Skip to main content

முதல்வர் பாதுகாக்கணும்னு சொல்றாரு... நான் தான் வேலையை நிறுத்தினேன்... அமைச்சர் மகனின் அடாவடி!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

நீர்நிலைகளையும், மழை நீர் வடிகால் வாய்களையும் பாதுகாக்க வேண்டுமென முதல்வர் மேடைக்கு மேடை பேசி வருகிறார். ஆனால், அவரது அமைச்சரவையில் இருப்பவரின் மகனே வடிகால்வாயை ஆக்கிரமித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் மீஞ்சூர் - திருவொற்றியூர் 100 அடி சாலை அருகே, தமிழக தொழில் மற்றும் ஊரகத்துறை அமைச்சர் பெஞ்சமின் மனைவி, மகன் விஜய்பெரிலினுக்கு சொந்தமான இடம் இருக்கிறது. அங்கு பெட்ரோல் பங்கும் செயல்பட்டு வருகிறது.

 

admk



சாலைக்கும் அமைச்சரின் இடத்திற்கும் இடையே 30 அடியில் ஓடைநீர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாயை ஆக்கிரமித்து அதன்மீது வணிக வளாகம் கட்ட ஆரம்பித்தார் விஜய்பெர்லின். அமைச்சரின் மகன் என்று முதலில் பொதுமக்கள் இதை எதிர்க்க தயங்கினர். ஆனாலும் இதனால் பின்னால் ஏற்படப்போகும் விபரீதங்களை உணர்ந்து, இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சட்டத்திற்கு புறம்பாக கால்வாயை ஆக்கிரமிப்பு செய்தவர்களை விட்டுவிட்டு, போராட்டம் நடத்திய இளைஞர்களை இரவோடு இரவாக வீடுபுகுந்து கைது செய்துள்ளது காவல்துறை.

 

admk



இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய போராட்டக்காரர்களில் ஒருவரான சி.பி. எம். கட்சி பிரமுகர் கோபால், "நீர்நிலைகளை பாதுகாக்கணும்னு முதல்வர் சொல்றாரு. ஆனா, அதே கட்சி அமைச்சர் மகனே மழைநீர் கால்வாய் மீது வணிக வளாகம் கட்டுகிறார். எதிர்த்துக் கேட்டா ஜெயில்ல போடுறாங்க. வேம்பாக்கத்துல இருந்து எங்கஊர் வழியா கொக்குமேடு ஏரிக்கு முப்பது அடி அகல மழைநீர் கால்வாய் போகுது. அதை ஒட்டியே தடப்பெரும்பாக்கத்துல அமைச்சர் பெஞ்சமின் மனைவி ஷீலா மற்றும் மகன் விஜய்பெர்லின் பெயருல இடம் இருக்கு’’ என்று ஆவணத்தைக் காட்டினார்.

 

admk



மேலும், "அதுல பெட்ரோல் பங்கும் செயல்பட்டு வருது. இப்போ அதுக்கு பக்கத்துல இந்த மழைநீர் கால்வாய் ஓடுது. அது மேல கட்டிடம் கட்டுறார். அதை பொதுமக்கள் எதிர்த்தாங்க. அப்போ அங்க வந்த பொன்னேரி காவல் ஆய்வாளர் பால்ராஜ் எல்லோரையும் சமாதானப் படுத்தி வேலையை நிறுத்தினார். ஆனா, அடுத்தநாளே கட்டுமான வேலைய துவங்கினாங்க. கட்டுமான வேலையை நிறுத்தச்சொல்லி மீண்டும் மக்கள் போராட்டம் நடத்தினாங்க. அதற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ) அனுமதியோடத்தான் கட்டுமான வேலை நடக்குதுன்னு சொன்னாங்க.

வருவாய்த்துறைக்கு சம்பந்தப்பட்ட இடத்துல அதுவும் நீர்ப்பிடிப்பு பகுதியில யாரும் கட்டிடம் கட்ட அனுமதிக்கமாட்டாங்க. அப்படியிருக்கும்போது இங்கே கட்டுமானம் அமைக்க யார் அனுமதி வழங்கியதுன்னு கேட்டு, வட்டாட்சியர் அலுவலகம் முன்னாடி போராட்டமும் நடத்துனோம். தாசில்தார் மணிகண்டன் காலில் விழுந்தும் மக்கள் போராடினாங்க. அப்படியும் கொஞ்சம்கூட அவர் மனமிரங்கல.


அன்று இரவு ஒன்றரை மணிக்கு, போராட்டம் நடத்திய இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மதன் மற்றும் பாலாஜியை வீடு புகுந்து போலீசார் கைது செய்து கூட்டிட்டுப் போனாங்க. பொன்னேரி காவல் நிலையத்துக்கு போய் பார்த்தா அவுங்க அங்க இல்ல. மறுநாள் காலை வரைக்கும் எங்க தேடியும் கிடைக்கல. மத்தியானத்துக்கு மேலதான் திருப்பாலைவனம் போலீஸ் ஸ்டேசன்ல இருக்குறதை கண்டுபிடிச்சோம். திரும்பவும் மக்கள் அங்க கூடி போராட்டம் நடத்தியதால மதனையும், பாலாஜியையும் விடுவிச்சாங்க. அமைச்சரோட பவரைக் காட்டி மக்களை மிரட்டிக்கொண்டே வந்தவங்க, தற்போது கட்டுமான வேலையை நிறுத்தியிருக்காங்க'' என்றார்.


பொன்னேரி தாசில்தார் மணிகண்டனிடம் இது குறித்து கேட்டபோது, "நான்தான் அங்கு நடந்த வேலையை நிறுத்தினேன். மற்ற படி இதுபற்றி ஆர்.டி.ஓ. நந்தகுமார் சார்கிட்ட தான் நீங்க பேசணும்''’என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

பொன்னேரி ஆய்வாளர் பால்ராஜிடம் நாம் பேசியபோது, "தேவையில்லாம கூட்டம் சேர்த்தாங்க. அதனால்தான் கைது செய்தோம்''’என்றார். "போராட் டத்தின்போதே கைது செய்யாமல், ஏன் நள்ளிரவு ஒரு மணிக்கு தீவிரவாதி போல கைது செய்தீர்கள்' என்று கேட்டதும், எதுவும் பேசாமல் தொடர்பை துண்டித்து விட்டார். தொடர் முயற்சிக்கு பின்னர் இதுகுறித்து நம்மிடம் பேசினார் அமைச்சர் பெஞ்சமின். அவர், "அந்த இடம் என் மகன் விஜய்பெர்லினுக்கு சொந்தமானது. முறையான அனுமதி வாங்கி கட்டினோம். ஆனா லோக்கல்ல அ.ம.மு.க. கட்சி பிரமுகர் பாலாஜி என்பவர் இரண்டு லட்சம் பணம் கேட்டு மிரட்டினார். என் மகன் தர மறுத்ததால் போராட் டம் நடத்தி என் பெயரை கெடுக்கப் பார்த்தார்கள். புகாரின் பெயரில் போலீசார் கைது செய் தாங்க. புகாரை வாபஸ் வாங்கியதால அவரை விடுவிச்சாங்க... அவ்வளவு தாங்க''’’என்று முடித்துக்கொண்டார்.

அமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக பாலாஜியிடம் கேட்டபோது, "இது அப்பட்டமான பொய். அமைச்சர்ங்கிற பவர்ல அவர் எது வேண்டுமானாலும் செய்யலாம். நான் மட்டுமா போராடினேன். ஊர் மக்களே போராடினாங்க. எல்லாத்துக்கும் விரைவில் விடிவுகாலம் வரும்' என்றார் ஆதங்கத்துடன்.

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.