Skip to main content

முதல்வராக கனவு கண்டவர் ஜெயக்குமார்... வாய் திறக்க முடியாத OPS-EPS -எஸ்.எஸ்.சிவசங்கர் கருத்து

Published on 13/08/2020 | Edited on 14/08/2020
admk office

 

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அக்கட்சியின் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளைத் தெரிவித்ததையடுத்து சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம், சி.வி. சண்முகம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

 

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து தலைமைக் கழகம் முறையாக அறிவிக்கும். பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் பாஜக தேர்தலைச் சந்தித்தது. அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக அதன் தலைவர் முருகனே கூறிவிட்டார். ஆதாயம் கிடைப்பதற்காக பாஜகவுக்கு சென்ற துரைசாமி கூறியதற்கு எல்லாம் பதில் சொல்ல அவசியமில்லை. சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அதிமுக நிர்வாகிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

 

இதுகுறித்து நக்கீரன் இணையத்தளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

 

s. s. sivasankar

 

அப்போது அவர், இரண்டு நாட்களாகவே அ.தி.மு.க அமைச்சர்கள் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, கரோனா நிவாரணப் பணி என நினைத்து விட வேண்டாம். மைக் மன்னர்களாக மாறி, யார் முதல்வர் வேட்பாளர் என மைக்கை உடைத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 

விளையாட்டைத் துவக்கி வைத்தவர், பிரபல அமைச்சர் செல்லூர் ராஜு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், யாரோ ஒரு புண்ணியவான் "வரும் தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர்?", எனக் கேட்டுவிட்டார். அண்ணன் செல்லூர் ராஜு, அரசியலமைப்பு வல்லுநர் ஆகிவிட்டார். "வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள்", என புதிய அரசியல் கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

 

உடன் வெகுண்டெழுந்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. "எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர்", என அழுத்தமாக அறிவித்தார். அவர் பாவம், இப்போது தான் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவியை அடித்து, பிடித்துத் திரும்ப வாங்கினார். அதைத் தக்க வைக்க, எடப்பாடி உதவி வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. அவர் அப்படித் தான் சொல்ல வேண்டும்.

 

அடுத்து மைக் முன் வந்தார் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார். "எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் இணைந்து வெற்றியைப் பெறுவார்கள். எடப்பாடி தான் முதல்வர்", என்று அறிவித்தார். அப்புறம் வழக்கம் போல், வத, வதவென பேசிக் கொண்டே போனார். அவருக்கு எடப்பாடி முதல்வராக இருந்தால் தான், 'தான்' மதுரையை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம்.

 

ADMK

 

அடுத்து பதினோரு மணி அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். அவர் அனைவரையும் கண்டித்தார். "யாரும் முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக் கூடாது", என்று அறிவுரை வழங்கினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடிருக்கும் போதே முதல்வராக கனவு கண்டவர் இந்த ஜெயக்குமார். அவர் கனவு அவருக்கு. 

 

கடைசியாக இன்று கே.பி.முனுசாமி மொத்தமாக சீல் வைத்தார். "அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் முதல்வர் வேட்பாளர் குறித்து கவலைப்படவில்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் நிர்வாகிகள் கூடி முடிவெடுப்போம்". இவ்வளவு தான் மேட்டர். அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார் கே.பி.முனுசாமி.

 

வெற்றி பெற்ற பிறகு தானே, முதல்வர் வேட்பாளர் எல்லாம். வெற்றிபெற்றால், பார்த்துக் கொள்ளலாம் என முனுசாமி சொல்லி விட்டார். இதைச் சொல்ல அவர் தான் அத்தாரிட்டி. 

 

EPS-OPS


 
அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. இருவரும் முதல்வர் வேட்பாளர் கணக்கில் இருப்பவர்கள். எனவே இவர்கள் இருவரும் வாயைத் திறக்க முடியாது. 

 

அதனால், மூத்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தான் அத்தாரிட்டி. அவர் முடிவை சொல்லியும் விட்டார்.

 

இவர்கள் எல்லோரும் மைக்கை கண்டால் ஆளுக்கொரு கருத்தைச் சொன்னாலும் டெல்லியிருந்து, "என்ன அங்க சத்தம்", என்ற அதட்டல் வந்தால், "சும்மா பேசிக்கிட்டிருந்தோம் டாடி", என அந்தத் திசை நோக்கி விழுந்து விடுவார்கள், கடந்த காலங்களில் டயர் முன் விழுந்ததைப் போல.

 

கிராமத்தில் சொல்வார்கள், "அறுக்க மாட்டாதவன் இடுப்ப சுத்தி அம்பத்தெட்டு அருவாளாம்". இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.