Skip to main content

இத்தனை நாள் செய்தியாளர்களை சந்திக்காதது ஏன்..? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

கரோனா வைரஸ் தமிழகத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், பெரு நகரத்திலிருந்து, சாதாரண குக்கிராமம் வரை ஒவ்வொரு நாள் மாலையும் தொலைக்காட்சி முன்பு மக்கள் அமர்ந்து கரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் என்ன என்பதை உற்று கவனித்து வருகின்றனர்.
 


 

 

  ADMK Minister Vijayabaskar press meet issue

 

ஆரம்ப காலகட்டங்களில் தமிழகத்தில் ஏற்படும் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து தகவல் தெரிவித்து வந்தார். அவரது செயல்பாடுகள் மக்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து சமூகவலைதளங்களில் 'தமிழகத்தை காக்க வந்த போதிதர்மர், மக்கள் நாயகன், நாளைய முதல்வர்' என்றெல்லாம் அவரை வைத்து மீம்கள் பறந்தன. ஆனால், திடீரென அவர் செய்தியாளர்களை சந்திப்பதை நிறுத்திவிட்டார். இது பேசும்பொருளாக மாறியது. மக்களால் அவர் அதிகமாக புகழப்படுவதால் கட்சி தலைமை அவர் மீது அதிருப்தி அடைந்ததாக சர்ச்சை உருவானது.

 

  ADMK Minister Vijayabaskar press meet issue


 

nakkheeran app



இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு துல்லியமாக பதில் அளித்ததுடன், தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்தும், அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்தும் புள்ளிவிவரத்துடன் தெளிவாக விளக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது பிரஸ் மீட் ஸ்டைலுக்கு ஒரு ரசிக வட்டாரமே உருவானது. மாலை 6 மணியானால் 'அந்த மேடம் பேட்டிங்க' என தமிழக மக்கள் எதிர்பார்க்க தொடங்கினர். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உட்பட பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

 

  ADMK Minister Vijayabaskar press meet issue



ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொறுப்பு ஏற்க வேண்டியது அரசுதானே, தவிர அதிகாரிகள் இல்லை. விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த சர்ச்சைகளுக்கு இடையில் இன்று விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். துவக்கத்திலேயே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை புகழ்ந்து பேசிய அவர், கரோனா பரிசோதனை எத்தனை பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பதை விளக்கினார்.

இதற்கிடையில் கடந்த 15 நாட்களாக ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என கேள்வி எழுப்ப, "நான் செய்தியாளர்களை நேற்று கூட சந்தித்தேன். புள்ளி விவரங்களை முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் செயலாளர் தெரிவித்து வருகிறார். அமைச்சர் என்ற முறையில் பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அதனால்தான் வரவில்லையே தவிர நீங்கள் வேறு எதுவும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்" என்று சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்தார்.  

 

Next Story

திருச்சி தொகுதி அதிமுக சீட் யாருக்கு? - உச்சத்தில் விஜயபாஸ்கர் - தங்கமணி மோதல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

Trichy Constituency ADMK seat for whom? Vijayabaskar - Thangamani conflict at the peak!

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக கூட்டணியில் திருச்சி தொகுதி யாருக்கு என்ற முட்டல் மோதல்கள் பலமாக உள்ளதாம். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் ஆர்.வி. பரதன், தனக்கு திருச்சி அல்லது பெரம்பலூர் தொகுதி கொடுத்தால் தமிழ்நாடு முழுவதும் எங்கள் ஆட்கள் கட்சிக்காக வேலை செய்வார்கள் என்று எடப்பாடி கே. பழனிசாமியிடம் கோரிக்கையோடு போக, திருச்சி தொகுதிப் பொறுப்பாளரான மாஜி தங்கமணியும் ஆமோதித்துள்ளார். ஆனால் திருச்சி தொகுதியை கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் கரிகாலனின் சகோதரரான புதுக்கோட்டை மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையாவுக்கே கொடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை வடக்கு மா.செ. விஜயபாஸ்கர் மதியம் வரை எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான், திருச்சியை தங்கள் கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒதுக்குவது வரை போன எடப்பாடி, தேமுதிகவுக்கு தஞ்சை தொகுதியை கொடுத்துவிட்டு திருச்சியை நிலுவையில் வைத்துள்ளார். தொகுதிப் பொறுப்பாளரான தான் பரிந்துரை செய்த வேட்பாளருக்கு சீட் கிடைக்கவிடாமல் தான் பரிந்துரைக்கும் பாசறை கருப்பையாவுக்கு சீட் வாங்க மோதும் விராலிமலை விஜயபாஸ்கரிடம், உங்கள் பொறுப்பு தொகுதியை மட்டும் கவனியுங்கள். என் பொறுப்பு தொகுதிக்குள் வரவேண்டாம் என்று தங்கமணி விராலிமலை விஜயபாஸ்கரிடம் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருச்சி தொகுதி சீட்டுக்காக அதிமுக மாஜிக்களின் மோதல்கள் உச்சத்தில் இருப்பதால் விடியும்போது சீட் யாருக்கு என்று முடிவெடுப்பார் எடப்பாடி என்கிறார்கள் விவரமறிந்த ர.ர.க்கள். பரதனிடம் பேசிய எடப்பாடி, நாளைய விடியல் நல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கை கூறி இருப்பதாகவும் பேசுகின்றனர். அதே நேரத்தில் மா.செ. விஜயபாஸ்கர், சீட் எனக்குத்தான் வாங்கித் தருவார் நான் தான் வேட்பாளர் என்று கட்சியினரிடம் சொல்லி வாழ்த்துகளையும் பெற்று வருகிறார் பாசறை கருப்பையா.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.