Skip to main content

என்னை கேவலப்படுத்திய ஆளுங்கட்சி... அதிமுக கோட்டையை வீழ்த்திய திருநங்கை... திமுகவின் ரியா அதிரடி பதில்!  

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில், இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட கருவேப்பம்பட்டி ஊராட்சி, கால் நூற்றாண்டாக அ.தி.மு.க. கோட்டையாக இருந்தது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அந்தக் கோட்டையை தி.மு.க. வசமாக்கி இருக்கிறார் திருநங்கை ரியா. மாநிலக்கட்சிகள் அளவில், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்ற வரலாற்றுப் பெருமையையும் பெற்றிருக்கிறார் அவர்.

 

riya



தேர்தல் களேபரங்கள் எல்லாம் முடிந்து, சற்றே பரபரப்பு தணிந்திருக்கும் ஓர் அந்திப்பொழுதில் ரியாவை அவருடைய வீட்டில் சந்தித்தோம். வீட்டின் முகப்பில், அரசு மானியத்தில் கட்டப்பட்ட கழிப்பறை இருக்கிறது. அதற்கு கதவுகூட போட இயலாத நிலையில், தகரத்தை வைத்து மறைத்திருக்கிறார்கள் என்பதில் இருந்தே ரியா குடும்பத்தின் பொருளாதார வலிமையை தெரிந்து கொள்ளலாம். அப்பா அன்பரசன். அம்மா சின்ன பாப்பா. தம்பி சிலம்பரசன்.

 

riya



தி.மு.க.வின்பால் ஈர்க்கப்பட்டது, ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றதைப் பற்றியெல்லாம் விரிவாக பேசினார் ரியா. "மூன்றாம் பாலினத்தவர் என்றாலே கேலியாக பேசும் சமூகத்தில், எங்களைப் போன்றவர்களை திருநங்கை, திருநம்பி என்ற அழகான தமிழில் பெயரிட்டு அழைத்தார் தி.மு.க. தலைவர் கலைஞர். அந்த நிமிடமே தி.மு.க. மீதும் கலைஞர் மீதும் பற்று வந்துடுச்சு.

எங்களுடைய கருவேப்பம்பட்டி பஞ்சாயத்தில், சில ஊழல் முறைகேடுகள் நடந்தது பற்றி பஞ்சாயத்துத் தலைவர்கிட்ட தைரியமாக கேள்வி கேட்பேன். எங்க அப்பாவும் எனக்கு தூண்டுதலாக இருந்தார். அப்படித்தான் எனக்குள் அரசியல் ஆசை வந்தது. திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தி.மு.க.ல சேர்ந்தேன்.
 

riya



கனிமொழி அக்கா எம்.பி. தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டப்ப, அவருக்காக பிரச்சாரம் செய்ததுதான் என்னுடைய முதல் அரசியல் மேடை. இந்த நிலையில்தான், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருநங்கைகளும் தேர்தல் அரசியலில் பங்கெடுத்துக்கணும்னு ஒரு கூட்டத்துல பேசி, தீர்மானமும் கொண்டு வந்தாரு. அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தபோது, திருச்செங்கோடு 2-வது ஒன்றியத்தில் கவுன்சிலர் சீட் கேட்டு விண்ணப்பிச்சேன். கட்சித்தலைமை என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தது. அந்த நம்பிக்கையை, தேர்தலில் வெற்றிபெற்று காப்பாற்றி இருக்கேன்'' என வெற்றிக்களிப்பு குறையாமல் சொன்னார் ரியா.


"வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது சம்பிரதாயமாகவே ஆகிவிட்ட சூழலில், தேர்தல் செலவுகளை எப்படிச் சமாளித்தீர்கள்?'' என்றோம். "சார், சொன்னா நம்ப மாட்டீங்க... ஓட்டுக்காக மக்களுக்கு நான் ஒத்த ரூபாய்கூட கொடுக்கல. காய்கறி வாங்கி குழம்பு வைக்கிற காச மிச்சம் பிடிச்சா தேர்தல் செலவுக்கு ஆகும்னு, பிரச்சாரம் நடந்த நாள்களில் வெறும் சோத்துல தண்ணீய ஊத்தி கரைச்சு குடிச்சிட்டு நான், அம்மா, அப்பாலாம் ஓட்டுக் கேட்க போயிருக்கோம். அதுக்காக, கூட ஓட்டுக்கேட்டு வந்தவங்க யாரோட வயித்தையும் காயப்போட்டுடல.

அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் மேல மக்களுக்கு எப்பவும் நம்பிக்கை இருந்ததில்ல. அதனால நான் மக்களிடம் எந்த வாக்குறுதியும் கொடுக்கல. "திருநங்கையான எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. வெற்றிபெற்றால், இந்த ஊருக்கு என்னென்ன தேவையோ அதை செய்துதருகிறேன்'’என்று மட்டும் தான் சொல்லி ஓட்டு கேட்டேன். ஜெயிக்க வச்சுட்டாங்க.


நான் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தபோதே, "இதெல்லாம் தேர்தலில் நிற்க ரூல்ஸ்ல இடமில்லை. பஸ் ஸ்டாண்டுல கடை கடையா கை தட்டி காசு வாங்க ஓடிப் போய்டும்னுலாம்' ஆளுங்கட்சிக் காரங்க கேவலமா பிரச்சாரமே பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதே ஆளுங்கட்சியினர்தான், நான் ஜெயிச்சவுடனே மறை முகத் தேர்தலில் என்னுடைய ஆதரவுகேட்டு, 80 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசினாங்க. எதற்கும் அசைஞ்சு கொடுக்கல.

எங்க ஊர்ல பசங்க, பொண்ணுங்க படிச்ச படிப்புக்கு வேலைவாய்ப்பு இல்லாம கஷ்டப்படுறாங்க. அவர்களுக்கான சுய வேலைவாய்ப்பு, படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதுதான் என்னுடைய முதல்வேலை. அதற்கான பணிகளையும் தொடங்கிட்டோம்'' என்று நம்பிக்கை மிளிர பேசுகிறார் ரியா.


 

 

Next Story

'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' - திமுக தலைவர் ஸ்டாலின்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The impossibility situation really saddens me too'-DMK President Stalin

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தநிலையில் 'ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்' என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 'இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர் அனைவரையும் வரவேற்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகாலமாக இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – மாநில உரிமைகளைப் பறித்த ஆட்சியை விரட்டிட, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களமே சரியான வாய்ப்பாகும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் களத்தைச் சந்திக்கிறோம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தோழமைக் கட்சியினருடன் ஏற்பட்ட கொள்கை உறவு, தேர்தல் கூட்டணியாக இணைந்து 2019நாடாளுமன்றத் தேர்தல் களம், 2021 சட்டமன்றத் தேர்தல் களம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம், மாநகராட்சி - நகராட்சித் தேர்தல் களம் என அனைத்திலும் தொடர் வெற்றியைப் பெற்று வருகிறோம். ஐந்தாவது முறையாகத் தொடரும் இந்த கொள்கை அடிப்படையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ள தோழமைக் கட்சியினருக்கு உரிய வகையில் இடங்களை ஒதுக்கி, தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகப்பூர்வமான நடைமுறையை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தத்தைத் தருகிறது.  தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையையும் கூட்டணியின் வலிமையையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து அனைத்துத் தோழமை இயக்கங்களிடமும் என் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் விளக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும், அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதைத் தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணர்ந்து, உளப்பூர்வமான ஆதரவை நல்கி, தேர்தல் பணியாற்ற முடிவெடுத்திருப்பது ஆக்கப்பூர்வமான ஜனநாயகப் பண்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இடம் ஒதுக்க இயலாமல் போன நிலையிலும், மதவெறி பாசிசத்தை வீழ்த்திடத் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிர்வாகிகள் முடிவெடுத்து ஆதரவைத் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன். மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுபோலவே, இந்தியா கூட்டணி வெற்றி பெறக் களப்பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றியினை உரித்தாக்குவதோடு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், “நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என்கிற வகையில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிடவும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன். ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

'இனி அந்த வேட்டியைக் கூட கட்ட முடியாது'- கடம்பூர் ராஜூ பேச்சு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'We can't even build that dhoti anymore' - Kadambur Raju's speech

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக பெயர், கொடி, சின்னம் லெட்டர் பேடை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஓபிஎஸ்க்கு நிரந்தர தடை விதித்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், 'இதற்கு முன்பாவது இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

துரோகம் பண்ணியவர்கள் இனி அந்த வேட்டியைக்கூட கட்ட முடியாது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இரண்டு கோடிக்கு மேற்பட்ட தொண்டர்களை அதிமுக சேர்த்துள்ளது.  நாள் முழுவதும் சோதனை தான். ஒன்று நீதிமன்றம் அல்லது தேர்தல் கமிஷன். இப்படி இத்தனை குழப்பங்களையும் சந்தித்து சவால்களை சந்தித்து அத்தனையும் சாதனைகளாக மாற்றியுள்ளோம். இன்று அதிமுகவை பழைய ஒழுங்கோடு இன்னும் சொல்லப்போனால் முன்பு இருந்ததை விட  நல்ல முறைக்கு கொண்டுவந்துள்ளார் எடப்பாடி. இன்றைக்கும் இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதா? இல்லை சேருமா? இதுதான் இன்றைக்கு பட்டிமன்றம், விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று தெளிவாக கட்சியின் பொதுச் செயலாளர் சொல்லிவிட்டார். இந்த கருத்து ஒவ்வொரு அதிமுக தொண்டர்களுடைய கருத்து தான்'' என்றார்.