Skip to main content

மாவட்டத்தை பிரிக்கிறார்களோ,இல்லையோ... அதிமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண் டாகப் பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பொது மக்களும் வர்த்தகர்களும் போராடி ஓய்ந்து விட்டனர். ஆனால் நாகை மாவட்ட அ.தி. மு.க.விலோ, "கட்சி ரீதியாக மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தே ஆகவேண்டும்' என்ற சலசலப்பு ஆரம்பமாகியுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் அமைச்சர் ஓ.எஸ். மணியன்தான்.

அந்த மாவட்டத்தின் அ.தி.மு.க. சீனியர் ஒருவர் நம்மிடம் பேச ஆரம்பித்தார்.  சசிகலா குடும்பத்தின் விசுவாசியாக இருந்த ஓ.எஸ்.மணியன்தான் இந்த மாவட்டத்தின் மா.செ.வாக இருந்தார். ஒரு கட்டத்தில் இவரின் நடவடிக்கைகளால் கடுப்பான ஜெயலலிதா, மா.செ.பதவியிலிருந்து மணியனை நீக்கிவிட்டு, அமைச்சர் ஜெயபாலை மா.செ.வாக்கினார். கட்சிக்காரர்களும் பொதுமக்களும் அமைச்சர் ஜெயபாலை எளிதாக சந்திக்கலாம். அவரும் கட்சிக்காரர்களுடன் மிக எளிமையாக பழகி, அரவணைத்துச் செல்வார். அப்போதே மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்றார் ஜெயபால்.

 

admk



சசிகலா குடும்பத்தின் கிருபையால், திடீரென ஜெயபாலுக்கு கல்தா கொடுத்து விட்டு, மீண்டும் ஓ.எஸ்.மணியனை மா.செ.வாக்கினார் ஜெயலலிதா. அன்றிலிருந்து இன்று வரை மணியனின் ராஜ்யம்தான். இப்போதுகூட மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, ஊரின் முக்கியப் பிரமுகர்கள் சந்திக்கச் சென்றபோது, அவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார் மணியன். இவரின் தர்பாரை பொறுக்க முடியாமல்தான் பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜ், முதல்வர் எடப்பாடியை சமீபத்தில் சந்தித்தார்.


அப்போது, நான் இரண்டு முறை எம்.எல்.ஏ.வா இருந்திருக்கேன். ஆனா அவரோ இப்பதான் எம்.எல்.ஏ.வானாரு. அவருக்கு அமைச்சர் பதவியும் மா.செ.பதவியும் கொடுத்திருக்கீங்க. அதனால என்னை அமைச்சராக்குங்க, இல்லேன்னா மா.செ.பதவி கொடுங்க. அப்படி கொடுக்கலேன்னா, மாவட்டத்தைப் பிரிக்கப் போராடும் மக்களுடன் நானும், எனது ஆட்களும் களத்தில் இறங்குவோம்''’என ஓப்பனாகவே பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார்''’என்றார். "இதெல்லாம் உண்மையா?' என எம்.எல்.ஏ. பவுன்ராஜின் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டோம். உண்மைதாங்க. இந்த மாவட்டத்திலேயே அதிக வருமானம் தரக்கூடிய கோட்டம் மயிலாடுதுறைதான். அதை முழுமையா அறுவடை செய்பவர் மணியன்தான். கொள்ளிடம் பெட் டேமுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட, அவரது இறால் குட்டையை வளப்படுத்த வேதாரண்யம் கள்ளி மேட்டுக்கு கொண்டு போய்ட்டார். அதேபோல் கொள்ளிடம் ஆற்று மணல் சம்பாத்தியம் மொத்தத்தையும் மணியனே சுருட்றாரு.

தேர்தலப்ப மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பேன்னு பவுன்ராஜ் கொடுத்த வாக்குறுதிய மக்கள் இப்ப அவர்ட்ட கேக்குறாங்க. இதைத்தான் கட்சியின் செயற்குழுவில் இ.பி.எஸ்.சிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் கேட்டார் பவுன்ராஜ். இதனால் கடுப்பான மணியன், கூட்டத்திலிருந்து பாதியிலேயே கிளம்பிவிட்டார். அரசாங்க ரீதியாக மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கிறார்களோ, இல்லையோ... கட்சி ரீதியாக இரண்டாகப் பிரித்தால் சரிப்பட்டு வரும், அதற்கான வேலைகளும் நடக்கிறது''’என்றார். கட்சிக்குள் மாவட்ட பிரிப்பு புகைச்சல் இருப்பது உண்மையா என தெரிந்துகொள்ள அமைச்சர் ஓ.எஸ்.மணியனை பலமுறை தொடர்புகொண்டும் பலனில்லை. அமைச்சருக்கு உதவியாக இருக்கும் ஒருவர் நம்மைத் தொடர்புகொண்டு, “எம்.எல்.ஏ. பவுன்ராஜ், மா.செ. பதவியோ, அமைச்சர் பதவியோ கேட்டாரான்னு தெரியாது. ஆனா அன்னைக்கு கூட்டத்திலிருந்து அமைச்சர் பாதியிலேயே வந்ததுக்கு காரணம், அவரின் உறவினர் ஒருவர் இறந்து விட்டதால்தான்''’என்றார்.

இரண்டு தரப்புக்கும் பொதுவான ர.ர. ஒருவர், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., பா.ம.க., பா.ஜ.க. கட்சிகளில் நாகை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்கள் இருப்பது போல் எங்க கட்சியிலும் இருந்தா என்ன தப்பு?''’என்கிறார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.