Skip to main content

தேர்தல் தோல்வி எதிரொலி... அமைச்சர்களிடம் கோபமான எடப்பாடி... எடப்பாடிக்கு உளவுத்துறை கொடுத்த ரகசிய ரிப்போர்ட்!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

உள்ளாட்சி அமைப்புகளின் முதல்கட்ட தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சியையும் தி.மு.க.வுக்கு நம்பிக்கையையும் தந்திருக்கிறது. அப்செட்டான எடப்பாடி, அமைச்சர்கள் பலருக்கும் செம டோஸ் கொடுத்திருக்கிறார்.

மூன்றாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சிகளுக்கு 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தலை நடத்தியது மாநில தேர்தல் ஆணையம். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தவிர மீதியுள்ள 5067 ஒன்றிய கவுன்சிலர்கள், 515 மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட 73,405 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. அதற்கான வாக்குகள் 2-ந்தேதி எண்ணப்பட்டன.
 

admk



அ.தி.மு.க.வுக்கே அதிக வெற்றி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்போடு 10 மணிக்கெல்லாம் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் தலைமைச் செயலகம் வந்திருந்தனர். ஆனால், முடிவுகள் எதிர்பார்த்தமாதிரி வரவில்லை. அதனால் கோட்டையில் இருக்கப் பிடிக்காமல் வீட்டுக்கு கிளம்பிச் சென்றார் எடப்பாடி. வீட்டிலிருந்தபடியே மாவட்ட அமைச்சர்களை தொடர்புகொண்டு எந்தெந்த மாவட்டத்தில் வீக்காக இருந்ததோ அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களை வறுத்தெடுத்தார் எடப்பாடி.

வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முதல்நாள் (ஜனவரி 1) புத்தாண்டு வாழ்த்துகள் சொல்வதற்காக எடப்பாடியின் இல்லத்துக்குச் சென்றார் ஓ.பி.எஸ். இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். அந்த சந்திப்பில் தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என மனம் விட்டுப் பேசியிருக்கிறார்கள்.
 

admk



இதுகுறித்து அ.தி.மு.க.வில் விசாரித்தபோது, "தேர்தல் முடிவுகளைப் பற்றி பேசிய எடப்பாடி, "அதிகபட்சம் 40 சதவீத இடங்களைத்தான் நாம் கைப்பற்றுவோம்' என தகவல் வருகிறது. ஆனா, நம்முடைய அமைச்சர்களோ "80 சதவீதம் ஜெயிப்போம்'னு மார்தட்டிச் சொல்கிறார்கள். எனக்கு நம்பிக்கை இல்லை'' என ஆதங்கப்பட்டிருக்கிறார்.


இதனை ஆமோதித்த ஓ.பி.எஸ்., "எனக்கும் அப்படித்தான் தகவல் வருகிறது. ஆனாலும் அவ்வளவு மோசமாக போய்விடாது. 65 சதவீதம் வெற்றி கிடைக்கும். அப்படியே குறைந்தாலும் 50 சதவீதத்திற்கு குறையாது. நம்பிக்கையாக இருங்கள். குறிப்பிட்டு சொல்லணும்னா ஊராட்சிகளில் அ.தி.மு.க.வை தி.மு.க.வால் வெல்ல முடியாது. கட்சியும் சின்னமும் போட்டியிடுகிற மாவட்டம் மற்றும் ஒன்றிய கவுன்சில்களில் 50 சதவீதம் வெற்றி நமக்கு கிடைக்கும்' என தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடியோ, "கோவை, தேனி, நாமக்கல், புதுக்கோட்டை, நாகை, கரூர் என சில மாவட்டங்கள்தான் ஆறுதலாகத் தெரிகிறது. என்னுடைய சேலம் மாவட்டம்கூட எனக்கு நம்பிக்கையைத் தரவில்லை என சொல்ல, ஏன் கவலைப்படுகிறீர்கள்? கூட்டணி பலமும் அ.தி.மு.க. நிர்வாகிகளின் உழைப்பும் சேலம் உங்களை கைவிடாது' என நம்பிக்கை கொடுத்துவிட்டு கிளம்பிப்போனார் ஓ.பி.எஸ்.


இதனையடுத்து, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ராஜலெட்சுமி, செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும், மாநில நிர்வாகிகளும் எடப்பாடியை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். தங்கமணி, வேலுமணியை தவிர மற்றவர்களிடம், "தேர்தல் முடிவுகள் குறித்து நிறைய நம்பிக்கை கொடுத்திருக்கீங்க. நீங்க சொன்ன மாதிரி முடிவுகள் வரலைன்னா என்னுடைய இன்னொரு முகத்தைப் பார்ப்பீங்க. இனி எந்த ஒரு தேர்தல் வந்தாலும் உங்களுடைய சிபாரிசுகளை ஏற்க போவதில்லை' என எச்சரித்தார் எடப்பாடி. இதனால் அமைச்சர்களும் நிர்வாகிகளும் ஆடிப்போனார்கள்'' என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள்.

இந்த மனநிலையோடு இருந்த எடப்பாடி, பல மாவட்டங்களில் அ.தி.மு.க.வை வீழ்த்தி தி.மு.க. முன்னேறுகிறது என வந்துகொண்டிருந்த தகவல்களால் ஏகத்துக்கும் அதிர்ச்சியடைந்தார். அதேபோல, அமைச்சர்கள் பலருக்கும் தேர்தல் முடிவுகள் கிலியை தந்திருக்கிறது. நம்மிடம் பேசிய அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், "தேர்தலில் கோட்டைவிடும் அமைச்சர்களை பதவியிலிருந்து உடனடியாக நீக்கி அவர்களுக்கு தண்டனை கொடுப்பார் ஜெயலலிதா. அதே அஸ்திரத்தை எடுத்தால்தான் அமைச்சர்கள் திருந்துவார்கள் என எடப்பாடிக்கு உளவுத்துறை யோசனை சொல்லியிருக்கிறது''’ என்கின்றனர்.

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.