Skip to main content

அக்.,7ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகுமா? தள்ளிப்போகுமா?  

Published on 05/10/2020 | Edited on 05/10/2020

 

EPS-OPS

 

அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளர் யார் எனக் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. சுமார் 5 மணி நேரம் நடந்த கூட்டத்திற்குப் பின்னர் அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கே.பி.முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். இருவருமே முதலமைச்சர் வேட்பாளராக விரும்புவதால் அ.தி.மு.க அமைச்சர்கள் மாறி மாறி இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இருவருமே தனித்தனியே ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். 

 

இந்த நிலையில் ஓ.பி.எஸ். தனது டுவிட்டர் பக்கத்தில், ''தமிழக மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க கழகத் தொண்டர்களின் நலனைக் கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!'' எனக் குறிப்பிட்டது மேலும் விவாதத்தை ஏற்படுத்தியது. 

 

இந்தநிலையில் அக்.,7ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகுமா? தள்ளிப்போகுமா? என பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. 

 

pongalur manikandan

 

இதுகுறித்து அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன் கூறுகையில், இது அவர்களுடைய உட்கட்சிப் பிரச்சனையாக இருந்தாலும் பொதுவெளியில் மோதிக்கொள்வதால் அரசு நிர்வாகம் சீர்குலைந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் இவர்கள் மக்கள் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். 

 

அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இல்லை. அதனை ஓ.பன்னீர்செல்வம் விரும்பவும் இல்லை. இதேபோல் எடப்பாடி பழனிசாமியும், முதல்வர் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்று அறிவிப்பதை விரும்பவில்லை. ஓ.பன்னீர்செல்வம் முன்பு தர்மயுத்தம் நடத்தும்போது அவரோடு இருந்தவர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதை வெளிப்படையாக பார்க்க முடிகிறது. 

 

தர்மயுத்தம் நடத்திய காலத்தில் ஆதரவாக இருந்தவர்களில் பாண்டியராஜன் தனது முயற்சியால் அமைச்சரானார். இதேபோல் கே.பி.முனுசாமியும் தனது முயற்சியால் ராஜ்யசபா உறுப்பினரானார். மற்றவர்களை கண்டுகொள்ளாத ஓ.பி.எஸ். தனது மகனை மட்டும் நாடாளுமன்ற உறுப்பினராக்கியது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஒ.பன்னீர்செல்வம் கட்சியினருடன் ஆலோசனை, ட்வீட் போடுவதெல்லாம் ஒரு பரபரப்புக்குத்தானேயொழிய, 7ஆம் தேதி தனது ஆதரவார்களுக்கு கட்சிப் பதவி, கட்சியில் முக்கியத்துவம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டு மூத்த தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனை அவர் கேட்டுக்கொள்வார் எனக் கூறினார்.

 

K. C. Palanisamy

 

முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கூறுகையில், வரும் 7ஆம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாவது சந்தேகம்தான். ஓ.பி.எஸ். கேட்பது வழிகாட்டுதல் குழு. வழிகாட்டுதல் குழு போட வேண்டும் என்பது ஓ.பி.எஸ். சுயநலம். அந்தக் குழு போடக்கூடாது என்பது இ.பி.எஸ். சுயநலம். அந்தக் குழு போடப்பட்டால் தனது ஆதரவாளர்கள் இல்லை என்று இருதரப்பும் சொல்லுவார்கள். பா.ஜ.க தலையிட்டால்தான் இந்தப் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். பா.ஜ.க எப்போது இந்தப் பிரச்சனை முடிய வேண்டும் என்று நினைக்கிறதோ, அப்போதுதான் இந்தப் பிரச்சனை முடியும். அதுவரை இப்படித்தான் இருக்கும். ஓ.பி.எஸ் கட்சியினருடன் ஆலோசனை, ட்வீட் போடுவதெல்லாம் பரபரப்பை ஏற்படுத்துவதற்குத்தான் என்றார். 

 

makkal needhi maiam Murali Appas

 

Ad

 

ம.நீ.ம. முரளி அப்பாஸ் கூறுகையில், இவர்களிடம் செயற்கை ஒற்றுமை ஏற்படும். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வந்ததுபோல ஒரு தோற்றத்தை உருவாக்குவார்கள். அவர்கள் ஒற்றுமையாக இருப்பதற்கான வாய்ப்பே கிடையாது. அ.தி.மு.க இதுவரை ஒற்றுமையாக இருந்தது என்று சொல்லுவதற்கு காரணம் நான்கு வருட ஆட்சிதான். இப்போது யார் பெரியவர் என்ற பிரச்சனை வந்துள்ளது. இதில் பா.ஜ.க பஞ்சாயத்துதான் செய்யும். எப்போதும் தலைவர்களிடம் ஒரு பவர் இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சியைக் கட்டுக்குள் வைக்க முடியும். அப்படிப்பட்ட பவர் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. திறமையாக நான்கு வருட ஆட்சியை நடத்தினார் என்கிறார்கள். அப்படியில்லை. நான்கு வருட ஆட்சி, அது கொடுத்த வருமானம்தான் இவர்களைக் காப்பாற்றி நகர்த்தியது. இந்த தேர்தலில் அவர்களுக்கு பலவீனமாக இருக்கப்போவது அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனைதான் என்றார். 

 

 


 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.