Skip to main content

அதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர்களின் ஃபைட்... அமைச்சர்களின் திட்டத்தால் கோபமான எடப்பாடி!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

 அ.தி.மு.க.வில் அமைப்பு  ரீதியாக இரு மாவட்டமாக இருந்த கடலூரை தலா 3 சட்ட மன்றத் தொகுதிகள் கொண்ட மூன்று மாவட்டங்களாக இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் அண்மையில் உடைத்தனர். இதில் கிழக்கு மா.செ.வாக சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியனும், மத்திய மா.செ.வாக அமைச்சர் சம்பத்தும், மேற்கு மா.செ.வாக முன்னாள் எம்.பி. அருண் மொழித்தேவனும் நியமிக்கப்பட்டனர். இது பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில்,மாவட்டத்தைப் பிரித்து தனது அதிகார எல்லையை சுருக்கிவிட்டதாக பொருமிக் கொண்டிருக்கும் அமைச்சர் சம்பத், அமைச்சர் சண்முகம் கோலோச்சும் விழுப்புரம் மாவட்டத்தின் மீது கண் வைத்திருப்பது புதிய வில்லங்கத்தை உருவாக்கியுள்ளது.

 

admk



இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. தலைமைக் கழகத்தினர், விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு வடக்கு மா.செ.வாக அமைச்சர் சி.வி.சண்முகமும், தெற்கு மா.செ.வாக எம். எல்.ஏ. குமரகுருவும் இருக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை புதிய மாவட் டமாக உருவாக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச் சாமி. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளும், விழுப்புரத்தில் விழுப்புரம், திண்டிவனம்(தனி), வானூர்(தனி), விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கியுள்ளன.

"தலா 3 சட்டமன்றத் தொகுதிகள் எனக் கடலூரை கட்சி நிர்வாகத்திற்காக 3 மாவட்டங்களாகப் பிரித்தது போல, 6 சட்டமன்றங்களைக் கொண்டுள்ள விழுப்புரம் வருவாய் மாவட்டத்தை கட்சி நிர்வாகத்திற்காக பிரிக்க வேண்டாமா? கள்ளக்குறிச்சிக்கும் இதே அளவுகோல் வேண்டாமா?' என்பதே சம்பத்தின் கேள்வி. சம்பத்தும் சண்முகமும் ஒரே சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள். அதனால் ஈகோவும் இருக்கிறது.
 

admk



கட்சியின் சீனியர்களும் சமீபகாலமாக சீனில் இல்லாதவர்களுமான விழுப்புரம் மாவட்ட முன்னாள் எம்.பி. லட்சுமணனையும், கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் அமைச்சர் மோகனையும் தனித்தனியாக அழைத்துப் பேசியிருக்கிறார் சம்பத். "விழுப்புரத்தையும் கள்ளக்குறிச்சியையும் உடைக்க முதல்வரிடம் கோரிக்கை வையுங்கள். விழுப்புரத்தை உடைப்பதன் மூலம் நீங்களும் (லட்சுமணன்), கள்ளக்குறிச்சியை உடைப்பதன் மூலம் நீங்களும் (மோகன்) மா.செ.வாக முடியும்' என அவர்களை தூண்டிவிட்ட சம்பத், "முதல்வருக்கு நெருக்கமான சேலம் பிரமுகரை சந்தித்து பேசுங்கள்' என வலியுறுத்தியதோடு, "உங்களுக்காக நானும் அவரிடம் பேசுகிறேன்' எனவும் சொல்லியுள்ளார்.


சம்பத்தின் இந்த யோசனையை நடைமுறைப்படுத்த, லஷ்மணனும் மோகனும் ஏக ரகசியமாக களத்தில் குதித்துள்ளனர். தங்கள் மாவட்ட விவகாரத்தில் அடுத்த மாவட்ட அமைச்சர் செய்யும் உள்ளடி வேலையால் சி.வி.சண்முகமும் அவரது ஆதரவாளர்களும் ஏக கடுப்பில் இருக்கிறார்கள். விரைவில் விழுப்புரமும் கள்ளக்குறிச்சியும் உடைக்கப்படலாம். அப்படி உடைந்தால் சண்முகத்தின் அதிகார எல்லை சுருங்குவதோடு, எடப்பாடிக்கும் சண்முகத்துக்கும் மோதல் வெடிக்கும்''’என விவரிக்கிறார்கள்.


கட்சியில் லஷ்மணனுக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையில் அவரது ஆதரவாளர் களெல்லாம் சண்முகத்திடம் ஐக்கியமானார்கள். தற்போது, உடைக்கப்படும் விழுப்புரம் மாவட்டத்துக்கு லஷ்மணன்தான் மா.செ. என்கிற பேச்சு விழுப்புரத்தில் எதிரொலிப்பதால், "மீண்டும் உங்களோடு வந்துவிடுகிறோம்' என லஷ்மணனிடம் பேசி வருகின்றனர் அவரது முன்னாள் ஆதரவாளர்கள். இராமசாமி படையாச்சியார் மணிமண்டபத்தை திறந்து வைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூருக்கு வந்தபோது, கடலூர் எல்லையான ரெட்டிச்சாவடியில் அமைச்சர் சம்பத்தோடு இணைந்து எடப்பாடிக்கு வரவேற்பு தந்துள்ளார் லஷ்மணன். இதனையும் உன்னிப்பாக கவனித்துள்ளது சண்முகம் தரப்பு.

சண்முகத்திற்கு எதிராக சம்பத்தின் இந்த ரகசிய மூவ் குறித்து கிசுகிசுக்கும் ஓ.பி.எஸ். வட்டாரத்தில் விசாரித்தபோது, "விழுப்புரம் வடக்கு மா.செ.வாக ஏற்கனவே இருந்தவர் லஷ்மணன். சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தியபோது அவரோடு லஷ்மணனும் மோகனும் ஐக்கியமானார்கள். இதனால் லஷ்மணனின் மா.செ. பதவி பறிபோனது. இந்த நிலையில் மா.செ. பதவிக்காக இருவரும் ஓ.பி.எஸ்.சிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்'' என்கின்றனர்.

சண்முகத்தின் ஆதரவாளர்களிடம் பேசியபோது, "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெரும் வெற்றியைக் காட்டி, அ.தி.மு.க.வின் இமேஜை பலப்படுத்தியவர் எங்க அமைச்சர். அவரது மாவட்டத்தை பிரிப்பது அவ்வளவு ஈசியா? சண்முகம்தான் சும்மா இருப்பாரா? கடலூரில் உள்கட்சி பிரச்சனைகள் ஏகப்பட்டது இருந்ததால் அதை சமாளிக்க பிரித்தார்கள். விழுப்புரம் அப்படியல்ல. அடுத்த மாவட்டத்தில் உள்கட்சி கலாட்டாவை சம்பத் தூண்டிவிடுவதற்கு சண்முகம் பதிலடி தருவார்'' என்கிறார்கள் அழுத்தமாக.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியின் மா.செ.வாக இருக்கும் குமரகுரு, எடப்பாடியின் நம்பிக்கைக்குரியவர். அதனால்தான், மாவட்ட தொடக்க விழாவில் குமரகுருவின் மகன் நமச்சிவாயத்தை மேடையில் தனக்குப் பின்னால் அமர வைத்திருந்தார் எடப்பாடி. அதனால் கள்ளக்குறிச்சியை அமைப்பு ரீதியாக பிரிக்க மாட்டார். ஒருவேளை பிரித்தால் மா.செ. போட்டியில் எம்.எல்.ஏ. பிரபுவும், கள்ளக்குறிச்சி ஒ.செ. ராஜசேகரனும் மல்லுக்கட்டுவார்கள். இதையும் மீறி சம்பத்தின் சிபாரிசில் மோகனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் சம்பத்துக்கு எதிராக கள்ளக்குறிச்சி ர.ர.க்கள் கச்சைகட்டுவார்கள். இது எடப்பாடிக்கு தலைவலியை கொடுக்கும்'' என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள்.


 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.