Skip to main content

“கார்ப்பரேட் பிரதமராக மோடி செயல்படுகிறார்” -  வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் குற்றச்சாட்டு

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Advocate RS Tamil Vendhan Interview

 

பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை வழக்கறிஞர் தமிழ்வேந்தன் பகிர்ந்துகொள்கிறார்

 

உதயநிதியின் தலைக்கு விலை வைத்துள்ளார் ஒரு அயோத்தி சாமியார். ரவுடி பாகவதர் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. இதுபோன்ற போலி சாமியார்களைத் தான் நாம் எதிர்க்கிறோம். ரத்தம் குடிக்க நினைப்பதுதான் ஆர்எஸ்எஸ் கொள்கை. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர்களுடைய அடிப்படைக் கொள்கையே இதுதான். தன்னுடைய கருத்தில் உதயநிதி உறுதியாக இருக்கிறார். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். சாமியார் தலையைக் கொண்டுவந்தால் 100 கோடி தருகிறேன் என்கிறார் சீமான். அவர் வீட்டில் ஐடி ரெய்டு நடத்த வேண்டும். 

 

சீமான் போன்றவர்களின் கரிசனம் திமுகவுக்கு தேவையில்லை. உளறுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும். அண்ணாமலை கூட சீமானைக் கலாய்க்கிறார். சனாதனத்தை மையப்படுத்தி தேர்தலை சந்தித்தால் பாஜக நோட்டாவுக்கு கீழே சென்றுவிடும். பார்ப்பனியம் எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும். நாங்கள் பார்ப்பனர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சக மனிதர்களை நாங்கள் நேசிக்கிறோம். நாங்கள் பார்ப்பனியத்துக்கு எதிரானவர்கள். 

 

உதயநிதிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்த நாட்டின் பிரதமர் பேசுகிறார். உதயநிதி மீது இந்தியா முழுவதும் வழக்கு போட வேண்டும் என்கிறார்கள். ஹெச்.ராஜா பேசியதற்கெல்லாம் உலகம் முழுவதும் வழக்கு போட வேண்டும். இந்தியா கூட்டணி பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை ஒருங்கிணைத்தது தமிழ்நாடு முதலமைச்சர் தான். இந்தக் கூட்டணி இணைந்தது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை உடைப்பதற்குத் தான் உதயநிதி பேசியதை கையிலெடுத்தார்கள். கலைஞரின் பேரன் அவர். அவரைக் கண்டு இவர்கள் பயந்து தான் ஆக வேண்டும். 

 

பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு தவறான நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசு தான் பாஜக அரசு. இப்போது இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்கின்றனர். இதைத்தான் இவர்கள் புதிய இந்தியா என்று சொன்னார்கள் போல. இந்தியாவின் பெயரை மாற்றினால் இப்போதிருக்கும் சான்றிதழ்களை என்ன செய்வது? இதில் என்ன விளையாட்டு? மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அவர்கள் எதையும் செய்யவில்லை. முழுக்க முழுக்க ஒரு கார்ப்பரேட் பிரதமராக நரேந்திர மோடி செயல்படுகிறார். மோடி பாய்ச்சிய விஷத்தை அகற்றுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று நிர்மலா சீதாராமனின் கணவர் கூறுகிறார். அந்த நிலையில் தான் இருக்கிறது இவர்களுடைய ஆட்சி.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்கில் காணலாம்...

 

 

 

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.