Skip to main content

அண்ணா, பெரியார் குறித்து பேச்சு; இவர்களை தூண்டிவிடுவது யார்? - வழக்கறிஞர் பாலு விளக்கம்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

 Advocate V Balu | Anna | Periyar | Annamalai | H Raja | BJP

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் வே.பாலு  நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அண்ணா குறித்தான விவகாரத்தில் அ.தி.மு.க. அமைதியாக சென்றதற்கு அண்ணாமலை சொன்ன விஜிலன்ஸ் இருக்கிறது என்றதும் காரணம். சமீபத்தில், பாஜகவினர் சிலர் உதயநிதி கருத்திற்கு நாக்கை அறுக்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருந்தனர். அதற்கு, அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது, நான் அண்ணாமலையை பாராட்டினேன். ஆனால், மீண்டும் சில நாட்களிலே வேறொரு பிரச்சனையை அவர் கிளப்பியுள்ளார். சனாதன சர்ச்சையில் கூட உதயநிதி கூறாத ஒன்றை வைத்து மோடியும், அமித்ஷா போன்றோர் விமர்சித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக வருகிற தேர்தலில் சனாதனத்தை மையப்படுத்தி தான் எதிர்கொள்ளவிருகிறார்கள். சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் ஆதி சங்கரர் அவர்களுக்கு நினைவிடம் கட்டுவதற்கு, செய்தித் தாளில் எட்டு பக்கம் விளம்பரம் கொடுத்திருந்தனர். அதில், "சனாதனத்தை காப்போம் " எனவும் குறிப்பிட்டிருந்தனர். அண்ணாமலை இந்த பாணியில் பேசுவதற்கு காரணமே சுப்ரமணிய சாமி போன்றோரின் தொடக்கம் தான். 

 

இவ்வளவு, ஏன் இதே சுப்ரமணிய சாமி, ரங்கராஜன் நரசிம்மன் பாஜகவை சில நேரங்களில் விமர்சித்தனர். அதற்கெல்லாம், அண்ணாமலை மண்புழு அளவிற்கு கூட எதிர்வினையாற்றவில்லை. எனவே, இதனையெல்லாம் பற்றி பேசாத அண்ணாமலை, ஏன் தேவரை தற்போது பேசுகிறார். இதற்கு முக்கிய காரணம், தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான சாதிகளை தன்வயப்படுத்த திட்டமிடுகிறார்கள். இதற்கு முன் ஜெயலலிதாவை கூட தேவரின பெண்ணாக பாவித்த விசயங்களும் நடந்துள்ளது.  

 

முத்துராமலிங்கத் தேவர் போன்றவரை மேடையில் வைத்து "அவர் அண்ணாவிற்கு எதிராக பேசிவிட்டார்" என சொல்கிறார்கள். அன்று நடந்த அந்த விழாவில் அண்ணாவின் கருத்தும் முத்துராமலிங்க தேவரின் கருத்தும் சற்று வேறுபட்டவை. எனவே, பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு அந்த கூட்டம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதனை விளக்கி தற்போது தமிழ் ஹிந்து பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டது. ஏன், இரு திராவிடக் கட்சிகளிலும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களை கணிசமாக இடம்பெற வைத்துள்ளது. மேலும், அந்தப் பிரிவினர் இரண்டறக் கலந்து இரு கட்சிகளும் செயல்பட்டு வருகிறார்கள். இதில், அண்ணாமலைக்கு என்ன பிரச்சனை என தெரியவில்லை. 

 

மேலும், அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களை குறித்து பேசியதால் இன்றைய தலைமுறைகள் அவர்களைப் பற்றி படிப்பதற்கு எளிய வழியை அண்ணாமலை உருவாக்கிவிட்டார். அண்ணாதுரை என்பவர் தி.க.வில், இருந்து தி.மு.கவைத் தொடங்கினார். அவர் வாழ்நாளில் பல கருத்துகளையும் விமர்சனங்களையும் வைத்து வந்துள்ளார். கம்ப ராமாயணத்தை விமர்சித்து "கம்பரசம்" எனவும் புத்தகம் வெளியிட்டார். எனவே, இதனை வைத்து அந்த காலத்தில் எதிர்க்கருத்து கொண்ட மக்கள் இருந்ததை நாம் அறியலாம். ஆனால், இன்றைக்கு பா.ஜ.க. கலவரத்தைத் தூண்டவே எதிர்பார்க்கிறது. 

 

சமீபத்தில் கூட மணிப்பூரில் ஒரு ராணுவ வீரர் சுடப்பட்டார். இன்று வரை அங்கு கலவரம் முடிவிற்கு வரவில்லை. அதனைக் குறித்து அண்ணாமலை ஒருபோதும் பேசுவதில்லை. மாறாக, தினம் தினம் சனாதனம், உதயநிதி என பேசி பக்குவமில்லை என்பதை நிரூபிக்கிறார். இதற்கு காரணம் ,"மூன்று சதவிகித ஆட்கள் சவுகரியமாக இருக்க. 97% சதவித மக்கள் சண்டையிட்டுக் கொள்ள" இது போன்று நடந்துகொள்கிறார்கள். அண்ணாமலை ஒரு போதும் அவர்களின் தலைவர்களைப் பற்றிப் பேசுவதில்லை. தொடர்ந்து, காமராஜர்,கக்கன், தேவர், அடுத்து பெரியார் என்று தான் பேசுகிறார்கள். இறுதியாக சொல்ல வருவது, "அண்ணாமலை தான் தலைவராகி விட்டோம் என்ற தலைக்கனத்தில்" வந்த கருத்து தான் இது.

 

அண்ணாமலை சில நிர்ப்பந்தங்கள் அடிப்படையில் தான் இது போன்று பேசிவருகிறார். காரணம் எஸ்.வீ.சேகர், எச்.ராஜா போன்றோர்களின் காய் நகர்த்தலாக இருக்கலாம். ஏனென்றால், அண்ணாமலையை தமிழ் மக்களுக்கு எதிரியாக மாற்றவும் திட்டம் உள்ளது. அண்ணாமலையும் பெரியார் குறித்து இழிவாக இதுவரை பேசியதில்லை. சென்ற வாரம் எச்.ராஜா பெரியாரை அவன் இவன் என்றெல்லாம் பேசியுள்ளார். இளம் தலைமுறைக்கு நான் சொல்ல வருவது, "உலகின் பல தலைவர்கள் தங்கள் சுயசரிதையில், தாங்கள் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல தான் பெரியாரும் செய்தார். எனவே, இதற்கெல்லாம் ஒரு மன தைரியம் வேண்டும்" என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

 

இதெல்லாம் நேர்மையின், அறத்தின் பால் சார்ந்தது. தான் செய்த அனைத்து நல்லது கெட்டதுகளையும் ஒருவர் பதிவிட்டால் அதனை இழிவு படுத்துகிறீர்கள். இதுவே, கண்ணதாசன் செய்தால் அவரை கவிஞர் என்கிறார்கள். இவர்களைப் போன்று பல எழுத்தாளர்கள் தாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளனர். அது ஒரு மனித மரபு என்பதை உணர வேண்டும். இதெல்லாம் தெரியாமல் பெரியாரை மிருகம் என சொல்பவர்கள்,"நிச்சயம் மிருகத்திற்கு பிறந்தவர்களாகத் தான்" இருப்பார்கள். நான் சொல்கிறேன்,“இது போன்று சில்லூண்டி மனிதர்களை கோவிலினுள் அழைத்துச் சென்றது தான் பெரியார் செய்த மிகப்பெரிய தவறு”. அதே சமயம் பெரியார் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாடுபட்டவர். அவரைக் குறித்து பேசுவதுதான் என்னை கோபமடைய செய்கிறது. அதேசமயம் இவர்கள் ஏன் தமிழ்நாட்டை பற்றி மட்டும் பேசுகிறார்கள். பிற மாநிலங்களை கவனிக்கவில்லை? இதற்கு காரணம் அவர்கள் நம் தமிழ்நாட்டு மக்களின் சித்தாந்தங்களை உடைக்கவே திட்டமிடுகிறார்கள். இந்த வேலையை செய்யத்தான் அண்ணாமலையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். 

 

அண்ணாமலை, தமிழிசை போன்றவர்கள் பாஜகவில் சேர்ந்து தங்களின் அதிகாரத்தை பயன்படுத்த சொந்த மக்களுக்கு எதிராக செயல்படுவதில் எனக்கு மன வருத்தம் தான். இன்றைக்கு உதயநிதி பேசியது இந்தியா முழுவதும் பேசுபொருளாகி அனைவரும் அது குறித்து வாசிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, இதெல்லாம் ஆரோக்கியமான விவாதமாக இருந்தால் நல்லது. அதேபோன்று அண்ணாமலையிடம் கொஞ்சம் பக்குவம், நாகரீகம் , அறம், அன்பு, அரவணைப்பு, பணிவு, போன்றவை வேண்டும். இவையெல்லாம் ஒன்றிணைந்தால் தான் துணிவிற்கு அர்த்தம் இருக்கும். இதனால், அண்ணாமலை இது போன்று பிரச்சனைகளில் சிக்க வேண்டாம். இறுதியாக, “எத்தனை முறை தமிழர்களை சீண்டிப் பார்த்தாலும் அவர்களின் பண்பை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது". ஏனென்றால் தமிழன் என்பது ஒரு தத்துவம்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் நடத்தை விதி; மூடப்பட்ட பெரியார் சிலை அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் திறப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 closed Periyar statue will reopen in the next half hour

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அனைத்து கட்சிகளுமே அதனதன் கூட்டணிகளை உறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதிலும் மிக தீவிரம் காட்டி வந்தனர். அதன்படி, தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளையும், தொகுதிப் பங்கீடுகளையும் உறுதி செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கூட்டணியை உறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதன் பின்னர், முந்தைய தேர்தல்களில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே தேர்தல் தொடர்பான பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், வளைவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்படுவது வழக்கம். இவ்வாறு மூடப்படும் சிலைகளில் பெரியார் சிலைகள் அடங்காது. இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, நீதிபதி வி.பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.

அதன் பின்னர், பெரியார் சிலைகள் தமிழகத்தில் மூடப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தலைக் காரணம் காட்டி, திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலையை போலீசார் மூடியுள்ளனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பெரியார் அமைப்பினர், நீதிமன்றமே பெரியார் சிலைகளை மூடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கும் போது, நீங்கள் எப்படி மூடலாம் எனக் கொந்தளித்துள்ளனர். உடனே இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, தலைமைக் கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை உள்ளிட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் முயற்சியில் உடனடியாக மூடப்பட்ட பெரியார் சிலை உடனடியாகத் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி எனக் கூறி திண்டுக்கல்லில் மூடப்பட்ட பெரியார் சிலை, மூடிய அரை மணி நேரத்திலேயே மறுபடியும் திறக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.