Skip to main content

பயத்தால் நான் வீட்டில் முடங்கமுடியாது... யாரும் அப்படி நினைக்கக் கூடாது... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி !

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

கரோனா தடுப்பில் அரசு என்னென்ன பணிகளை முன்னெடுத்து வருகிறது? 

கரோனா பரவல் மின்னல் வேகத்தில் இருப்பதாக நான் சட்டமன்றத்திலேயே கூறினேன்.கரோனாவின் தாக்கம் அதிகமுள்ள சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் தொடக்கத்தில் இருந்ததைவிட ஐந்தாவது, ஆறாவது பதினைந்து நாள் கால அளவில், பன்மடங்கு அதிகரித்திருந்தது.அப்படியொரு நிலை நமக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே,தமிழக முதல்வர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார். பிரதமரும் முழு ஊரடங்குக்கு உத்தரவிட்டார்.இதை உணர்ந்து பொதுமக்கள் தனித்திருந்தால் மட்டுமே தீவிரமடைவதைக் கட்டுப்படுத்த முடியும்.இந்த நிலையைக் கடந்தால் மட்டுமே, அடுத்தகட்ட பணிகள் பற்றி சொல்லமுடியும். 

 

admk



21 நாட்களுக்கு ஊரடங்கு என்பது மிகப்பெரிய கால அளவாக இருக்கிறதே? 

இந்த 21 நாட்கள் என்பது மிகமிக முக்கியமானது. வைரஸ் மியூட்டேஷன் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் வைரஸ் பல்கிப் பெருகும். அப்படிப் பெருகும் வேளையில், அதன் தொடர் சங்கிலியைத் துண்டிக்க மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தால்தான் முடியும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு இருக்கும் தொற்று, சமூகத் தொற்றாக மாறிவிடக் கூடாது. அதற்காகத்தான் இத்தனை ஆயிரம்பேர் கடுமையாக உழைக்கிறோம். மக்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

மக்களிடம் அதீத நம்பிக்கையும், அதீத அச்ச உணர்வும் இருப்பதைப் பார்க்க முடிகிறதே? 

கரோனா நம்மைத் தாக்காது என்ற அதீத நம்பிக்கை யாரொருவருக்கும் இருக்கவே கூடாது. அதற்கான நேரம் இது கிடையாது. அதேசமயம், அதீத பயமும் தேவையில்லாதது. கரோனா வந்தாலே செத்துப்போவோம் என்ற நினைக்கத் தேவையில்லை. உடலில் நீண்டகாலமாக நீரிழிவு, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கரோனாவால் பாதித்தவர்கள் அனைவரும் இறந்துவிடவில்லை. இறப்பு விகிதமும் அதைத்தான் உறுதிசெய்கிறது. தொடர் சிகிச்சையின் மூலம் தொடர்ந்து சிலர் குணமடைந்து வருவதை அறிவித்துள்ளோமே.

கரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா? 
 

முழுமையான ஊரடங்கு. போக்கு வரத்துக்கான வாய்ப்பே கிடையாது. இப்படியான சூழலில் சாமான்யர்களுக்கு காய்கறி வாங்குவதே சவாலான காரியமாக இருக்கும்போது, உலகளவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய வெண்டிலேட்டர்கள், சீனாவில் இருந்து வரக்கூடிய மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பெறுவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது.இருந்த போதிலும், இரண்டு மாதத்திற்கு முன்பே தயார்நிலையில் இருந்ததால் போதுமான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன. தேவையானவற்றை ஆர்டர் செய்தும் வருகிறோம். சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல பகுதிகளில், பிரத்யேக மருத்துவமனைகளை ஏற்படுத்தி, அங்கிருக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை உறுதிப்படுத்தி இருக்கிறோம். இனிவரும் காலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானால், சூழலுக்கு ஏற்றாற்போல் தயார் நிலையில்தான் இருக்கிறோம்.

உலகளவில் மிகப்பெரிய தலைவர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உங்களைப் போல அயராது உழைப்பவர்களின் நலன்குறித்த கேள்விகளும் எழுகின்றதே? 

அச்சம் ஏற்பட்டாலும் நான் வீட்டில் முடங்கமுடியாது. சமூகப் பொறுப்பிருக்கிறது. இரவு 1 மணியானாலும் களத்திற்குச் சென்று ஊக்கமளித்தால்தான்,மருத்துவப் பணியாளர்களுக்கான தார்மீக ஆதரவு கிடைக்கும். கரோனா மீதான அச்சம் ஒருபுறம் இருந்தாலும், அதைத் தடுப்பதற்கான பணியைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.

கோவிட்-19 தடுப்புக்கான சிறப்புப் படையில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர் கிரிதரன், நாம் மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற கேள்வியெழுவதாகக் குறிப்பிட்டிருந்தாரே? 

கரோனாவின் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே அரசாங்கம் இவ்வளவு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இத்தனையும் மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகளே.நமக்காக, நாட்டுக்காக, நம் குடும்பத்திற்காக வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வளர்ந்த நாடுகளே இதில் அக்கறையில்லாமல் விட்டதால்தான் மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்திருக்கின்றன.இதையே உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும், நீங்கள் சொல்லுகிற நிபுணர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், வருவாய் அதிகாரிகள்,காவலர்கள் என அனைவரும் மக்களுக்காக உயிரையும் எண்ணாமல் ஓயாது உழைக்கிறார்கள். எனவே, இந்தக் காலகட்டத்தில் ஏற்படும் அசவுகரியங்களை நமக்காகப் பொறுத்துக்கொண்டு, கட்டாயமாக வீட்டிலேயே இருக்கவேண்டும்.மக்கள் கையில்தான் எல்லாமே இருக்கிறது. இதனை நக்கீரன் வழியாக நான் வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

தொகுப்பு - ச.ப.மதிவாணன்
படம் : ஸ்டாலின்



 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.