அதிமுக தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தினம்தினம் புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. சபாநாயகர் மீது கடந்த 1ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த மனுவை சட்டமன்ற செயலாளர் சீனிவாசனிடம் கொடுத்தார். இதுகுறித்து நேற்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது இன்னும் சட்டமன்றம் கூடுவதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை. சட்டமன்றம் கூடியவுடன் எங்களது நடவடிக்கைகளை பார்ப்பீர்கள், Wait and See எனக்கூறினார்.

admk

Advertisment

இந்நிலையில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அதிமுக ஒரு அதிரடி திட்டத்தை கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தற்போது சபாநாயகராக இருக்கும் தனபாலை ராஜினாமா செய்யவைத்து அந்த இடத்திற்கு வேறொருவரை கொண்டுவருவதுதான் அவர்களின் ப்ளான். அந்த இடத்திற்கு வேறொருவரை கொண்டுவருவதன்மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடியாகிவிடும். இதன்மூலம் இன்னும் ஒரு ஆறு, ஏழு மாதத்திற்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் ஆட்சி நடத்தலாம்.

தனிப்பெரும்பான்மை இருந்தும் ஏன் இந்த முடிவு என்ற கேள்விக்கும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதிலளித்துள்ளனர். 97 ஆக இருந்த திமுக கூட்டணியின் பலம் இடைத்தேர்தலுக்கு பிறகு 110 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக கூட்டணியின் பலம் 123 ஆக குறைந்துவிட்டது. இருந்தாலும் இப்போதும் தனிப்பெரும்பான்மையில்தான் உள்ளோம். ஆனால் அதிமுக கூட்டணியில் அவரவர் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவர்கள், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் தனபால் மீது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் என 25 பேர் உள்ளனர். இவர்கள் ஒருவேளை மாற்றி வாக்களித்துவிட்டால் சபாநாயகரை மாற்றவேண்டி வரும்.

Advertisment

இதைத்தொடர்ந்து அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் திமுக. இதிலும் மாற்றி வாக்களித்துவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும். இவற்றை தடுக்கவே சபாநாயகர் தனபாலை ராஜினாமா செய்யவைக்க நினைக்கின்றனர் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும். தனபாலுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அவரை சமாதானப்படுத்தலாம் எனவும் முடிவு செய்துள்ளார்களாம். இப்படி அடுத்தடுத்து நிறைய மாற்றங்கள் காத்திருக்கின்றன எனக் கூறுகின்றனர் அரசியல் ஆலோசகர்கள்.