Skip to main content

ஜெயித்த பிறகு எம்.பி.யை பார்க்கவே முடியவில்லை'

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

தனித் தொகுதியான காஞ்சிபுரம் எம்.பி. தொகுதிக்குள் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளும் தி.மு.க. வசம் உள்ளது. அ.தி.மு.க. ஜெயித்த திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. கோதண்டன் டி.டி.வி. அணிக்கு தாவி, பதவி பறிக்கப்பட்டதால் இடைத்தேர்தலைச் சந்திக்கிறது. 

ஜெயலலிதாவுக்கு ராசியான தொகுதி என ஜோதிடர் குறித்துக் கொடுத்தபடி கடந்த எம்.பி. தேர்தலில் ஒன்றிய சேர்மனாக இருந்த மரகதம் குமரவேலுக்கு சீட் வழங்கப்பட்டது. வழக்கமாக திருவள்ளூரில் பிரச்சாரத்தைத் தொடங்கும் ஜெயலலிதா ஜோதிட ராசிப்படி காஞ்சிபுரத்தில் இருந்து துவங்கினார் அ.தி.மு.க. வேட்பாளர். தன்னை எதிர்த்து நின்ற தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை விட 1,46,866 அதிகம் பெற்று வெற்றி பெற்றார். பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்ட மல்லை சத்யா இரண்டு லட்சம் வாக்குகளுக்குமேல் பெற்று மூன்றாம் இடம் பெற்றார். தனித்து நின்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஸ்வநாதன் முப்பதாயிரம் வாக்குகள் மட்டும் பெற்றார்.

 

mp



"ஜெயித்த பிறகு எம்.பி.யை பார்க்கவே முடியவில்லை' என காஞ்சி எம்.பி. தொகுதி மக்களும் புலம்பும் நிலையில்... மீண்டும் மரகதம் குமரவேலையே நிறுத்தியுள்ளது அ.தி.மு.க. "கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு மீண்டும் போட்டியா' என்று தொகுதி மக்கள் குமுறி வெடிக்கின்றனர். சமீபத்தில் மரகதம் குமரவேல், தன் மகளுக்கு நடத்திய மஞ்சள் நீராட்டு விழாவுக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸை தடபுடலாக வரவழைத்து சில கோடிகளை செலவிட்டு, தன் கஜானா வலிமையைக் காட்டினார். தொடர்ந்து காஞ்சிபுரம் மேற்கு மா.செ. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆதரவில் இந்தமுறை ர.ர.க்களின்  பல எதிர்ப்புகளைத் தாண்டி சீட் வாங்கி தன்பலத்தைக் காட்டியுள்ளார். இருப்பினும் கட்சியில் உள்ளடி வேலைகளுக்குப் பஞ்சமில்லை. டி.டி.வி.யின் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் முட்டுக்காடு முனுசாமிக்கு திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் என மூன்று தொகுதிகளில்  வாக்குகளைப் பிரிக்கும் வலிமை உள்ளது. 

உத்திரமேரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு தொகுதிகளில் மணல் கொள்ளை, டெண்டர்களில் ஊழல், விவசாயிகளின் நலம், நெசவாளர்கள் பிரச்சனைகள், பன்னாட்டு தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பிரச்சினை என எதிலும் கவனம் செலுத்தாத ஆளும் அ.தி.மு.க. அரசுமீது கடும்விரக்தியில் தொகுதிமக்கள் இருக்க... பா.ம.க.வுடனான கூட்டணி பலம் சற்று தூக்கிநிறுத்தும் என்றாலும் அ.தி.மு.க. அளவுக்கு பா.ஜ.க. அரசு மீது உள்ள அதிருப்தியும் மரகதம் குமரவேலுக்கு பெரும் சவால். 
 

kanchipuram



தி.மு.க. வேட்பாளர் செல்வம், கடந்தமுறை நின்று தோற்றதால் அனுதாபம் ஒருபக்கம் இருந்தாலும், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுந்தர் ஆகிய இரு மா.செ.க்களின் கோஷ்டிப்பூசல் இந்தமுறையும் தொடரத்தான் செய்கிறது. குறிப்பாக... காஞ்சிபுரம் நகரம், மதுராந்தகம் நகரம், அச்சிறுபாக்கம் போன்ற பகுதியில்  உ.பி.க்கள் மத்தியில் உள்ள கோஷ்டிகளை சரி செய்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. கணிசமான காங்கிரஸ், இடதுசாரி  வாக்கு வங்கியும்,  காஞ்சிபுரம், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு, திருப்போரூர் பகுதிகளில் சிறுத்தைகளின் வாக்கு வங்கியும், அ.ம.மு.க.வின் எதிர்ப்பலைகளும் தி.மு.க.வுக்கு தோள் கொடுக்கும். கடந்த 2016-ல் ம.ந.கூ. பிரித்த வாக்குகளும் தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும். அ.தி.மு.க.வுக்கோ கடந்தமுறை மரகதம் உட்பட ஒன்பது பெண் வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா சீட்டு கொடுத்தார். ஆனால் இந்தமுறை கஜானா பலத்துடன் மரகதம் குமரவேல் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிருப்தியை பணத்தால் வெல்லலாம் என நினைக்கிறது அ.தி.மு.க. ஆளுங்கட்சி மீதான எதிர்ப்பலையை சாதகமாக்க நினைக்கிறது தி.மு.க.
 

Next Story

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் நடிகர் சரத்குமார் தரிசனம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Actor Sarathkumar Darshan at Vallakottai Murugan Temple

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  உள்ளது. இங்கு தல விருட்சமாக பாதிரி மரம் உள்ளது. இந்த மரத்தின் மலர்களைப் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால நூல்கள் சிறப்பாக தெரிவிக்கின்றன. இது சித்திரை மாதம் மட்டுமே மலரும் தன்மையுடையது. இந்த மரத்தின் அருகில் புராண காலத்தில் முருகப்பெருமான் பகீரத மன்னனுக்கு காட்சியருளி அவனுக்கு மீண்டும் அரசாட்சியை வழங்கியதாக இத்திருக்கோயிலின் தல வரலாறு கூறுகிறது. அதனால் இங்கு வந்து வணங்குவோருக்கு உயர்ந்த பதவிகள், வளமான செல்வங்கள், சொந்த வீடு ஆகியன கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த திருக்கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் சினிமா நடிகர்கள் உள்ளிட்ட கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் வந்து வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டு புகழடைகின்றனர். அந்த வகையில், நேற்று (28-04-24) ஞாயிறு விடுமுறை நாளையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதற்கொண்டே திருக்கோயிலுக்கு வந்து வரிசையில் நின்றனர். காலை 6 மணிக்கு மூல மூர்த்திகளுக்கும் உற்சவருக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கருவறையில் உள்ள மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு பலவித மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

உற்சவர் முருகப்பெருமானும் சிறப்பு அலங்காரத்தில் சஷ்டி மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினார். இதனிடையே, காலையில் நடிகர் சரத்குமார் வருகைதந்து முருகப்பெருமானை பக்தியுடன் வணங்கினார். முருகப்பெருமானுக்கு நடைபெற்ற அபிஷேகத்திலும் கலந்துகொண்டு தரிசித்தார். பின்னர், ஒவ்வொரு சந்நிதியாக சென்று வணங்கினார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம், வஸ்திரம், மாலைகள், முருகன் படம் ஆகியன வழங்கப்பட்டன.

Actor Sarathkumar Darshan at Vallakottai Murugan Temple

விடுமுறை நாளையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டனர். திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம், மோர், குடிநீர் ஆகியவற்றை இணை ஆணையர இரா.வான்மதி, உதவி ஆணையர் பொ.லட்சுமிகாந்த பாரதிதாசன் ஆகியோர் அறிவுரையின் பேரில் திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் வழங்கினார்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.