Skip to main content

ஓட்டுப் போடுறதுக்கு வந்துரு வாங்க குடுங்க... தெம்பாக இருக்கும் அதிமுக... எடப்பாடிக்கு சென்ற புகார்!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

நாங்குநேரி இடைத் தேர்தலுக்காக காவல் துறையினரை உள்ளடக்கிய 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. ஆனால், வெறும் 18 லட்சத்து 97 ஆயிரம் மட்டுமே பிடிபட்டிருக்கிறது என்கிறார்கள். களக்காடு அருகிலுள்ள கட்டார்குளத்தில் அ.தி.மு.க. புள்ளி மாரியப்பன் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த போது பிடிபட்டதும், மற்றொரு பகுதியான பத்மநேரியில் பறக்கும் படையைக் கண்ட 5 பேர் 50 ஆயிரத்தை வீசி விட்டுச் சென்றுள்ளதும் மட்டுமே களக்காடு காவல் நிலையத்தில் வழக்காகப் பதிவாகியுள்ளது.

 

vote



அடுத்து அம்பலம் கிராமத்தில் காங்கிரஸ் தரப்பின் தேர்தல் பணியாளர்கள் 10 பேர் தங்கியிருந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணத்தைத் தகவலின் அடிப்படையில் பறக்கும் படை பிடித்திருக்கிறது. நம் பக்கம் கொடுக்கல் சுத்தமாக இருந்தால்தான், வாக்காளரிடமிருந்து வாக்கை வாங்க முடியுமென கைத் தரப்பு விவகாரமின்றி அனைத்துப் பகுதிகளிலும் பட்டுவாடாக்களை நடத்திவிட, இலைத் தரப்பில் வாக்காளர்களுக்காகத் தரப்பட்டவை முழுமையாகச் சென்றடையவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

8 வாக்குகளிருக்கும் ஒரு வீட்டிற்கு 5 வாக்குகளுக்கு மட்டுமே தந்துவிட்டு மீதம் 3 பேர் வாக்காளர் லிஸ்ட்டில் இல்லாதவர்கள் என்று சொல்லிக் கழித்திருக்கிறார்கள். 6 வாக்குகளிருக்கும் ஒரு வீட்டில் 4 வாக்குகளுக்கு மட்டுமே கொடுத்துவிட்டு மற்ற இருவர் வெளியூரிலிருப்பவர்கள் என்று சொல்லி தர மறுத்தவர்களிடம், "ஓட்டுப் போடுறதுக்கு வந்துரு வாங்க குடுங்க' என்று கேட்டும் மறுக்கப்பட்டுள்ளதாம். மேலிடம் வரை புகார் போனது.


இதையடுத்து 18-ஆம் தேதியன்று எடப்பாடியாரின் மைத்துனரும், கோவை மருத்துவத் துறையிலிருக்கும், முருகக் கடவுளின் கையிலிருக்கும் ஆயுதத்தின் பெயரைக் கொண்டிருக்கும் அந்தத் தூதுவர், நாங்கு நேரியின் பல்ஸ் பார்ப்பதற்காக வந்திருக்கிறார். கட்சித் தரப்பினர், பொது மக்கள் தரப்பு புகார்களைக் கணக்கிலெடுத்து மேலே தகவல் தர, பலவீனத்தை பலமாக மாற்றும் கடைசிக் கட்ட சீர்படுத்தல்கள், மெனக்கெடல்கள் காட்டப்பட்டதையடுத்து தெம்பாக தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது இலைத் தரப்பு.

இதனிடையே கூட்டணியான காங்கிரசின் தேர்தல் பணிக்காக தி.மு.க. சார்பில் ஒதுக்கப்பட்ட மூலக்கரைப்பட்டி ஏரியாவின் அம்பலம் கிராமத்தில் வீடு எடுத்துத் தங்கியிருந்தனர் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ.வான சரவணக்குமாரும் கட்சியினரும். இவர்கள் பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக சிக்கியுள்ளனர். கடந்த அக்டோபர் 17 அன்று மாலை 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று எம்.எல்.ஏ. தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து அங்குள்ள பொருட்களைச் சேதப்படுத்தியிருக் கின்றனர். அத்துடன் அவர்கள் செலவிற்காக வைத்திருந்த பணத்தை வாரியிறைத்துவிட்டு எம்.எல். ஏ. உட்பட சிலரைத் தாக்கியிருக்கிறார்கள். அதில் எம்.எல்.ஏ. உடன் வந்த முருகேசன், திராவிடசுப்பு உட்பட மூவருக்குக் காயமேற்பட்டிருக்கிறது. எம்.எல்.ஏ.வைத் தாக்கியவர்கள் மீது புகார் தரப்பட்டு எப்.ஐ.ஆர். ஆகியிருக்கிறது என்கிறார் காங்கிரசின் தலைமை பூத் ஏஜெண்ட்டும், தி.மு.க.வின் கிழக்கு மா.செ.வுமான ஆவுடையப்பன்.

இதற்கிடையே காங்கிரசும் கடைசிக்கட்ட வியூகங்களையும் பிரச்சாரங்களையும் செய்து முடித்திருக்கிறது. தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர், தங்களது கோரிக்கை நிறைவேறாததால் சொன்னதுபோல் தேர்தலன்று, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தூத்துக்குடி துறைமுகத்தின் அதிகாரியாகப் பணியிலிருக்கும் ஆறுமுகம், அவர் மனைவி முருகேஸ்வரி வணிக வரித்துறையின் அதிகாரி. இவர்கள் தொகுதிக்குட்பட்ட கே.டி.சி. நகரில் குடியிருக்கிறார்கள். அங்குள்ள 166-வது எண் பூத்தில் கடந்த பார்லிமெண்ட் தேர்தல் வரை வாக்களித்திருக்கிறார்கள். இவர்கள் அந்த பூத்தில் வாக்களிக்கச் சென்ற போது அவர்களின் பெயர் தங்களது லிஸ்ட்டில் இல்லை என்று சொல்லி பூத் அதிகாரி வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்.

இதனிடையே எம்.பி. வசந்தகுமார் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கலுங்கடி கிராமத்திற்குப் போக... அவர் மடக்கப்பட்டார். வெளியூர்க்காரர் என்ற முறையில் விதிமீறலுக்காக எஃப்.ஐ.ஆர். போட மும்முரமானார் எஸ்.பி. அருண் சக்திகுமார். மக்கள் தீர்ப்பும் முடிந்துவிட்டதால், மானிட்டர் அறிவிக்கவிருக்கும் தீர்ப்பை அறிய இனி ரூபி மனோகரனும் நாராயணனும் காத்திருக்க வேண்டியதுதான்.
 

 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

அதே குற்றச்சாட்டு - சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை மீது மீண்டும் புகார்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
complaint against Sundhara Travels actress radha

முரளி, வடிவேலு உள்ளிட்ட பல பேர் நடிப்பில் 2002ல் வெளியான சுந்தரா ட்ராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. தொடர்ந்து அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்பு நடிப்பிலிருந்து விலகியிருந்தார். 

இந்த சூழலில் கடந்த மாதம் ராதா மீதும் அவரது மகன் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த டேவிட் ராஜ், தன் மகனை இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ராதா தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் கொடுக்கப்பட்டு, அதன் விசாரணை நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவர் தரப்பில், ராதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முரளியை ராதா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முரளிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முரளியின் புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து ராதா மீது ஒரே மாதிரியான புகார்கள் எழுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.