Skip to main content

பாஜக என்ன செய்திருக்க வேண்டும் - திருச்சி சூர்யா விவகாரம் குறித்து வழக்கறிஞர் பாலு

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

Advocate Balu spoke about BJP Trichy Surya

 

தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யாவிற்கும் சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரணுக்கும் இடையேயான தொலைப்பேசி உரையாடல் மூன்று நாட்களுக்கு முன்பு வெளியாகி தமிழக அரசியலிலும், பாஜகவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாஜகவின் ஒழுங்கு குழு முன்பு இருவரும் ஆஜராகி தங்களின் விளக்கத்தைத் தெரிவித்தனர். பின்பு இருவரும் ஒன்றாக நேற்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்து இருவரும் சமாதானமாகச் செல்வதாகத் தெரிவித்தனர். அதேசமயம், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி சூர்யாவை ஆறு மாத காலம் கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். பாஜக நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலுவை நாம் நேற்று காலை சந்தித்து இது தொடர்பான கேள்விகளை முன்வைத்தோம். அவர் அளித்த பேட்டியின் சுருக்க வடிவம்.

 

பாஜகவில் பெண்கள் மீதான இணைய மற்றும் பாலியல் ரீதியான தாக்குதல்களை அரசியல் ரீதியாகவும் மற்றும் சட்டரீதியாகவும் எவ்வாறு பார்க்கிறீர்கள் ?


சமீபத்தில் காசியில் நடைபெற்ற காவி (தமிழ்) சங்கமம் நிகழ்ச்சியில் பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும், பெண்மை வாழ்க என்றும் கூறிவிட்டு பெண்கள் அரசியலுக்கு வரும்போது சனாதனத்தின் மீதும் மனுதர்மத்தின் மீதும் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ள கட்சி அதன் அடிப்படையில் இயங்கும் நிலையில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் இது. பாஜக ஆர்எஸ்எஸ் கொள்கையான சனாதனத்தை நிலை நிறுத்தவும் மனுதர்ம ஆட்சியைப் பரப்பவும் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார்.

 

பல நாடுகளில் பெண்கள் மீதான மதிப்பீடு குறைவாக உள்ளது. சனாதன  மனுதர்ம முறைப்படி பெண்களை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைத்து, போகப் பொருளாக வைத்திருந்தனர். இருநூறு மற்றும் முந்நூறு ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தனிச் சமூக பெண்கள் யாரும் படிக்கவில்லை. பெண் விடுதலைக்கு கடைசி வரைக்கும் போராடியவர் பெரியார். பெண்களை, சம்பிரதாயங்களை உடைத்து வெளியே வரவும் படிக்கவும் ஆங்கிலம் பேசவும் வலியுறுத்தினார். முதன் முதலாக பெண்கள் படித்து பேங்க் போன்ற வேலைகளில் பணியாற்றினர். ஆனால், இவர்கள் அப்படி வேலைக்குச் சென்ற பெண்களை எல்லாம் மிகவும் கடுமையாக விமர்சித்து எழுதினர். 

 

அரசியலில் தங்களின் இருப்பை காட்டிக்கொள்ள திருச்சி சூர்யாவின் பேச்சு மிகவும் அருவருக்கத்தக்க, ஆபாசமான வகையில் பேசியிருக்கிறார். அதனைத் தமிழ்நாட்டில் கேட்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதுவும் சிறுபான்மையின பெண்ணின் சமூகத்தைப் பற்றியும், நடத்தை பற்றியும் மிக மோசமான வார்த்தைகளில் பேசியுள்ளார். இதனை சட்டப்படியாக பார்த்தால் அந்தப் பெண்ணிற்கு நிகழ்த்தப்பட்டது ஊடக தாக்குதல், கொலை மிரட்டல், பெண் தொடர்பான வன்கொடுமை என இவர் மீது மூன்று முதல் நான்கு வழக்குகள் வரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்தியத் தண்டனை சட்டத்தின் படியும் இந்தியத் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படியும் கட்சித் தலைமை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

இந்த சம்பவத்தில் திராவிட சிந்தனை கொண்ட பெண்ணுரிமை பேசுகிற சகோதரர்கள் இது பற்றி பேசியுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை முதலில் பெண்ணுரிமையே. அதன்பிறகே அரசியல். அதன் காரணமாகவே அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காகக் குரல் கொடுத்தனர். இது நாம் பெருமை கொள்ளவேண்டிய விஷயம். 

 

பாஜக பிரமுகர்கள் இதைப்பற்றி எதுவும் பேசாதது பற்றி...


பாஜகவிற்கு வெளில இருந்து நிறையப் பேர் திராவிட சிந்தனை கொண்டவர்கள் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் பெரியாரிய சிந்தனைகள் கொண்டவர்கள் இதுபற்றி பேசும்போது பாஜகவிற்குள்ளேயே இருக்கும் மதுவந்தி, வானதி சீனிவாசன், எஸ்.வீ.சேகர் போன்றோர் எதுவும் பேசாதது ஏன் என்று தெரியவில்லை. அவர்களின் குரல் எங்கே போனது. இவர்கள் எல்லோரும் அரசியலுக்குள் அரசியல் செய்பவர்கள். உங்களை நம்பி வந்த சிறுபான்மை பெண்ணிற்கும் அங்கே மரியாதை இல்லை. 

 

காலம் காலமாகப் பெண்கள் மீது நடந்து வரும் அடக்குமுறைகள் இனியும் தொடர்ந்து வருமா?


உலகம் முழுவதிலும் பெண்கள் மீதான அடக்குமுறைகள் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் பெண்கள் நிறைய இடங்களில் கொடியை நாட்டியுள்ளனர். அதேவேளையில் சனாதனம், மனுதர்மம் என்று சொல்லி பிற்போக்குத்தனத்தையும் திணிக்கின்றனர். பிராமண சமுதாயத்தில் பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் அடக்குமுறைகள் பின்பற்றப்படுகிறது. பெண்கள் மீது சூரிய வெளிச்சம் கூட படாமல் வீட்டில் அடக்குமுறைகள் நடக்கிறது. 

 

எழுத்தறிவு மிக்க கேரளாவில் நம்பூதிரி இன பெண்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பாக தேவகி நிலயம்கொடே என்பவர் தனது எழுபத்து ஐந்தாவது வயதில் ‘பிபோர் தி பிரேக் ஆப் டவன் சீக்ரெட்ஸ் ஆப் தி நம்பூதிரி உமன்’ என்ற நூலில் கூறியுள்ளார். தனது சமூகத்தில் தனக்கு நடந்த கொடுமைகளை எழுதியுள்ளார். இதே போன்று பெண்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பாக நிறைய நூல்கள் வெளி வந்துள்ளன. தன்னுடைய உணவைக் கூட சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளனர். இது சனாதனம் மனுதர்ம ஆட்சி என்று கூறுகின்றனர். 

 

 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது