Skip to main content

அதிமுகவை அலறவிட்ட அப்பாவு...அதிர்ச்சியில் அதிமுக...ஆட்சியை இழக்குமா?

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்க கட்டத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமான இழுபறி நிலை நீடித்த சமயத்திலேயே பிரதமர் மோடி ஆளுங்கட்சி அ.தி.மு.க.வுக்கு காலை 11 மணிக்கே வாழ்த்துச் செய்தி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பல பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டது. அ.தி.மு.க.வின் முன்னணி நிலவரம் அதிகரித்து, ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மைக்குரிய தொகுதிகளுடன் வென்றது.

 

dmk



குறிப்பாக ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அப்பாவுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரைக்கும் இடையில் மிகப்பெரிய இழுபறி நீடித்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளுக்கும் அப்பாவுக்கும் வாக்குவாதம் நடைபெறும் அளவுக்கு சென்றது. வாக்கு எண்ணிக்கையில் 19, 20, 21 ஆவது சுற்றுகளில் பதிவான வாக்குகள் மற்றும் எண்ணப்பட்ட வாக்குகளின் கணக்கிற்கு தேர்தல் அதிகாரியின் கையெழுத்தே இல்லை. இந்தச் சுற்றுகளில் தனக்குச் சேரவேண்டிய வாக்குகளில் மோசடி நடைபெற்றதாக அப்பாவு கூறினார். அப்பாவுவின் கோரிக்கையை அவர்கள் கேட்கவே மறுத்தார்கள். 1508 தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் 300 வாக்குகளை நிராகரித்தார்கள். அதுதவிர, 203 வாக்குகளை எண்ணத் தகுதியற்றவை என்று பிரிக்கவே மறுத்தார்கள். இந்நிலையில்தான் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
 

admk



நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் அங்கீகார கையெழுத்துடன் இருந்ததால் 203 தபால் வாக்குகளை எண்ணவில்லை என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கையெழுத்து செல்லும் என்று ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், தேர்தல் அதிகாரிகளுடன் நியாயத்துக்காக போராடிய அப்பாவு துணை ராணுவ வீரர்களால் வாக்கு எண்ணும் இடத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.
 

dmk



தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். ஆண்டுக்கணக்கில் நீடித்த அந்த வழக்கு விசாரணை முடிவில், ராதாபுரம் வாக்கு எண்ணிக்கையில் எண்ணாமல் தவிர்த்த 203 வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்றும் 19, 20, 21 ஆகிய மூன்று சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களும் மறுபடியும் எண்ணப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை சார்பில் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அவசரஅவசரமாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, அக்டோபர் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 11.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ள அறையில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. உயர்நீதி மன்ற பதிவாளர் ஜெனரலால் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட, ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய்சரவணன் தலைமையில், 26 அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த அப்பாவு நம்மிடம், "தி.மு.க.வின் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. கடைசி 3 சுற்று வாக்குகளில் முடிவில் 1500 வாக்குகளுக்கு மேல் முன்னிலை பெற்றிருந்தேன். அதுபோல எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் தி.மு.க.வுக்கு 863 வாக்குகளும், அ.தி.மு.க.வுக்கு 200 வாக்குகளும் மட்டுமே கிடைத்தது. செல்லாது என்று எண்ண மறுத்த 203 தபால் வாக்குகளிலும் இதே அடிப்படையில்தான் வாக்குகள் பதிவாகி இருக்கும் என்பதால்தான் அதை எண்ண மறுத்தார்கள். எனவே, 49 வாக்குகள் வித்தியாசம் என்பதைத் தாண்டி, கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்


மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடத்தில் அ.தி.மு.க. இன்பதுரை, தி.மு.க. அப்பாவு ஆகியோருடன் அவர்களுக்கான வழக்கறிஞரையும் அனுமதித்தது உயர்நீதிமன்றம். தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தபோது, உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்ததை அறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரவீந்திர பட் அடங்கிய பெஞ்ச், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டது. இன்பதுரை தரப்பில் இடைக்கால நிம்மதி ஏற்பட்டாலும், அப்பாவு தரப்பில், கடைசியாக சிரிக்கப் போவது நாங்கள்தான் என்ற நம்பிக்கை வெளிப்பட்டது. யாருக்கு லீட் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியாத நிலையில், இந்த மறுவாக்கு எண்ணிக்கை முதல்வர் எடப்பாடி தொடங்கி, அ.தி.மு.க.வின் பல மட்டங்களிலும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

2016ல் மத்திய பா.ஜ.க. அரசின் சிக்னலில் தான் அ.தி.மு.க. லீட் காட்டியது என்ற விமர்சனம் அப்போதே கிளம்பிய நிலையில், மறுவாக்கு எண்ணிக்கையைத் தவிர்க்கவும், முடிவுகளை வெளியிடாதபடி இருக்கவும் அ.தி.மு.க. மேற்கொண்ட சட்டரீதியான நகர்வுகள் அதன் அச்சத்தை வெளிப்படுத்தியது. தசரா விடுமுறைக்குப் பிறகு ராதாபுரம் தேர்தல் குறித்த பரபரப்பு மீண்டும் அதிகரிக்கும். அதுவரை, ஆளுந்தரப்பில் திக்..திக்.. மனநிலைதான்.

 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.