Skip to main content

ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கித்தான் பாருங்களேன்! - வரலாற்றைப் புரட்டி விளக்கம்!

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

ADMK History repeats on OPS issue

 

முக்குலத்தோர் சமுதாய மக்கள் மற்றும் இளைஞரணியினர் என்ற பெயரில் விருதுநகர் மாவட்டம் – சாத்தூர் – ஓ.மேட்டுப்பட்டியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியிருந்தனர். எடப்பாடி பழனிசாமியையும், சி.வி.சண்முகத்தையும் மட்டமான அடைமொழியோடு, அந்தக் கண்டன போஸ்டரில் விமர்சித்திருந்தனர். 

 

சரி, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து பெரும்பான்மை எடப்பாடி ஆதரவாளர்களால் நீக்கிவிட முடியுமா? என்ற கேள்விக்கு, ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து விரிவாக விளக்கம் அளிக்கின்றனர். 

 

'நான் தான்' அதிமுக என எம்.ஜி.ஆர். மனைவி வி.என்.ஜானகியும், ஜெயலலிதாவும் பிரிந்து நடத்திய யுத்தத்தில் இரட்டை இலைச் சின்னம் 1988 இறுதியில் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. 1989 தேர்தலில் ஜானகி அம்மாள் இரட்டைப் புறாவையும், ஜெயலலிதா சேவலையும் சின்னமாகப் பெற்றனர்.  இரு அணிகளும் மோதின. ஜானகி Vs ஜெயலலிதா என்றிருந்தாலும், அது ஆர்.எம்.வீரப்பன் Vs ஜெயலலிதா என்ற யுத்தமாகவே பார்க்கப்பட்டது. அந்தத் தேர்தலில்,  27 எம்.எல்.ஏ.க்களைப் பெற்று 22.37% வாக்குகளை வென்றெடுத்தது ஜெயலலிதா அணி. ஜானகி அணியோ, 9.19% வாக்குகளையும் 2 தொகுதிகளையும் மட்டுமே பெற்றிருந்தது.

 

ADMK History repeats on OPS issue

 

அப்போது,  அதிமுகவின் 31% வாக்குகள் இரண்டாகப் பிரிந்ததால், திமுக ஆட்சிக்கு வந்தது என்று நம்பப்பட்டது. ஒரு கட்டத்தில் ஜானகி, தான் பெற்ற 9.19% வாக்குகளுக்கான அணியை அப்படியே ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார். ஜெ மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைப்புக்குப் பிறகே, இரட்டை இலைச் சின்னம் மீண்டது. இதுதான் வரலாறு. 

 

இதே நிலை 2017-லும் வந்தது. சசிகலாவையும், டிடிவி தினகரனையும், அவரால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராகவும், ஓபிஎஸ் கிளர்ந்தெழுந்தார். மீண்டும் அதிமுக சின்னம் முடங்கியது.

 

தான் முதல்வராக வேண்டும் என்று, காலியான ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் இல்லாமல், அதிமுக தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை வந்தது. டிடிவி அணி தொப்பியையும், ஓபிஎஸ் அணி மின்விளக்கையும் பெற்று தேர்தலில் போட்டியிட்டது. இன்று இ.பி.எஸ்ஸோடு உள்ள அனைவரும் அன்று டிடிவியோடு இருந்தார்கள். முதல்வர் இபிஎஸ் கூட டிடிவி-க்காகப் பிரச்சாரம் செய்தார். ஆனால், யாருடைய பலமும் நிரூபிக்கப்படாமல், அந்தத் தேர்தல் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. பின்னாளில்,  இபிஎஸ் Vs டிடிவி என்றானது. ஓ.பி.எஸ்ஸும், இ.பி.எஸ்ஸும் இணைந்தனர். 

 

ADMK History repeats on OPS issue

 

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இணைந்தவுடன், டிடிவி தன் ஆதரவு எம்.எல்.ஏக்களை பிரித்துக்கொண்டு வெளியேறினார். அவர்கள் நீக்கப்பட்டனர். மீண்டும் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைந்ததால்,  இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட்டது, சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு, இரட்டை இலை – உதயசூரியன் என இரண்டு பெரிய கட்சிகளையும்  டிடிவி தினகரன் வென்றார்.

 

பிறகு 2019-ல், நீக்கப்பட்ட எ.எல்.ஏ.க்களுக்காக இடைத்தேர்தல் நடந்து, அதில் வென்று, அதிமுக ஆட்சியை தக்க வைத்ததை அறிவோம். இதில், ஜெயலலிதா Vs ஜானகிக்கும், ஓபிஎஸ் Vs இபிஎஸ்க்கும் நுட்பமான வேறுபாடு உள்ளது. இரட்டை இலைச் சின்னம் முடங்கி, வேறு சுயேட்சை சின்னங்களில், ஒரு பொதுத்தேர்தலில் இருவரும் போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபித்தவர்கள் ஜெயலலிதாவும், ஜானகியும். 

 

அதில் ஜெயலலிதாவால்தான் கட்சியை நடத்த முடியும் என்று ஜானகி அணி ஜெயலலிதா அணியோடு இணைந்து இரட்டை இலையைப் பெற்றது. ஆனால், ஒரு தேர்தலில் இபிஎஸ் – ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளும், தங்கள் பலத்தை நிரூபிப்பதற்கு முன்பே, சசிகலா - டிடிவி தலைமைமை ஏற்க விரும்பவில்லை என்ற பொதுப்புள்ளியில் இணைந்தது.

 

ADMK History repeats on OPS issue

 

ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்த பிறகு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை இலையை வழங்கியது தேர்தல் ஆணையம். தன் பலத்தை நிரூபித்து, தன் தலைமையை ஏற்றுக் கொண்டவர்களுடன் ஜெயலலிதா இரட்டை இலையைப் பெற்றதையும், ஓபிஎஸ் பலத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவியை வழங்கி, இபிஎஸ் அணி இரட்டை இலையை மீட்டதையும், ஒரே அளவுகோலாகப் பார்க்கமுடியாது.

 

2017-ல் மீண்ட இரட்டை இலைச் சின்னத்திற்கு இபிஎஸ் மட்டும் உரிமை கோர முடியாது. யாருடைய பலத்தையும் நிரூபிப்பதற்கு முன்பே, இரட்டை இலையை ஓபிஎஸ் உதவியுடன் மீட்டு, அவரை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக்கொண்டாகிவிட்டது. நாடாளுமன்றம், இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி, சட்டமன்றம், நகர்ப்புற உள்ளாட்சி என எல்லா தேர்தலுக்கும், இருவரும் கையெழுத்திட்டே இரட்டை இலை சின்னத்தைக் கொடுத்துள்ளனர். அது அறுவடை செய்த அனைத்து வாக்குகளுக்கும், இருவருக்குமே உரிமை கோரும் அதிகாரம் உள்ளது.

 

அதிமுக சட்டவிதிகளின் படி, பொதுச் செயலாளரை பொதுக்குழுவோ, நிர்வாகிகளோ சேர்ப்பதோ, நீக்குவதோ முடியாது. திமுகவில் கலைஞர் அப்படித்தான், தன்னை எளிமையாக நீக்கிவிட்டாரென யோசித்த எம்.ஜி.ஆர்., அதிமுகவுக்கு சிறப்பான சட்டங்களை வகுத்துள்ளார். பொதுச் செயலாளரையோ அல்லது அதற்கு நிகராக மாற்றப்பட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியையோ பொதுக்குழுவால் நீக்கவோ, நியமிக்கவோ முடியாது. அதேநேரத்தில், நியமிக்கப்பட்ட பொதுச் செயலாளர் சசிகலாவையும், துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனையும் நீக்கியது செல்லுபடியானது.

 

ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை, சட்டவிதிகளின்படி தேர்தல் முறையில் தேர்ந்தெடுத்துவிட்டனர். அதை பொதுக்குழு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒரு புள்ளி என்றாலும், பொதுக்குழுவே செல்லுமா? செல்லாதா? எனக் கேள்விகள் எழுந்தபிறகு, அவைத்தலைவர் நியமனம் செல்லுமா என்ற குழப்பமும் வந்தபிறகு, தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் என்பதுதான் நிற்கும்.

 

ஒருவேளை,  ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் காலாவதி ஆனது செல்லும் என்றாலும்கூட,  அவைத்தலைவர் நியமனமானது கேள்விக்குள்ளாகும். அதிமுக சட்ட விதிகளின்படி, பொதுச் செயலாளர் - துணை பொதுச் செயலாளர், அடுத்து பொருளாளர், அதற்கடுத்து தலைமை நிலையச் செயலாளர் என்பது தான் அதிகாரப் படிநிலை.

 

ஆகவே, பொதுச் செயலாளர் பதவிக்கு நிகரான ஒருங்கிணைப்பாளர் / இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானாலும் கூட, ஓபிஎஸ்-க்கு அதிமுகவின் மறைந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால்  அளிக்கப்பட்ட பொருளாளர் பதவியை யாராலும் நீக்க முடியாது. இபிஎஸ் தலைமை நிலையச் செயலாளராக இருந்தாலும், பொருளாளர் பதவிக்கும் பாதி அதிகாரம் போய்விடும். அதை, தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவாலும் நீக்க முடியவில்லை. 

 

ADMK History repeats on OPS issue

 

திமுக - அதிமுகவில் மிக முக்கியமான அதிகாரப் பதவி பொருளாளர். அதுவும் அதிமுக சட்டவிதிகளின்படி, தலைமைப் பதவியான பொதுச் செயலாளர் / துணை பொதுச் செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர் / இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலி என்றால், அதுவரையிலும் நிர்வாகமானது, பொருளாளர் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் கைக்கு மாறும். அப்படியே பார்த்தாலும், 50/50 கட்சி ஓபிஎஸ் - இபிஎஸ்க்குத்தான்.  ஓபிஎஸ்ஸை யாராலும் நீக்க முடியாது. நீக்கி அறிவித்தாலும் செல்லாது.  ஓ.பி.எஸ். கையெழுத்தில்லாமல், வருகிற ஜூலை 9-ம் தேதி நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் (இடைத்தேர்தல்) இரட்டை இலைச் சின்னத்தை கொடுக்க முடியாது. அதிமுகவினர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் சூழல் வரும்.


முதல்வர் வேட்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி போல,  இதை ஒருக்காலும் விட்டுக்கொடுக்க மாட்டார் ஓபிஎஸ். காரணம், இரட்டை இலைச் சின்னம்தான் வாக்குகளைப் பெற்றது, அந்தச் சின்னத்திற்கு தன்னுடைய கையெழுத்து வேண்டும்; அதை, தான் விட்டுக் கொடுக்காதவரை, யாராலும் பறிக்க முடியாது என்பதைப் புரிந்துள்ளார். 

 

இறுதியாக,  இந்தப் பிரச்சனை ஒரு நிலையை அடையும். அது, முறையாக பொதுச் செயலாளருக்கு தேர்தல் வைப்பது. அல்லது  ஒருங்கிணைப்பாளருக்கு தேர்தல் வைத்து தேர்ந்தெடுப்பது. அப்படி நகர்ந்தால்,  பலர் அந்த தலைமை பதவிக்குப் போட்டி போடலாம். அதில் ஒன்றிய, நகர, மாவட்ட, மாநகர என எல்லா கிளைகளிலும் பெட்டியை வைத்து, மினி தேர்தலையே ஆணையம் நடத்தும். இதில் ஓபிஎஸ் - இபிஎஸ் மட்டுமல்ல,  செங்கோட்டையனும் போட்டியிடலாம். இப்படி ஒரு நிலை வருவதற்கு முன்பே ஓபிஎஸ்ஸை நீக்கிவிடலாம் என்று நினைத்தால், அது நடப்பதற்கான சாத்தியம் இல்லை. இவ்வாறு வரலாற்றைப் புரட்டுகிறது ஓ.பி.எஸ். தரப்பு. 


இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். மோதலில் நிரந்தரத் தீர்வோ, தீர்ப்போ காலத்தின் கையிலிருக்கிறது. 

 

 

Next Story

அ.தி.மு.க. கூட்டணி; தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கீடு? 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
ADMK Alliance; Allotment of additional seats for DMDk

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது.

அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADMK Alliance; Allotment of additional seats for DMDk

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தேமுதிக சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததால் அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

திடீர் திருப்பம்; கூட்டணிக்கான ரூட்டை மாற்றிய பா.ம.க.?

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
sudden turn pmk has changed the route for the alliance

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளை வழங்க அ.தி.மு.க. மறுத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்ததால் பா.ஜ.க.வுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் கூட்டணி குறித்து முடிவெடுக்க தைலாபுரத்தில் பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் அவசர கூட்டம் கடந்த 15 ஆம் தேதி (15.03.2024) நடைபெற இருந்த நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகக் கூறப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், தென் சென்னை, சிதம்பரம், தர்மபுரி மற்றும் சேலம் என முக்கிய தொகுதிகளுடன் ஏழு பிளஸ் ஒன் (மாநிலங்களவை பதவி) என முடிவாக உள்ளதாகச் சொல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பா.ம.க. விரும்பும் 7 மக்களவைத் தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா பதவியையும் ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் இல்லத்தில் பா.ம.க. எம்.எல்..ஏ அருள் இ.பி.எஸ்சை திடீரென்று நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது எனத் தகவல் வெளியாகி இருந்தது. முன்னதாக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியை பாமக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

sudden turn pmk has changed the route for the alliance

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தின் போது பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ம.க. முக்கிய பங்காற்றும் என்று அன்புமணி பேசியதாகவும் கூறப்படுகிறது.