Skip to main content

 எடப்பாடிக்கே சேலஞ்ச்  விட்ட அமைச்சர்!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

நடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஆறு தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த ரிப்போர்ட். அதனால் 19-ந்தேதி நடக்கும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இரண்டில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும், இல்லையென்றால் ஆட்சியைக் காப்பாற்ற முடியாது என எடப்பாடி அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார்.

 

eps



அதனால் சட்டமன்ற இடைத்தேர்தல் களத்தில் அ.தி.மு.க. வேகமாக களம் காண்கிறது. இந்த நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி ஜெயித்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் எடுக்கச் சொல்லி உத்தரவிட்டிருந்தார் எடப்பாடி. "மத்தியில் பா.ஜ.க. கூட்டணியில் எனக்கு மந்திரி பதவி வேண்டும்' என கண்டிஷன் போட்டுக்கொண்டிருக்கும் தம்பிதுரையிடம், "நீங்கள் கரூர் பாராளுமன்றத் தொகுதியில் ஜெயித்தால் மட்டும் போதாது, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் நமது கட்சி வெற்றிபெற்றால்தான் மத்திய மந்திரி பதவி'' என எதிர் கண்டிஷன் போட்டிருக்கிறார் எடப்பாடி.

 

senthilbalaji



அவருடன் சீனியர் அமைச்சர்களான செங்கோட்டையன், தங்கமணி, சுகாதாரத்துறை விஜயபாஸ்கர், போக்குவரத்து விஜயபாஸ்கர் ஆகியோரையும் தேர்தல் பொறுப்பாளர்களாக்கியுள்ளார். இவர்களுடன் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கே.சி.கருப்பணன் ஆகிய அமைச்சர்கள் மற்றும் திருச்சி, கரூர், நாமக்கல் பகுதி மா.செ.க்கள், ஒன்றிய செயலாளர்கள் என பெரிய படையே களமிறங்கியுள்ளது. அவர்களிடம் தனிப்பட்ட முறையில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது எடப்பாடி பேசியிருக்கிறார். 

 

admk



"செந்தில் பாலாஜி கவுண்டர். அ.தி.மு.க. மேற்கு மாவட்டத்தில்  கவுண்டர்கள் மத்தியில் செல்வாக்கோடு இருப்பதற்கு ஒரே காரணம் தி.மு.க.வில் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த வலிமையான தலைவர்கள் இல்லை. அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி ஜெயித்துவிட்டால், மேற்கு மண்டலத்தில் தி.மு.க.வை வளர்த்துவிடுவார். எனவே அவரைத் தோற்கடிக்க வேண்டும்'' என உருக்கமாக அரவக்குறிச்சி தேர்தல் பணியில் உள்ள சாதாரண அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.
 

admk



"திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, துரைக்கண்ணு, ராஜலட்சுமி ஆகிய அமைச்சர்களோடு கட்சியின் மற்றொரு சீனியர் தலைவரான வைத்தியலிங்கத்தை, தம்பிதுரைக்கு அட்வைஸ் செய்து அனுப்பியது போல அனுப்பியிருக்கிறார் எடப்பாடி. அதேபோல் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு சீனியர் அமைச்சரான சி.வி.சண்முகம், காமராஜ் ஆகியோருடன் சேவூர் ராமச்சந்திரன், பெஞ்சமின் மற்றும் பக்கத்து மாவட்ட அமைச்சரான ராஜலட்சுமியைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். ஒட்டப்பிடாரத்திற்கு கட்சியின் சீனியர் தலைவரான ஓ.எஸ்.மணியனை மற்ற இரண்டு தொகுதிகளில் சீனியர்களை களமிறக்கியது போலவே களமிறக்கியிருக்கிறார். ஆனால் சூலூர் தொகுதியில் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக திருப்பூர் மாவட்ட அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணன் கூட தொகுதிப் பக்கம் போகவில்லை. முழுக்க முழுக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பொறுப்பில்தான் தேர்தல் வேலைகளை எடப்பாடி ஒப்படைத்துள்ளார்.

 

eps



இந்த அமைச்சர் பட்டாளத்திற்கு என்ன வேலை என எடப்பாடி வேலை பிரிவினை ஒன்றையும் தந்துள்ளார். ஒவ்வொரு அமைச்சரும் 14,000 வாக்குகளுக்கு பொறுப்பாளர். அவர்கள் 14,000 வாக்குகளுக்கு பணம் கொடுக்க வேண்டும். நான்கு தொகுதிகளில் சூலூரில்தான் அதிகபட்ச தொகையாக ஓட்டுக்கு 4,000 ரூபாய் கொடுக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அரவக்குறிச்சியில் அது ஓட்டுக்கு 3,000 ஆக குறைந்துள்ளது. ஒட்டப்பிடாரத்தில் 2,000 என ஓட்டுக்கு தர முடிவு செய்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஓட்டுக்கு 2,000 இப்போதே முதல்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளது'' என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். 

"இதில் அதிக வருமானம் இல்லாத அமைச்சர்களின் சுமையை வருமானம் அதிகம் பார்க்கும் துறையை வைத்துள்ள அமைச்சர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த விநியோகத்தை மாநில உளவுத்துறை போலீசாரும் சி.பி.சி.ஐ.டி. தலைவரான ஜாபர்சேட்டும் கண்காணிப்பார்கள் என எடப்பாடி ஒரு வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். 

இந்த வேலைத் திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது... அதில் உள்ள சங்கடங்கள், இந்த பண விநியோகத்தை எதிர்க்கட்சியான தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் எப்படி எதிர்கொள்கின்றன என அ.தி.மு.க.வினரிடம் கேட்டோம். "அரவக்குறிச்சியில் அ.தி.மு.க., ஓட்டுக்கு 3,000 ரூபாய் பணம் கொடுத்தால் அதைவிட அதிகமாக 4,000 ரூபாய் பணம் கொடுக்க செந்தில்பாலாஜி ஏற்பாடு  செய்துவிட்டார். அதனால் அரவக்குறிச்சியில் பண விநியோகத்தில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. ஒட்டப்பிடாரத்தில் அமைச்சர் காமராஜ், "நான் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்தித்தவன். கலைஞரின் தொகுதியிலேயே 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. ஜெயிக்கும் அளவிற்கு பணத்தை அள்ளி வீசினேன். ஒட்டப்பிடாரத்தில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வெற்றிபெற வைப்பேன்' என எடப்பாடிக்கே சேலஞ்ச் விட்டிருக்கிறார். அவருக்குப் போட்டியாக சி.வி.சண்முகமும் பண விநியோகத்தில் வேகம் காட்டுகிறார். இவர்களோடு சீனியர் தலைவரான வைத்தியலிங்கமும் பண விநியோகத்தில் முனைப்பு காட்டுகிறார்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அரவக்குறிச்சி தேர்தல் களத்தில் இருக்கும் சுகாதாரம் விஜயபாஸ்கர் மூலம் பணத்தை விநியோகிக்க உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி. சூலூர் தொகுதியில் ஒன்மேன் ஷோவாக ஒட்டுமொத்த பண விநியோகத்தையும் எஸ்.பி.வேலுமணி மேற்கொள்கிறார். இந்த பண விநியோகத்தைத்தான் அ.தி.மு.க. தனது பலமாகப் பார்க்கிறது. இதன்மூலம்தான் சூலூர், ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் அ.தி.மு.க. ஜெயிக்கும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் கடும் போட்டியை ஏற்படுத்துவோம் என்கிற அ.தி.மு.க.வினர், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜியை வீழ்த்த, அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க.வும் கைகோர்த்திருக்கிறது'' என்கிறார்கள்.
 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.