Skip to main content

'அன்வர் ராஜா எதிர்ப்பு; ரவீந்தரநாத் ஆதரவு' அதிமுகவில் முற்றும் அதிகார மோதல்..?

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

முத்தலாக் தடை சட்டம் இரண்டு நாள்களுக்கு முன்பு எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையில் விரைவில் நிறைவேறும் என்று அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால், மாநிலங்களவையில் போதுமான பெரும்பான்மை இல்லாத நிலையில், மத்திய அரசு எந்த நம்பிக்கையில் அதனை நிறைவேற்றுவோம் என்கிறார்கள் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த இதற்கு முன் 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது கடுமையாக எதிர்த்த அதிமுக, தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

admk triple talaq bill issue



இந்த மசோதா சில மாதங்களுக்கு முன்பு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது இதுகுறித்து பேசிய அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, "இது முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இறைவனுக்கே எதிரான மசோதா. இதுவரை யாரும் செய்யாத வகையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அடக்கி ஆள நீங்கள் முயற்சி செய்து வருகிறீர்கள், 1948ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி இந்த அவையில் உரையாற்றிய அம்பேத்கர், முஸ்லிம் சமூகத்தினர் கிளர்ந்து எழும் வகையில் எந்த அரசும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது, அவ்வாறு ஒரு அரசு செயல்படுமானால் அது புத்திசுவாதீனமற்ற அரசாகவே இருக்கும்" என்று கடுமையான வார்த்தைகளால் அந்த மசோதாவை எதிர்த்தார். இந்த கருத்தைதான் அதிமுக தலைவர்கள் அனைவரும் அப்போது ஒருசேர கூறினார்கள்.


ஆனால், அன்வர் ராஜா பேசியதற்கு எதிராக இந்த மசோதாவை ஆதரி்த்து ரவீந்திரநாத் வாக்களித்திருப்பதை அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள் அதிமுக மூத்த தலைவர்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முஸ்லீம் மக்கள் பெருவாரியாக உள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் அதிமுக ஆதரித்தால், நம்முடைய வெற்றி கேள்விக்குறியாகுமே என்று எடப்பாடி தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மசோதாவால் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த முரண்பாடு அதிகமாகி மீண்டும் ஒரு பிரிவுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் முணுமுணுப்புகள் எழுந்துள்ளது.

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.