Skip to main content

“அதிமுக நடத்தியது எழுச்சி மாநாடு அல்ல...” - வழக்கறிஞர் தமிழ்வேந்தன்

Published on 21/08/2023 | Edited on 22/08/2023

 

EPS influence is less than TTV Dhinakaran says Advocate Tamilvendan

 

அதிமுக மாநாடு மற்றும் தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து வழக்கறிஞர் தமிழ்வேந்தனிடம் பேட்டி கண்டோம். அதில் பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

 

“சமீபத்தில் வெளிவந்த டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகத் தான் இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. வீக்காக இருக்கும் தொகுதிகளை அடையாளம் கண்டு வேலை செய்தால் நிச்சயம் ஆட்சிக்கு வரலாம். அதிமுக நடத்திய மாநாடு என்பது எழுச்சி மாநாடு அல்ல. எடப்பாடி பழனிசாமி தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக நடத்திய மாநாடு. சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை விட தனக்கு தான் தென் மாவட்டங்களில் செல்வாக்கு இருக்கிறது என்று அவர் காட்ட நினைக்கிறார். எட்டு தேர்தல்களில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமியால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் இணைப்பை எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்கவில்லை. அது அவருக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 

 

வாக்கைப் பிரிக்கும் வேலையைத்தான் சீமான் செய்து வருகிறார். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று கூறினார். ஈழம் மலர்ந்ததா? திமுகவை மட்டுமே அவர் டார்கெட் செய்கிறார். இந்த ஆட்சியில் நடக்கும் சிறு சிறு தவறுகளையும் திமுக தொடர்ந்து சரிசெய்து வருவது பாராட்டத்தக்கது. டிடிவி தினகரனை விட எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு குறைவு.  தமிழ்நாட்டில் எங்கு கரண்ட் போனாலும் கொடநாட்டில் கரண்ட் போகாது. அது ஜெயலலிதாவின் ஒரு அலுவலகமாகவே இருந்தது. அப்படிப்பட்ட ஒரு இடத்தில் தான் கொலை, கொள்ளை நடந்திருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில் நரேந்திர மோடியின் வளர்ப்பு தான் எடப்பாடி பழனிசாமி. கொடநாடு வழக்கில் விரைவில் முடிவு வரும். 

 

ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்று அண்ணாமலை சொன்னார். அவரை எதிர்த்துப் பேசக்கூட அதிமுகவினருக்கு தைரியம் இல்லை. இவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்? அண்ணாமலை பேசும் அளவுக்கு அதிமுக இன்று வீக்காக இருக்கிறது.  பிரிவினை பேசி வருவது பாஜக தான். இந்தியா கூட்டணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒருங்கிணைத்ததால் பாஜகவுக்கு திமுக மீது அச்சம் ஏற்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் தொடர்ந்து திமுக பற்றி பேசி வருகிறார். சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு அவமானம் நிகழ்த்தப்பட்டது என்று நிர்மலா சீதாராமன் பேசியது பொய். அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. அப்போது அதிமுகவால் நடத்தப்பட்ட டிராமா அது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளுக்கு பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் தான் காரணம். அதுபற்றி பாஜக பேசவில்லை. ஆசிஃபா படுகொலை, மணிப்பூர் கலவரம் ஆகிய எதற்கும் மோடி வாய் திறக்கவில்லை. இவர்கள் செய்வதெல்லாம் அயோக்கியத்தனம்” என்றார்.

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.