Skip to main content

பாஜக என்ன செய்திருக்க வேண்டும் - திருச்சி சூர்யா விவகாரம் குறித்து வழக்கறிஞர் பாலு

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

Advocate Balu spoke about BJP Trichy Surya

 

தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யாவிற்கும் சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரணுக்கும் இடையேயான தொலைப்பேசி உரையாடல் மூன்று நாட்களுக்கு முன்பு வெளியாகி தமிழக அரசியலிலும், பாஜகவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாஜகவின் ஒழுங்கு குழு முன்பு இருவரும் ஆஜராகி தங்களின் விளக்கத்தைத் தெரிவித்தனர். பின்பு இருவரும் ஒன்றாக நேற்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்து இருவரும் சமாதானமாகச் செல்வதாகத் தெரிவித்தனர். அதேசமயம், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி சூர்யாவை ஆறு மாத காலம் கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். பாஜக நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலுவை நாம் நேற்று காலை சந்தித்து இது தொடர்பான கேள்விகளை முன்வைத்தோம். அவர் அளித்த பேட்டியின் சுருக்க வடிவம்.

 

பாஜகவில் பெண்கள் மீதான இணைய மற்றும் பாலியல் ரீதியான தாக்குதல்களை அரசியல் ரீதியாகவும் மற்றும் சட்டரீதியாகவும் எவ்வாறு பார்க்கிறீர்கள் ?


சமீபத்தில் காசியில் நடைபெற்ற காவி (தமிழ்) சங்கமம் நிகழ்ச்சியில் பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும், பெண்மை வாழ்க என்றும் கூறிவிட்டு பெண்கள் அரசியலுக்கு வரும்போது சனாதனத்தின் மீதும் மனுதர்மத்தின் மீதும் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ள கட்சி அதன் அடிப்படையில் இயங்கும் நிலையில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் இது. பாஜக ஆர்எஸ்எஸ் கொள்கையான சனாதனத்தை நிலை நிறுத்தவும் மனுதர்ம ஆட்சியைப் பரப்பவும் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார்.

 

பல நாடுகளில் பெண்கள் மீதான மதிப்பீடு குறைவாக உள்ளது. சனாதன  மனுதர்ம முறைப்படி பெண்களை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைத்து, போகப் பொருளாக வைத்திருந்தனர். இருநூறு மற்றும் முந்நூறு ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தனிச் சமூக பெண்கள் யாரும் படிக்கவில்லை. பெண் விடுதலைக்கு கடைசி வரைக்கும் போராடியவர் பெரியார். பெண்களை, சம்பிரதாயங்களை உடைத்து வெளியே வரவும் படிக்கவும் ஆங்கிலம் பேசவும் வலியுறுத்தினார். முதன் முதலாக பெண்கள் படித்து பேங்க் போன்ற வேலைகளில் பணியாற்றினர். ஆனால், இவர்கள் அப்படி வேலைக்குச் சென்ற பெண்களை எல்லாம் மிகவும் கடுமையாக விமர்சித்து எழுதினர். 

 

அரசியலில் தங்களின் இருப்பை காட்டிக்கொள்ள திருச்சி சூர்யாவின் பேச்சு மிகவும் அருவருக்கத்தக்க, ஆபாசமான வகையில் பேசியிருக்கிறார். அதனைத் தமிழ்நாட்டில் கேட்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதுவும் சிறுபான்மையின பெண்ணின் சமூகத்தைப் பற்றியும், நடத்தை பற்றியும் மிக மோசமான வார்த்தைகளில் பேசியுள்ளார். இதனை சட்டப்படியாக பார்த்தால் அந்தப் பெண்ணிற்கு நிகழ்த்தப்பட்டது ஊடக தாக்குதல், கொலை மிரட்டல், பெண் தொடர்பான வன்கொடுமை என இவர் மீது மூன்று முதல் நான்கு வழக்குகள் வரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்தியத் தண்டனை சட்டத்தின் படியும் இந்தியத் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படியும் கட்சித் தலைமை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

இந்த சம்பவத்தில் திராவிட சிந்தனை கொண்ட பெண்ணுரிமை பேசுகிற சகோதரர்கள் இது பற்றி பேசியுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை முதலில் பெண்ணுரிமையே. அதன்பிறகே அரசியல். அதன் காரணமாகவே அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காகக் குரல் கொடுத்தனர். இது நாம் பெருமை கொள்ளவேண்டிய விஷயம். 

 

பாஜக பிரமுகர்கள் இதைப்பற்றி எதுவும் பேசாதது பற்றி...


பாஜகவிற்கு வெளில இருந்து நிறையப் பேர் திராவிட சிந்தனை கொண்டவர்கள் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் பெரியாரிய சிந்தனைகள் கொண்டவர்கள் இதுபற்றி பேசும்போது பாஜகவிற்குள்ளேயே இருக்கும் மதுவந்தி, வானதி சீனிவாசன், எஸ்.வீ.சேகர் போன்றோர் எதுவும் பேசாதது ஏன் என்று தெரியவில்லை. அவர்களின் குரல் எங்கே போனது. இவர்கள் எல்லோரும் அரசியலுக்குள் அரசியல் செய்பவர்கள். உங்களை நம்பி வந்த சிறுபான்மை பெண்ணிற்கும் அங்கே மரியாதை இல்லை. 

 

காலம் காலமாகப் பெண்கள் மீது நடந்து வரும் அடக்குமுறைகள் இனியும் தொடர்ந்து வருமா?


உலகம் முழுவதிலும் பெண்கள் மீதான அடக்குமுறைகள் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் பெண்கள் நிறைய இடங்களில் கொடியை நாட்டியுள்ளனர். அதேவேளையில் சனாதனம், மனுதர்மம் என்று சொல்லி பிற்போக்குத்தனத்தையும் திணிக்கின்றனர். பிராமண சமுதாயத்தில் பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் அடக்குமுறைகள் பின்பற்றப்படுகிறது. பெண்கள் மீது சூரிய வெளிச்சம் கூட படாமல் வீட்டில் அடக்குமுறைகள் நடக்கிறது. 

 

எழுத்தறிவு மிக்க கேரளாவில் நம்பூதிரி இன பெண்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பாக தேவகி நிலயம்கொடே என்பவர் தனது எழுபத்து ஐந்தாவது வயதில் ‘பிபோர் தி பிரேக் ஆப் டவன் சீக்ரெட்ஸ் ஆப் தி நம்பூதிரி உமன்’ என்ற நூலில் கூறியுள்ளார். தனது சமூகத்தில் தனக்கு நடந்த கொடுமைகளை எழுதியுள்ளார். இதே போன்று பெண்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பாக நிறைய நூல்கள் வெளி வந்துள்ளன. தன்னுடைய உணவைக் கூட சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளனர். இது சனாதனம் மனுதர்ம ஆட்சி என்று கூறுகின்றனர். 

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.