Skip to main content

எடப்பாடியை நெருக்கும் மாவட்டச் செயலாளர்கள்! கூட்டு சேரும் ஓ.பி.எஸ். சசிகலா! 

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

ADMK leader issue ops and sasikala

 

அ.தி.மு.க.வின் அடுத்த பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த பொதுக்குழுவுக்காக மீண்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை இறைக்கும் கட்டாயத்திற்கு எடப்பாடி தள்ளப்பட்டிருக்கிறார்.

 

மா.செ.க்களுக்கு மட்டும் 23-ஆம் தேதி பொதுக்குழுவுக்காக பத்து கோடி பேசப்பட்டது. அதில் 8 கோடி தரப்பட்டது. மீதம் பிறகு தருகிறோம் என தவணை கூறப்பட்டது. இப்போது மீண்டும் பொதுக்குழு கூடுவதால் மீதம் தரவேண்டிய 2 கோடியுடன் மூன்று கோடி சேர்த்து ரவுண்ட்டாக ஐந்து கோடி கொடுங்கள் என மா.செ.க்கள் தரப்பிலிருந்து டிமாண்ட் வந்திருக்கிறது.

 

எடப்பாடிக்கு இந்த பொதுக் குழுவை நடத்துவதற்கு விஜயபாஸ்கர் பெரிய தொகை கொடுத்துள்ளார். அது தவிர கொங்கு மண்டல தொழிலதிபர்களிடம் பெரும் நிதி வசூல் செய்யப்பட்டது. 23-ஆம் தேதியே எடப்பாடி தான் ஒற்றைத் தலைமை. அவர்தான் அ.தி.மு.க.வின் எதிர்காலம் என நிரூபிக்கப்பட்டுவிட்டது. மறுபடியும் பொதுக்குழு கூட்ட எதற்கு மீண்டும் செலவு செய்ய வேண்டும் என தொழிலதிபர்கள் தயக்கம் காட்டியிருக்கிறார்கள். அதற்குப் பதிலளித்த எடப்பாடி தரப்பினர், "நடைபெற்றது பொதுக்குழு அல்ல. காலை பத்து மணிக்கு நடை பெறும் பொதுக்குழுவுக்கு அதிகாலை 5:00 மணிக்கே திருமண மண்டபத்தில் கொங்குமண்டலத்தில் இருந்து ஆட்களை கொண்டு போய் நிரப்பினார்கள். காலை 6:30 மணிக்கு லைவ் ரிலே எடுத்த தொலைக்காட்சிகளில் ஒற்றைத் தலைமை எடப்பாடி என கொங்கு பாஷையில் மண்டபத்தில் இருந்தவர்கள் பேசினார்கள். செயற்குழு, பொதுக்குழு என்றார்கள்.

 

ADMK leader issue ops and sasikala

 

ஜெ. காலத்தில் செயற்குழு கூட்டம், பொதுக்குழுவுக்கு முன்பு ஐந்து நிமிடம் டிராமா போல நடத்துவார்கள். இந்தமுறை அதெல்லாம் நடத்தவில்லை. நேரடியாக பொதுக்குழு நடத்தப்பட்டது. அதில் ஒருமாதம் கஷ்டப்பட்டு நடத்திய கட்சித் தேர்தலுக்கு அங்கீகாரம் பெற வேண்டிய தீர்மானம் உட்பட அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. இப்பொழுது கட்சி என்பதே இல்லை. கட்சியின் அதிகாரப்பூர்வ லெட்டர்பேடில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட யார் பெயரும் இல்லை. ஓ.பி.எஸ். பெயரை நீக்குகிறோம் என ஆரம்பித்து, எல்லோர் பெயரையும் நீக்கிவிட்டார்கள். எனவே இந்த முறை மறுபடியும் பொதுக்குழு நடைபெறாவிட்டால் அ.தி.மு.க. என்கிற கட்சியே இருக்காது என பதில் சொல்லி பணம் வசூலிக்கப்பட்டது.

 

கடந்த முறை காசு கொடுக்க மந்திரிகளிடம் எடப்பாடி அதட்டி, உருட்டி பணம் கேட்டிருக்கிறார். அவர்களும் கொடுத்திருக்கிறார்கள். மறுபடியும் கோடிகளில் செலவு செய்து பொதுக்குழு நாடகம் அரங்கேற்றப்படுகிறது என்கின்றன அ.தி.மு.க. வட்டாரங்கள்.

 

இதற்கிடையே இந்தக் குழப்பத்தில் குளிர் காய்வதற்கு பா.ஜ.க.வும் களமிறங்கிவிட்டது. பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வமான நிதி திரட்டித் தருபவரும் மோடியின் வலதுகரமான மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், கோவைக்கு வந்திருக்கிறார். பியூஷ்கோயல், முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் அதிகபட்ச மரியாதையும் பணிவும் காட்டினார். கோவை வந்த பியூஷ்கோயலை எடப்பாடிக்காக பண உதவிகள் வழங்கும் திரிவேணி எர்த் மூவர்ஸ் மற்றும் லாட்டரி அதிபர் மார்ட்டின் ஆகியோர் சந்தித்தார்கள். அவர்களோடு கோவையில் எடப்பாடிக்கு ஆதரவான ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களும் சந்தித்தனர். ஒரு பெரிய தொகை அங்கே பா.ஜ.க.வுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு பியூஷ்கோயல் மிகவும் பணிவுடன் வேலுமணியிடம் நடந்துகொண்டார் என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

 

இப்படி எல்லா வகையிலும் அடுத்த பொதுக்குழுவுக்காக தயாராகி வரும் எடப்பாடி, அ.தி.மு.க.விற்கு புதிய நிர்வாகிகளையும் நியமிக்கவுள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி, துணை பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி, விஜயபாஸ்கர், பொருளாளர் மற்றும் தலைமை நிலைய செயலாளராக ஜெயக்குமார், சி.வி.சண்முகம் என லிஸ்ட் தயாராகி வருகிறது என்கிறது க்ரீன்வேஸ் சாலை வட்டாரங்கள்.

 

ஆனால் கேம் இப்படி ஒன் சைடாகவே இருந்துவிடவில்லை. எப்பொழுதும் அ.தி.மு.க.வில் குறுக்குசால் ஒன்று ஓடும். இந்த முறையும் அந்த குறுக்குசாலை ஓட்டுபவர் சசிகலாவாகத்தான் இருக்கிறார். ஒரு கல்யாண மண்டபத்தில் பத்துபேர் கூடி எடுக்கிறது எல்லாம் ஒரு முடிவா? என நடைபெற்ற பொதுக்குழுவை சசிகலா கிண்டலடித்திருக்கிறார்.

 

அவர் அப்படிப் பேசுவதற்கு காரணம் இந்த பொதுக் குழுவிற்குப் பிறகு எடப்பாடி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் தவிர மற்ற அனைவரும் சசிகலாவிடம் பேச ஆரம்பித்திருப்பது தான். ஜெயக்குமார்கூட சசிகலாவின் சகோதரர் திவாகரனிடம் பேசுகிறார். ஓ.பி.எஸ். நேரடியாக சசிகலாவிடமும், டி.டி.வி.தினகரனிடமும் தினமும் பேசுகிறார். அந்த உற்சாகத்தில்தான் "நான் மீண்டும் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துவேன். ஒற்றைத் தலைமையாக என்னை அமரைவைக்க வேண்டும் என அ.தி.மு.க. தொண்டர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்' என திருத்தணி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வட மாவட்டங்களில் நடக்கும் அரசியல் யாத்திரையின்போது சசிகலா பேசி வருகிறார். அத்துடன் தொண்டர்களும் வாக்காளர்களும் முடிவு செய்வதுதான் கட்சி என எடப்பாடி நடத்தும் கூட்ட வைபவங்களை சசிகலா நக்கலடிப்பது எடப்பாடி தரப்பை டென்ஷன் அடைய வைத்திருக்கிறது.

 

இந்நிலையில், இதேபோல ஒரு பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய நிகழ்வை எதிர்த்து இப்பொழுது ஓ.பி.எஸ். நடத்தும் சட்டப் போராட்டத்தில் சசிகலாவும் இணைந்து போராட திட்டமிட்டிருக்கிறார் என்கிறது சசிகலா வட்டாரங்கள்.

 

ADMK leader issue ops and sasikala

 

இந்நிலையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசித்திருக்கிறார் எடப்பாடி. கட்சியின் உயர்ந்தபட்ச அரசியல் முடிவுகளை எடுக்கும் வலிமை பொதுக்குழுவுக்குத்தான் இருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடிக்கு சாதகமாக இருப்பதால் எடப்பாடி பொதுச்செயலாளராவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அந்தப் பதவிக்கு கிளைக் கழகங்களில் இருக்கும் உறுப்பினர்களின் ஆதரவையும் பெறவேண்டும். அதனால் பொதுச்செயலாளராக பதவியைப் பெற்றவுடன் அனைத்து கிளைக் கழகங்களையும் கூட்டி பொதுக்குழு தீர்மானத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினால் போதும். தேர்தல் கமிஷன் அதை ஏற்றுக்கொள்ளும் என சட்ட வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள்.


ஆனால் கடந்தமுறை சசிகலாவுக்கு எதிராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தேர்தல் கமிஷனில் உத்தரவு பெற்றதற்குக் காரணம் பா.ஜ.க. அந்த பா.ஜ.க. இந்தமுறை எப்படியிருக்கும் என டெல்லி சென்ற ஓ.பி.எஸ்., பா.ஜ.க.. வட்டாரங்களில் நல்ல அறிமுகத்தைப் பெற்றுள்ள தனது மகன் ரவீந்திரநாத் மூலம் முயற்சி செய்துவருகிறார்.


எடப்பாடிக்கு கோவை ஆர்.எஸ்.எஸ். டீம் ஆதரவு தருவதுபோல கடந்த முறை ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக களம் கண்ட பா.ஜ.க.வினரை ஓ.பி.எஸ். தொடர்புகொண்டார். அதில் குருமூர்த்தி தரப்பினரும் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக இயங்குகின்றனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில், குஜராத் கலவரத்திற்கு மோடி காரணமல்ல என தீர்ப்பு பெறுவது, ஜனாதிபதி தேர்தல், ஜெர்மன் பயணம் என பிஸியாக இருந்த மோடி, ஓ.பி.எஸ்.ஸை கண்டுகொள்ளவில்லை, அதனால் நிர்மலா சீதாராமனும், ஓ.பி.எஸ்.ஸை சந்திக்க விரும்பவில்லை. இருந்தாலும் பா.ஜ.க. பிரமுகர்களை மட்டும் சந்தித்துவிட்டு வந்தார் ஓ.பி.எஸ். என்கிறது டெல்லி வட்டாரங்கள்.


இதற்கிடையே மதுரையிலிருந்து தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ்.ஸுக்கு பொதுக்குழுவில் நிகழ்த்தப்பட்ட அவமானம், முக்குலத்தோர் சமுதாயத்துக்கு நிகழ்த்தப்பட்ட அவமானம் என்கிற கோஷத்தை முன் வைத்து களமிறங்கியிருக்கிறார் ஓ.பி.எஸ். அவருக்கு இணையாக சசிகலா, வட மாவட்ட டூர் தொடங்கியுள்ளார். எடப்பாடி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்த பொதுக் குழுவுக்கு தயாராகி வருகிறார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.

 

 

Next Story

மகளிர் வாக்குகளை ஈர்க்கும் திமுக! தேர்தல் வியூக வகுப்பாளர்கள் கணிப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 Election strategists prediction on Clean sweep victory in the election

அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் முக்கியமான பகுதியினர் பெண்கள். அந்த வாக்கு வங்கியை இலக்காக வைத்து, தி.மு.க தொடர்ச்சியாக வேலை செய்து வருவது இந்தத் தேர்தலில் வெளிப்படையாகத் தெரிகின்றது. 2024 தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிய மூன்று முக்கியமான விஷயங்கள்,  மகளிர் உரிமைத் தொகை, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவை. இத்துடன் காலை உணவுத் திட்டம். இவை அனைத்தும் பெண் வாக்காளர்களின் மனங்களை ஒட்டுமொத்தமாக கவரும் நோக்கத்திலானவை என்பது வெளிப் படையான உண்மை !

முந்தைய தலைமுறைக்கு முன்னர் பெண்கள் படிப்பதும், படித்து முடித்து விட்டாலும் வேலைக்கு செல்வது என்பதும் அவ்வளவு எளிதானதாக இல்லை. இதனால் பாலின சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கு கல்வியும், பொருளாதார விடுதலையும் முக்கியமானதாக பேசப்பட்டது. டாக்டர் பட்டமே பெண் பெற்றிருந்தாலும் வேலைக்கு சென்று பொருள் ஈட்டவில்லை எனில், அந்தப் பட்டம் வெறும் திருமண பத்திரிக்கையில் பெயருடன் இணைத்துக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும். உலகம் முழுவதும் பெண்கள் முன்னேற்றம் என்பது பல மடங்கு இந்தியாவை விட உயர்ந்திருப்பதற்கு காரணம், அங்கெல்லாம் குடும்பக் கட்டுப்பாடுகள் இல்லை என்பதுதான்.

திராவிட இயக்கங்களின் மிக முக்கியமான இலக்கு பெண் உரிமையும், சமத்துவமும் தான். பெரியார், பெண் உரிமைகளுக்கு எனத் தனித் தீர்மானங்களையும் நிறைவேற்றி இருக்கிறார். 1929 ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் ‘பெண்களுக்கு சொத்தில் சம உரிமை’ எனும் தீர்மானம். பெரியார் உயிருடன் இருக்கும் வரை, அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், 1989 ஆம் ஆண்டு கலைஞரால் தமிழ் நாட்டில் பெரியார் கண்ட கனவு சட்டமாக்கப்பட்டது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இந்த வரலாற்றில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலம், பெண் பொருளாதாரச் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்தினார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பெண்களின் உயர் கல்விக்கு மாதம் 1000 ரூபாய் இவையும் பெண்களைக் கவரும் திட்டங்கள். இத்திட்டங்களின் மூலம் 1 கோடியே 6 இலட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். இது உளவியல் ரீதியாக பெண்களுக்குப்  பெரும் பலத்தைக் கொடுக்கிறது இந்தத் திட்டங்கள்.

கலைஞர் கொண்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தைத்தான், ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 50000 ஆகவும், தாலிக்கு தங்கம் என்றும் அறிவித்தார்.  இதே திட்டத்தைதான், இன்றைய கால வளர்ச்சிக்கு ஏற்ப முதலமைச்சர் ஸ்டாலின், ‘புதுமைப் பெண் திட்டம்’ ஆக மாற்றி, தாலிக்குத் தங்கம் என்பதைவிட, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 என்ற முற்போக்கான திட்டமாகக் கொண்டுவந்தார். இது இளம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தால் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை 29 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலேயே பெண்கள் உயர்கல்வி சேர்க்கையில் 48.6% பெற்று பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலாவதாக உள்ளது. இன்னும் 5 வருடங்களில் புதுமைப் பெண் திட்டம் மூலமாகத் தமிழ்நாடு மிக பெரிய அளவில் முன்னேறி இருக்கும்.

தாலிக்குத் தங்கம் தராமல் இருப்பதைத் தங்களுக்குச் சாதகம் ஆக்கிக் கொள்ள முடியுமா என்று இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் முயலுகின்றனர். ஆனால் பெண் பிள்ளைகள் கல்வி பயில வேண்டும் என்பதைத்தான் தாய்மார்கள் விரும்புகின்றனர். 1921-இல் பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது நீதிக்கட்சி. அப்போது தொடங்கி, பெண்கள் உரிமையில் இரண்டு திராவிடக் கட்சிகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதில், எம்.ஜி.ஆர் என்கிற ஆளுமை பிம்பமும், ஜெயலலிதா என்கிற பெண் ஆளுமைப் பிம்பமும் அ.தி.மு.கவிற்குப் பெண்கள் வாக்கு வங்கியை உருவாக்கித் திடப்படுத்தியது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இப்போது அந்த வாக்கு வங்கியைத் தனக்கானதாக மாற்ற ஸ்டாலின் முயன்றுள்ளார். அதில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கணிசமாக வெற்றி பெறவும் செய்தார். 2024 இல் இன்னும் பெரிய அளவில் பெண்கள் தி.மு.கவிற்கு வாக்கு அளிப்பார்கள் என்று கணிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் ஏழைப் பெண்களுக்கு ஆண்டிற்கு 1 இலட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம், மத்திய வேலைவாய்ப்பில் 50 சதவிகிதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு ஆகியவையும் பெண் வாக்காளர்களைக் கவர்ந்திருப்பதாகவே சில புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்களே இம்முறை 10 லட்சத்து 89 ஆயிரத்து 394 பேர் அதிகமாக இருக்கிறார்கள். அதனால், இந்த முறை பெண்கள் அளிக்கும் வாக்குகள், தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வெற்றியை  க்ளின் ஸ்வீப் செய்ய உதவும் என்கிறார்கள் தேர்தல் வியூக வகுப்பாளர்கள்.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.