Skip to main content

அ.தி.மு.கவை கைப்பற்றுவாரா சசி? எதிர்பார்ப்பும் அச்சமும்! - கட்சியினர் மனநிலை!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

Sasikala

 

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு, 4 ஆண்டு சிறைவாசம் சென்ற சசிகலா விடுதலையாகி, பெங்களூருவிலிருந்து வழிநெடுக வரவேற்புடன் 23 மணி நேரம் பயணித்தார். சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் மரியாதை செலுத்தி, தியாகராய நகரில் உள்ள வீட்டுக்கு சசிகலா சென்ற நிலையில், நாட்டு நடப்பு இனி எப்படி இருக்கும் என அ.தி.மு.க.வினரிடம் கேள்வி உள்ளது.

 

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அ.தி.மு.க.வினர் கட்டம் கட்டப்பட்டனர். அ.தி.மு.க. கொடி பறக்க சசிகலா பயணிக்க கார் தந்தவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், கிரேன் மூலம் ஆப்பிள் மாலை, செண்டை மேளம், பூரண கும்பம், சுவரொட்டிகள் என அமர்க்களம் ஒருபுறம். இன்னொருபுறம், போஸ்டர்களில் சசிகலா படத்தை மட்டும் கச்சிதமாகக் கிழிப்பது, கண்ணை நோண்டுவது போன்ற செயல்பாடுகள்.

 

என்னதான் நினைக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்?

 

‘தலைமை என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை. நாங்கள் சசிகலா ஆதரவு நிலையில் உறுதியாக இருக்கிறோம்..’ என்பதை வெளிப்படுத்தும் விதமாக விருதுநகர், செந்நெல்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் நால்வர், "தொண்டர்களைக் காக்கவரும் தியாகத் தலைவியே! வருக தாயே!'’ என்று தங்களது முகவரியோடு, அ.தி.மு.க. அடையாள அட்டைகளையும் போஸ்டரில் அச்சிட்டு ஒட்டியிருந்தனர். "அடிமட்டத் தொண்டராக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வராக உருவாக்கியவரே சசிகலாதான்'’ என்று, அக்கட்சியின் தலைமைக்கும், போஸ்டரில் ‘செக்’வைத்தனர்.

Sasikala

 

இதுகுறித்து, விருதுநகர் அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர், “விருதுநகரில் நான்குபேர் முகத்தைப் போட்டு போஸ்டர் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்திவிட்டால், தமிழகத்தில் சசிகலாவுக்குப் பெரும்பாலானோர் ஆதரவு இருப்பதாக அர்த்தம் ஆகிவிடுமா? இதெல்லாம் லோக்கல் பாலிடிக்ஸ். விருதுநகர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவி தனக்குக் கிடைக்காததால், ஒரு அணி சேர்த்துக்கொண்டு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான, ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுமதிக்குக் குடைச்சல் தந்தபடியே இருக்கிறார் ஒன்றிய கவுன்சிலரான செந்நெல்குடி மாரியப்பன். சசிகலா ஆதரவு போஸ்டர் ஒட்டியது அவருடைய மகன் செல்லப்பாண்டியும், அவருடைய ரத்த சொந்தங்களும்தான். இதையெல்லாம் பார்க்கும்போது, 1991 - 96ல் சசிகலாவும், அவரது பெயரைச் சொல்லி அந்தக் குடும்பத்தினரும் போட்ட ஆட்டம் நினைவுக்கு வருகிறது.

 

எம்.ஜி.ஆர். இருந்தபோது, தாழ்த்தப்பட்ட மக்களின் பெருவாரியான ஆதரவு அ.தி.மு.க.வுக்குக் கிடைத்தது. சசிகலா குடும்பத்தினர் தலையெடுத்தப் பிறகே, ஒரு சாதிக்கான கட்சி என்ற இமேஜ் ஏற்பட்டு, தலித் வாக்கு வங்கி எங்கெங்கோ சிதறிப்போனது. எம்.ஜி.ஆர். காலத்தில், நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தார். பிறகு, முக்குலத்தோரான கே.கே.சிவசாமி, ஆர்.பி.உதயகுமார் போன்றவர்களெல்லாம் இங்கே மாவட்டச் செயலாளர் ஆனதற்கு, கட்சியை சசிகலா பின்னால் இருந்து இயக்கியதே காரணம். தற்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. ‘ஓ.பன்னீர்செல்வம் பின்னுக்குத் தள்ளப்பட்டதும் கூட, ஒருவகையில் சரிதான். அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு சாதி ஆதிக்கம் ஏற்படுமோ என்பது, எங்கள் கட்சியில் உள்ள பிற சமுதாயத்தவர்களின் அச்சமாக, இப்போதும் இருக்கிறது'' என்றார்.

 

மாநில அளவிலான மற்றொரு நிர்வாகியோ தன் பெயரைத் தவிர்க்கச் சொல்லி கருத்து தெரிவித்தார். “தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 டெல்டா மாவட்டங்களிலும், ஒன்பது தென் மாவட்டங்களில், கன்னியாகுமரி நீங்கலாக, தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய எட்டு மாவட்டங்களிலும், முக்குலத்தோர் வாக்கு வங்கி கணிசமாக உள்ளதாகவும், இந்த மாவட்டங்கள் அனைத்திலும் தற்போது சசிகலா அலை வீசுவதாகவும், பொய்யான ஒரு பிம்பத்தை, திட்டமிட்டே உருவாக்கி வருகின்றனர்.

 

dddd

 

சசிகலாவுக்கு அப்படி எந்தவொரு செல்வாக்கும் இல்லை என்பதற்கு, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே சான்றாக உள்ளன. ஜெயலலிதா இருந்த காலத்திலேயே, அ.தி.மு.க. கோட்டை என்று சொல்லப்படும் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் உள்ள 87 தொகுதிகளில், 53 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. வால் வெற்றிபெற முடிந்தது.

 

கோடிகளில் சொத்துகளைக் குவித்து, ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமாகி, சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, விடுதலையாகி வெளியில் வருபவரை, ‘தியாகத் தலைவி’ என்று, கொஞ்சம் கூட கூச்சப்படாமல் எப்படித்தான் சொல்ல முடிகிறதோ?'' என்று சீறலாக வெடித்தார்.

 

செங்கல்பட்டு மாவட்டம் நெமிலிகுப்பத்தைச் சேர்ந்த கருணாகரன், "நாங்க மீனவர்கள். எப்போ எம்.ஜி.ஆர். ‘படகோட்டி' படத்தில் எங்க கஷ்டத்தை வெளிப்படுத்தி நடித்தாரோ... அப்போவே பெரும்பாலான மீனவர்களின் மனதைப் பிடித்துவிட்டார். அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அவருக்காக இரட்டை இலைக்கு ஓட்டு போட்டோம். பின்னர் ஜெயலலிதா அம்மா தலைமையேற்றதில் இருந்து அம்மாவ நாங்க ஏத்துக்கிட்டோம். ஆனா அவுங்க மறைவுக்குப் பின்னாடி எடப்பாடி எப்படி முதல்வர் ஆனாருனு தெரியல. அதுவும் மக்களால் தேர்வு செய்யப்படல. இந்த நேரத்துல சசிகலா வந்தா எப்படி ஏத்துப்போம். அம்மா ஜெயலலிதாவையே என்ன செய்தாங்கனு தெரியல. அந்த மர்மமே விளங்கலை. இந்த சந்தேகம் இவுங்க மேல இருக்கு.''

 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரி, "சசிகலா வந்தாத்தான் நல்லது. இவ்வளவு நாளா அ.தி.மு.க.காரங்கள தட்டிக் கேட்கவோ, எதிர்த்து கேள்வி கேட்கவோ ஆளே இல்லை. அதனால இவுங்க வெக்கிறதுதான் சட்டமா இருந்துச்சு. எல்லாரோட முகத்திலும் இப்போ ஒரு பயம் தெரியுது. மாத்தி மாத்தி பேசியாவது, ஜெயலலிதாம்மா சாவு மர்மம் வெளி உலகத்துக்குத் தெரியுதானு பார்ப்போம்.''

 

கிண்டி பட்ரோட்டைச் சேர்ந்த ரமணி, "நான் அ.தி.மு.க.காரிதான். ஆனா எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மாவ ஏத்துக்கலாம். சசிகலா யாரு..?''

 

திருப்போரூரைச் சேர்ந்த சிவராமன், "இது மேலிடத்து விவகாரம். சசிகலா வருகையினால் அ.தி.மு.க.வுக்கு எந்தப் பாதிப்புமில்லை. மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள்னு வரவேற்புக்குக் கூட யாரும் செல்லவில்லேயே..? ஒருவரும் அ.ம.மு.க.வில் சேரவில்லையே! எடப்பாடியின் சிறப்பான ஆட்சி தொடரும்.''

 

ஓ.எம்.ஆர் சாலை நாவலூரைச் சேர்ந்த ரகு, "நான் மீட்டிங்ல இருக்கேன். அப்புறம் பேசுறேன்.''

 

ரகுவைப் போலவே அ.தி.மு.கவில் பொறுப்பில் உள்ள பலரும் சட்டென தொடர்பைத் துண்டித்தனர். “எங்க தலையைப் போட்டு உருட்டாதீங்க. அவங்களே ஒரு முடிவு எடுத்துட்டு வரட்டும்'' என்று சொன்னவர்கள் அதிகம். சசிகலா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும், அவர் எதுவும் செய்வார் என்ற அச்சம் கலந்த உணர்வும் அ.தி.மு.க.வினரிடம் தெரிகிறது.

 

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முன்னாள் அமைச்சர் VS மூத்த நிர்வாகி; வீதிக்கு வந்த அதிமுக சண்டை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument between AIADMK former minister Sevur Ramachandran and senior executive
சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கஜேந்திரன் போட்டியிட்டார். தேர்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் ஆரணி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள்  அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன்,  தனது கிராமத்தில் அதிக வாக்குகள் இரட்டை இலை பெற வேண்டும் என்பதற்காக தனது பலத்தை காட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தலா நூறு ரூபாய் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக அதிமுக சேவூர் கிளை அவை தலைவர் ராமதாஸிடம் பணம் தந்து ஒவ்வொரு வீடாக தரச் செய்திருக்கிறாராம்.  பின்னர், ஓட்டுக்கு பணம் தந்து விட்டு மீதி பணத்தை கொண்டு வந்து எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் ராமதாஸ் வழங்கியிருக்கிறார். அப்போது எனக்கு தேர்தல் வேலை செய்யுங்க என்றால் மட்டும் உங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கு, ஆனா கஜேந்திரனுக்காக விழுந்து விழுந்து வேலை பாக்குறீங்க என பேச்சு வாக்கில் கூறியுள்ளார். இதில் கடுப்பாகி ராமதாஸ் பதில் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் ஒரு பகுதியாக நான் தான் உன் மகளுக்கு 2001-ல் தையல் மிஷின் வழங்கினேன் என எம்.எல்.ஏ கூறினார். இதில் கோபமான ராமதாஸ் தனது மகள் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தையல் மிஷினை கொண்டு வந்து முன்னாள் அமைச்சரின் வீட்டில் வைத்தனர். அப்பொழுது அவரின் மனைவி இதை எதுக்கு இங்க கொண்டு வரீங்க என கேட்ட போது, “உன் புருஷன் தான் தையல் மிஷினை கொடுத்தேன் அப்படின்னு சொல்லி காட்டுகிறார். இது அரசின் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது தான். இருந்தாலும் உன் கணவர் வழங்கினேன் என சொன்னதால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என சொல்லி விட்டு தந்தையும், மகளும் வந்துவிட்டனர்.

இப்போது இது ஆரணி அதிமுகவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சேவூர் ராமச்சந்திரனின்  எதிர்கோஷ்டியினர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் சொல்லி பஞ்சாயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.