Skip to main content

பாஜகவை அதிர வைத்த காங்கிரஸ்... தேர்தல் முடிவு சொல்லும் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் மத்திய ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்கு இரண்டு மாநில சட்டமன்றத் தேர்தல் என்பது பரிதவிப்பையே ஏற்படுத்தியிருக்கிறது. ஹரியானா, மகாராஷ்டிரா இரு மாநில சட்டமன்றத் தேர்தலுடன், பீகார், குஜராத், அஸ்ஸாம், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், கேரளா, சிக்கிம், ராஜஸ்தான், அருணாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஒரிஸா என பல மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்களும், இவற்றுடன் இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்தே தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள்தான் பா.ஜ.க.வை அதிர வைத்தது. அதிலும் குறிப்பாக, ஹரியானா.
 

bjp



2014-ஆம் ஆண்டுக்கு முன் அந்த மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை வெறும் நான்கே நான்கு. அதன்பின், 47 சீட்டுகள் வரை வென்று ஆச்சரியப்படுத்தியது. காங்கிரஸ் 25 சீட்டுகள், ஓம்பிரகாஷ் சவுதாலாவின் லோக்தளம் கட்சி 12 சீட்டுகள் பெற்றது. ஹரியானாவில் பெரும்பான்மை சாதியான ஜாட் சாதியைச் சேராதவரான, குஜ்ஜார் பிரிவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மனோகர்லால் கட்டார் முதல்வரானார். அவர் பதவியேற்றவுடன் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் (காங்கிரஸ்) பூபிந்தர்சிங் ஹுடா ஆகியோர் மீது நிலமோசடி வழக்கைத் தொடர்ந்தார். நெருக்கடிகளால் காங்கிரஸ் ரொம்பவே திணறியது.

 

election



டெல்லிக்குப் பக்கத்தில் உள்ள அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான ஹரியானாவில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கடந்த முறை 47 சீட்டை பெற்றிருந்த பா.ஜ.க., மெஜாரிட்டியைப் பெற முடியாமல் 40 சீட்டுகளைப் பிடிப்பதற்கே பெரும்பாடுபட்டது. கடந்த முறை 25 சீட்டுகள் பெற்றிருந்த காங்கிரஸ், இம்முறை 30 என்ற எண்ணிக்கையை நெருங்கியது. இம்முறை ஓம்பிரகாஷ் சவுதாலாவின் மகன் துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி. என்கிற கட்சி 12 இடங்களிலும், சுயேட்சைகள் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.

 

result



காங்கிரசும் மற்றவர்களும் வெற்றி பெற்ற தொகுதிகள் அனைத்தும் குர்கான், பரிதாபாத், சோனா மற்றும் பஞ்சாப் மாகாண எல்லைப்புற பகுதிகளில் அமைந்துள்ளன. இவையெல்லாம் மாருதி உட்பட பல பெரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி. ஒரு சமயத்தில் குர்கான் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து 6 லட்சம் பேர் வெளியே வருவார்கள். தற்போது, இந்தப் பகுதி முழுவதும் மோடி அரசின் பொருளாதார கொள்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாருதி தொழிற்சாலை உற்பத்தியை குறைத்ததோடு பல உபரி தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவது இந்தப் பகுதியை மிகக் கடுமையாகப் பாதித்தது.

அமெரிக்காவில் பிசினஸ் மேனேஜ் மென்ட் படித்துவிட்டு அரசியலுக்கு வந்த துஷ்யந்த் சவுதாலா, மென்பொருள் கம்பெனிகள் நிறைந்த இந்தப் பகுதியில் தொழிலாளர்களைத் திரட்டினார். அவருடைய பேரணிக்கு பத்து லட்சம் பேர் திரண்டனர். இந்தியாவே ஆச்சரியத்துடன் அவரை திரும்பிப் பார்த்தது. துஷ்யந்தும் ஹரியானாவில் பெரும்பான்மை சாதியான ஜாட் சாதியைச் சேர்ந்த காங்கிரசுடன் சேர்ந்து ஏற்கனவே தொழிற்சாலை மூடல், வேலையின்மையால் வெந்து வெதும்பிய ஹரியானா மக்களை பா.ஜ.க.விற்கு எதிராக திருப்பிவிட்டதுதான் இந்த தேர்தல் முடிவுக்கு காரணம். இது அருகிலுள்ள மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தல்களிலும் பா.ஜ.க. வுக்கு சவாலாகும் என்கிறார் டெல்லி பத்திரிகையாளரும் தெஹல்காவின் முன்னாள் ஆசிரியருமான மேத்யூ சாமுவேல்.


கவர்னரைப் பயன்படுத்தி சுயேட்சைகளை விலைக்கு வாங்கி குதிரைபேரம் நடத்திதான் ஹரியானாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியும். அப்படி ஏதாவது செய்தால் அது அடுத்த ஆண்டு நடக்கும் டெல்லி, பீகார் மாநிலங்களின் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள். பீகார் மாநிலத்தில் இப்போது 5 சட்டமன்றங்களுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் பாராளுமன்றத்தில் நரேந்திர மோடியை கடுமையாக எதிர்க்கும் இசுலாமிய கட்சியின் அசாதுதின் ஓவைசியின் வேட்பாளரான கம்ரய் ஹுடா, பா.ஜ.க.வின் ஸ்வீட்டியை கிஷன்கஞ்ச் என்கிற கிருஷ்ணர் பெயரில் அமைந்த தொகுதியின் இடைத்தேர்தலில் தோற்கடித்துள்ளார். அதேபோல் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதள் மற்ற தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.


பஞ்சாபில் தேர்தல் நடைபெற்ற மூன்றில், காங்கிரஸ் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. கேரளாவில் 3 தொகுதிகளில் கம்யூனிஸ்ட்டுகளும் 2 தொகுதிகளில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது. ஒரிசாவில் பிஜு ஜனதாதளம், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வெற்றிபெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை இன்னமும் நீடிப்பதால் உத்திரப்பிரதேசத்தில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது என்றாலும் உ.பி.யில் முலாயமின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி யும் கடும் போட்டியை பா.ஜ.க.விற்கு கொடுத்துள்ளது. அசாம், ஹிமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசில் கோஷ்டிச்சண்டை மிகக்கடுமையாக இருந்தது. அங்கு பிரிதிவிராஜ் சவுகான், அசோக் சவான் உட்பட நான்குபேர் முதல்வர் வேட்பாளர்களாக விரும்பினர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, முதல்வர் வேட்பாளர் என காங்கிரஸ் முன்னிறுத்தியிருந்தால் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கும். பா.ஜ.க பட்னாவிஸ் அரசு மீண்டும் அமைந்தாலும், கடந்த சட்டமன்றத்தில் 217 ஆக இருந்த பா.ஜ.க.-சிவசேனா கூட்டணியின் பலம் 56 சீட்டுகள் குறைந்து 161 ஆக சுருங்கியுள்ளது. கடந்தமுறை 56 ஆக இருந்த காங்கிரஸின் கூட்டணிப் பலம் 102 ஆக உயர்ந்துள்ளது. ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய 2 மாநிலங்கள் தவிர மொத்தம் 51 சட்ட மன்றத்திலும் 2 எம்.பி. தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசுக்கு தலைமை (தல) இல்லாத நிலையிலும், பா.ஜ.க.வைப் பதற வைக்கும் வகையில், மக்களின் தீர்ப்பு அமைந்துள்ளது.

 

 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது