Skip to main content

அதிமுக எடுத்த அதிரடி முடிவு... எடப்பாடியை அதிர வைத்த பாமக, பாஜக... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அப்செட்டில் எடப்பாடி!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

பல்வேறு வியூகங்களுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்றத் தேர்தலின்போது உருவான பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகளுடனான கூட்டணியை உள்ளாட்சித் தேர்தலிலும் உறுதி செய்தார். கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை என்பதால் தோழமைக் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் அ.தி.மு.க. தலைமையகம் சென்று இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

admk



அந்த ஆலோசனையின்போது, தோழமைக் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுக்கு குறிப்பிட்ட சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தன. அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளா விட்டாலும், "அ.தி.மு.க. அமைத்துள்ள மா.செ.க்கள் தலைமையிலான மாவட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கான இடங்களை உறுதி செய்துகொள்ளுங்கள். அதற்கேற்ப அ.தி.மு.க. மா.செ.க்களுக்கு அறிவுறுத்தப்படும்' என உறுதி தந்தனர் அ.தி.மு.க. தலைவர்கள்.
 

admk



எந்த சூழலிலும் அ.தி.மு.க.வை தோழமைக்கட்சிகள் டாமினேட் செய்ய எடப்பாடியும் பன்னீரும் இடமளிக்கவில்லை. தங்களிடம் ஆலோசித்த தோழமைக் கட்சிகளிடம் நயமாகப் பேசிய எடப்பாடி, அ.தி.மு.க. மா.செ.க்களிடம், "ஊராட்சி வார்டுகளிலும் ஒன்றிய கவுன்சில்களிலும் தோழமைக் கட்சிகளுக்கு பெரும்பாலும் ஒரு இடம் ஒதுக்கினாலே போதும். மாவட்ட கவுன்சில்களைப் பொறுத்த வரையில் முடிந்த வரைக்கும் தோழமைக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்படாத சூழலை உருவாக்குங்கள். முடியாத பட்சத்தில் ஒரு இடம் தந்தால் போதும்' என கறாரான வரையறையை அறிவுறுத்தியிருக்கிறார்.
 

bjp



எடப்பாடியின் இந்த "டபுள் கேம்' விளையாட்டை அறியாத பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அ.தி.மு.க. குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி நொந்து போயுள்ளனர். இந்த நிலையில்தான், "உள்ளாட்சியில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை; மாவட்டம் முழுவதும் தனித்துப் போட்டியிடுகிறோம்' என சொல்லி முதல் கலகக் குரலை உயர்த்தியது புதுக்கோட்டை பா.ஜ.க.! இந்த கலகக்குரல் ஒவ்வொரு மாவட்டமாகப் பரவ, ஆடிப்போனார் எடப்பாடி பழனிச்சாமி.
 

admk



புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவர் சேதுபதியை தொடர்புகொண்டு நாம் விசாரித்தபோது, "புதுக்கோட்டையில் 22 மாவட்ட கவுன்சில்களும், 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்டு 225 ஒன்றிய கவுன்சில்களும் இருக்கின்றன. கட்சியும் சின்னமும் இவற்றில் போட்டியிட முடியும். 13 ஒன்றியங்களிலும் தலா 3 இடங்களை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என அ.தி.மு.க.விடம் கோரிக்கை வைத்தோம். அதற்குரிய பட்டியலையும் கொடுத்தோம். ஆனால், "நாங்கள் கொடுக்கும் ஒரே ஒரு இடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என கறாராகப் பேசினார்கள். அதேபோல, மாவட்ட கவுன்சில்களிலும் 3 சீட் கேட்ட போதும் மறுத்துவிட்டனர். இது எங்களை காயப்படுத்தியது. "ஒரே ஒரு இடத்தில் போட்டியிடுவதை விட தனித்து போட்டியிட்டால் கட்சியையும் சின்னத்தையும் அனைத்துக் கிராமங்களிலும் கொண்டு செல்லலாம். மோடியின் சாதனைகளையும் விளக்கிப் பேச முடியும்' என கட்சி நிர்வாகிகள் அனைவரும் வலியுறுத்தியதால் கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்துப் போட்டியிட முடிவு செய்தோம்'' என்கிறார் மிக அழுத்தமாக.

 

admk



பேச்சுவார்த்தையின்போது பா.ஜ.க.வை சீண்டும் நோக்கத்திலேயே அமைச்சர் விஜயபாஸ்கரின் அணுகுமுறை இருந்தது என்கிறார்கள். புதுக்கோட்டையைப் போலவே திண்டுக்கல், மதுரை, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கன்னியாகுமரி, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களிலும் அ.தி.மு.க. மீது ஏகத்துக்கும் கடுப்பான பா.ஜ.க.வினர், தனித்துப்போட்டி என்கிற அஸ்திரத்தை கையிலெடுத்தனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், "பா.ஜ.க.வுக்கு ஓரளவு செல்வாக்குள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் தளவாய்சுந்தரத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பொன்.ராதாகிருஷ்ணன். "2 சீட்டுகள் தருகிறோம்' என தளவாய் சுந்தரம் சொல்ல, அதிர்ச்சியடைந்த பொன்னார், "நாகர்கோவில் மேயர் சீட் எங்களுக்குத்தான்னு எடப்பாடி சொல்லியுள்ளார்.


அதனால் இங்கு மெஜாரிட்டி இடங்களில் பா.ஜ.க.தான் போட்டியிடும்' என கறாராக பேச, அதனை ஏற்காத தளவாய், "தோழமைக் கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கணும்னு அதே எடப்பாடி எங்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார். அதைத்தான் ஒதுக்க முடியும். கூடுதல் சீட் வேணும்னா எங்க தலைமையிடம் பேசிப்பாருங்க' என எடுத்தெறிந்து பேசி பொன்னாரை சிதறடிச்சிருக்கார்.

அதேபோல, சேலம் மா.செ.வாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, தனது சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை சேலம் இளங்கோவன் அடங்கிய குழுவிடம் தந்திருந்தார். சேலம் மாவட்டத்தில் பா.ஜ.க.வுக்கு கணிசமான செல்வாக்கு இருக்கும்பட்சத்திலும் ஒன்றியம் வாரியாக சீட் ஒதுக்க முன்வராத அ.தி.மு.க. குழு, ஒட்டுமொத்த மாவட்டத்தையும் சேர்த்து 2 இடங்களை தர முன் வந்தது. இதனால் அ.தி.மு.க. வுக்கும் பா.ஜ.க.வுக்கும் முட்டிக் கொண்டது. இப்படி அனைத்து மாவட்டங்களிலும் அதிருப்தி ஏற்பட்டதால் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பா.ஜ.க.வின் 15 பேர் கொண்ட உயர்மட்ட குழுவிடம் புகார் வாசிக்க, தனித்துப் போட்டியிட தடையில்லை என சம்மதம் தெரிவிக்கப்பட்டது' என சுட்டிக்காட்டினார்கள்.


மேலும் நாம் விசாரித்தபோது, "எடப்பாடியை சந்தித்துப் பேசுவதற்கு முன்பு, எத்தனை இடங்களை கேட்க வேண்டும்? ஜெயிக்கக்கூடிய இடங்கள் எது எது? என பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசித்து அதற்குரிய பட்டியலை பொன்னார் தயாரித்து அதனடிப்படையில் எடப்பாடியிடம் உறுதி செய்து, அதன்பின் மாவட்ட அளவில் பேசியிருக்க வேண்டும். பொன்னாரும் அவரது ஆதரவாளரான கேசவ விநாயகமும்தான் கோட்டை விட்டனர்'' என்கிறார்கள் பா.ஜ.க. சீனியர்கள்.

பா.ஜ.க.வை மட்டுமல்லாமல் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா.விடமும் எடப்பாடியின் டபுள் கேம் விளையாட்டை அ.தி.மு.க.வினர் அடித்து ஆட, அவர்களும் அ.தி.மு.க.வினரிடம் மல்லுக்கட்ட, தனித்துப் போட்டிங்கிற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். தவிர, பேச்சுவார்த்தையின் போது அ.தி.மு.க.வினர் கேட்ட பல கேள்விகள் அவர்களை காயப்படுத்தியிருக்கின்றன. இந்தச் சூழலில், கூட்டணியை உதறிடலாம் என தோழமைக் கட்சிகள் எடுத்த முடிவினை உளவுத்துறை மூலம் அறிந்து ஆடிப்போன எடப்பாடி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோரிடம் பேசினார்.

அதேபோல, மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோருக்கு சில அவசர உத்தரவுகளைப் பிறப்பித்தார் எடப்பாடி. எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சனைகள் வெடித்ததோ அம்மாவட்ட அ.தி.மு.க. குழுவினரிடம் சில யோசனைகளை தெரிவித்ததோடு, தோழமைக் கட்சிகளின் தலைமையை சமாதானப்படுத்தும் முயற்சியில் குதித்தனர் மூத்த அமைச்சர்கள். 15-ந்தேதி இரவு முழுக்க இந்த சமாதானப் படலம் ஓடியது. ஆனாலும், தோழமைக் கட்சிகள் சமாதானமாகாததால், மனு தாக்கலுக்கு கடைசி நாளான 16-ந்தேதி, பல இடங்களில் அ.தி.மு.க.வுக்கு எதிராக தங்களுக்கு செல்வாக்கான இடங்களுக்கு தன்னிச்சையாக தோழமைக்கட்சிகள் மனுதாக்கல் செய்தன. இதனையடுத்து, சில இடங்களை விட்டுக் கொடுத்து போட்டி மனுக்களை வாபஸ் பெற வைக்க கடைசிக்கட்ட முயற்சிகளை எடுத்துள்ளது அ.தி.மு.க.


 

 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது