவது எப்படி என அந்த தீர்மானங்களை எழுதும் பொறுப்பில் உள்ள ரவி பெர்னார்ட்டுடன் விவாதித்தார்கள். ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த விவாதத்திற்கு பிறகு இருவரும் கலைந்து சென்றார்கள்.

 

மத்தியில் உள்ள பா.ஜ.க., ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., சசிகலா மூவரையும் இணைத்து அ.தி.மு.க.வை கொண்டுசெல்ல விரும்புகிறது. அதற்காக சசிகலாவிடம் ஒரு பெரிய தொகையை தேர்தல் நிதியாக பெற முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் சசிகலா அணியுடன் வெளிப்படையாக எந்தப் பேச்சுவார்த்தைக்கும் பா.ஜ.க. தயாராக இல்லை.

 

தனி விமானத்தில் டெல்லிக்கு சென்ற டி.டி.வி.தினகரனை வெளிப்படையாக சந்திக்க பாஜக தலைவர்கள் முன்வரவில்லை. மறைமுக நடவடிக்கைகளில் பாஜக சார்பில் ராஜ்நாத் சிங், சசிகலாவுடன் பேசி வருகிறார். அந்த தகவல் தமிழகத்தில் குருமூர்த்தி உட்பட யாருடனும் பகிரப்படவில்லை. இதனால் டெல்லி என்ன நினைக்கிறது என்பது ஒரு பெரிய குழப்பம் இ.பி.எஸ்.சுக்கு இருந்தது.

 

இந்த குழப்பத்தை தவிர்க்க 26ஆம் தேதி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க எடப்பாடி அப்பாயிண்ட்மென்ட் கோரினார். திடீரென்று மதியம் அந்த அப்பாயிண்ட்மென்ட் ஓ.கே. ஆனது. மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த சந்திப்பு சசிகலா பற்றி பாஜக என்ன நினைக்கிறது? சசிகலாவிடம் இணைந்து பயணிப்பது அவசியமா? சசிகலாவுடன் இணைந்து பயணித்தால் பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. மீது ஒரு ஊழல் கறை விழும், ஒட்டுமொத்த கட்சியே சசிகலாவின் ஆதிக்கத்திற்கு வந்துவிடும், கடைசியாக நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ம.க.வுடன் இணைந்து அ.தி.மு.க. வெற்றி கோட்டை நெருங்கியது. அந்த நேரத் தில் பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட முத்தலாக் மசோதாவால் அ.தி.மு.க.வுக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஒன்றுதிரண்டு வாக்களித்ததால் நூலிழையில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை பறி கொடுத்தது. எனவே இ.பி.எஸ். தலை மையிலான அ.தி.மு.க. முன்பு, ஜெ. தலைமையிலான அ.தி.மு.க.வைப் போல வலுவாகவே உள்ளது. இந்நிலையில் சசிகலா வந்தால் குழப்பம்தான் ஏற்படும். அவர் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் அவர் எப்படி செயல்படுவார்? அவரை பா.ஜ.க. ஏற்றுக்கொண்டு வழிநடத்தினால் அவருக்கு என்னென்ன தடைகள் விதிக்கப்படும், ஆட்சி அதிகாரத்தில் அவர் தலையிடுவாரா? இல்லை கட்சியோடு ஒதுங்கிப்போவாரா? என ஏகப்பட்ட கேள்விகள் எடப்பாடிக்கு இருந்தது.

 

அத்துடன் ஓ.பி.எஸ். தரப்பு சசிகலாவுடன் ரகசியமாக இணைந்து செயல்படுகிறது. சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைக்கப் பட்டால் அவர் எடப்பாடிக்கு எதிரான சக்தியாக மாறுவாரா? அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என களம்காண சகிகலா அனுமதிப்பாரா? என்றும் எடப்பாடிக்கு சந்தேகங்கள் இருந்தன. எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சரான கே.சி.வீரமணி, சசிகலா என்ற பேச்சுக்கே அ.தி.மு.க.வில் இடமில்லை என வெளிப்படையாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதே நாளில் கோவையில் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்றிருந்த வேலுமணி, திடீரென கோவை ஏர்போர்ட்டுக்கு விரைந்தார். நாமக்கல் மாவட்டத்தில் தனது சொந்த ஊரில் உள்ள அமைச்சர் தங்கமணியும் அவசரமாக புறப்பட்டு கோவை விமான நிலையத்திற்கு விரைந்து வந்தார்.

 

இருவரும் கோவையில் இருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு செல்லும் விமானத்தில் ஏறினார்கள். கொச்சினில் இருந்து டெல்லிக்கு ரகசியமாக பயணம் செய்தார்கள். இருவரும் பியூஷ் கோயலை சந்தித்து பேசினார்கள். அங்கிருந்து 26ம் ஆம் தேதி மாலை சென்னை வந்து சேர்ந்தார்கள். சென்னைக்கு வந்தவுடன் எடப்பாடியை சந்தித்தார்கள்.

 

நள்ளிரவு வரை டெல்லியில் நடந்த விவாதங்கள் குறித்து அலசப்பட்டன. அத்துடன் செயற்குழுவிலும் அடுத்து நடக்கும் பொதுக்குழுவிலும் என்ன நிலையை எடுப்பது என்பது பற்றி காரசாரமான விவாதங்கள் நடைப்பெற்றது என அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

புதிய அவைத் தலைவராக பொன்னையனை எடப்பாடி முன்னிறுத்துகிறார். ஓ.பி.எஸ். பண்ருட்டி ராமச்சந்திரனை கொண்டுவர விரும்புகிறார் என செயற்குழுவில் நடக்கப்போகும் விவாதத்தை பற்றி சொல்கிறது அ.தி.மு.க. வட்டாரம். இதுபற்றி பேசும் மன்னார்குடி வட்டாரங்கள், செயற்குழு பொதுக்குழு இவற்றில் எடப்பாடி என்ன செய்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் ஒரு கை பார்க்காமல் விடமாட்டோம் என்கிறார்கள். அதேபோல் எடப்பாடி தரப்பினரும், சசிகலாவை கட்சிக்குள் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என வெளிப்படையாகவே பேசுகிறார்கள். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மோதலைவிட, சசிகலா, எடப்பாடி மோதல் மிக வலுவாக நடைபெறும் என்று அறிகுறிகள் இப்பொழுதே தெரிய ஆரம்பித்துவிட்டன.

 

 

Next Story

‘சுகர் வருவதற்காகவே ஸ்வீட் சாப்பிடுகிறார்” - கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Kejriwal accused by the enforcement department to eats sweets just to get sugar

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதாடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அவர் அளித்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு இன்று (18-04-24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார்.

Next Story

உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராம்தேவ்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Ramdev apologized publicly to the Supreme Court!

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (16.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.