Skip to main content

அ.தி.மு.க.வுக்கு கிரீன் சிக்னல் ! தி.மு.க.வுக்கு ரெட் அலெர்ட் !

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

அ.தி.மு.க. கூட்டணியினர் ஆம்புலன்ஸிலும் போலீஸ் வாகனத்திலும் கொண்டுசெல்லும் பணத்தை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாவிட்டால், தி.மு.க.வே வாகன சோதனை நடத்தி பறிமுதல் செய்யும்' என பொள்ளாச்சியில் ஆவேசமாகப் பேசினார் மு.க.ஸ்டாலின்.

வருமானவரித்துறை யின் கட்டுப்பாட்டிலுள்ள வருவாய் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது, "தி.மு.க.வின் பணப் பட்டுவாடாவை தடுப்பதில்தான் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியின் வெற்றி இருக்கிறது என பா.ஜ.க. தலைமைக்கு அழுத்தம் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அதனைத் தொடர்ச்சியாக ஃபாலோ-அப் பண்ணிக் கொண்டேயிருக்கிறது எடப்பாடி டைரக்ஷனில் இயங்கும் சீனியர் அமைச்சர்கள் அடங்கிய டீம். தி.மு.க.வின் முக்கிய வேட்பாளர்கள் தோற்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் வியூகமும்.

 

eps ops



தி.மு.க.வின் பெரிய மனிதர்கள்தான் முதல் டார்கெட். பா.ஜ.க. வேட்பாளர்களை எதிர்க்கும் வேட்பாளர்கள் இரண்டாவது டார்கெட். அ.தி.மு.க. தலைமை குறித்துக்கொடுத்திருக்கும் தொகுதிகள் மூன்றாவது டார்கெட். இதனை மையப்படுத்தித்தான் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பெரிய மனிதர்களும் அவர்களின் வாரிசுகளும்  போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க. தரப்பிலிருந்தே எங்களுக்கு கசியவிடப்படுகிற தகவலின் அடிப்படையில் ரெய்டு நடக்கிறது. தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான சிலரின் உள்ளடியும், வருமானவரித்துறைக்கு தகவல் தரும் ரெகுலர் சோர்ஸ்களும் இதற்குப் பயன்படுகின்றன. செயல்முறை ஆணைகள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மூலம் தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்கனவே வழங்கப் பட்டுவிட்டன' என்கிறார்கள் அழுத்தமாக.

துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி 33 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, தி.மு.க.வின் வி.வி.ஐ.பி. வேட்பாளர்கள் உஷாராகி ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்ட கோடிகளை கொஞ்சம் கொஞ்சமாக இடமாற்றம் செய்து பல இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ள தகவலையடுத்து, அடுத்தடுத்த பாய்ச்சல்களுக்கு திட்டமிட்டுள்ளனர்.  

 

stalin duraimurugan

பறக்கும் படையிலுள்ள தமிழக அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது,  பணக்கடத்தலில் அதிகம் ஈடுபட்டிருப்பது அ.தி.மு.க.தான். இவர்கள் ஏற்கனவே மாவட்ட வாரியாக பணத்தை அனுப்பி வைத்து முடித்துவிட்டனர். அங்கிருந்து நகரம் மற்றும் ஒன்றியங்கள் வாரியாக பிரித்துத் தரப்பட்டு கிளைக்கழகங்கள் வரை சேர்க்கப்பட்டுவிட்டன. ஆனால், இவற்றைக் கண்டுகொள்ளாமல், வாகன சோதனைகளில் மட்டுமே கவனம் செலுத்தும்படி எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளும் கட்சியினர் பணத்தை கடத்தும் வாகனங்களில் இருப்பவர் ஒரு கோட்வேர்ட் சொல்லுவார். அந்த வாகனத்தை விட்டுவிடுவோம். எந்த ரூட்டில் இந்த வாகனம் போகிறதோ அந்த ரூட்டில் எந்தெந்த இடங்களில் பறக்கும்படையினர் சோதனையில் ஈடு பட்டுள்ளனரோ அவர்கள் அனைவருக்கும் இந்த கோட்வேர்ட் ஏற்கனவே சொல்லப்பட்டுவிடும். 

 

raid

குறிப்பாக, ஒரு மாவட்டம் எதற்கு புகழ் பெற்றதோ அதன் ஆங்கில வார்த்தையே கோட் வேர்டாக பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், நகரங்களில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பணத்தை கடத்த சொகுசு வாகனங்களை யூஸ் பண்ணுவதில்லை. ஆட்டோ, ஷேர் ஆட்டோ. வெள்ளை வேன், மீன்பாடி வாகனம், மின்சார ரயில், மெட்ரோ ரயில் இவற்றில்தான் கோடிகள் பயணிக்கின்றன. தள்ளுவண்டியில் பொரி கடலை, காய்கறிகள், பூக்கள், பழங்கள் விற்பனை செய்பவர்களை இதில் ஈடுபடுத்தியுள்ளனர். ஆக, அதிகாரிகளால் எவ்வித நெருக்கடியும் ஆளும்கட்சிக்கு இல்லை. கிளைக்கழகங்களில் பதுக்கப்பட்டிருக்கும் பணம் இனி மக்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டும் அதுதான் பாக்கி. பட்டுவாடாவை மெல்ல மெல்ல இப்போதுதான் துவக்கியிருக்கிறார்கள். வாக்குப்பதிவுக்கு முந்தைய 3 நாட்களில் பணப்பட்டுவாடாவை ஒரே மூச்சில் நடத்த ஆளும்கட்சி திட்டமிட்டிருக்கிறது. இதற்கு க்ரீன் சிக்னல் தருவதற்கேற்ப சில உத்தரவுகள் எங்க ளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன''‘என்கிறார்கள் மிகச்சாதாரணமாக. 

பணப்பட்டுவாடாவில் ஆளும்கட்சியின் திட்டம் குறித்து வடமாவட்டங்களிலுள்ள அ.தி.மு.க. மா.செ.க்கள் இருவரிடம் நாம் விவாதித்த போது, "ஐநூறு ஓட்டுக்கு ஒருவர் தலைமை. இவருக்கு கீழே 5 நபர். ஒவ்வொருவருக்கும் 100 ஓட்டு பிரித்துத் தரப்படும். இப்போதைக்கு ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாய்ங்கிறது திட்டம். 100 ஓட்டுக்கு பொறுப்பான அந்த நபரிடம் 2 லட்சம் சேர்க்கப்பட்டுவிடும். 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் அதிகாரிகள் பிடிக்க மாட்டார்கள் என்பதால் 50, 50 என 4 முறை அவரிடம் தரப்படும். எந்த வீட்டுக்கு பணம் கொடுக்க வேண்டுமோ அந்த வீட்டுக்காரரின் மொபைல் எண் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டிருப்பதால் அவருக்கு போன் செய்து விபரத்தைக் கூறுவோம். அவர் வரச்சொன்னதும் சாதாரணமாக சென்று பணம் பட்டுவாடா செய்துவிடுவார் எங்களுடைய பொறுப்பாளர். 100 வாக்காளர்களுக்கும் பணம் கொடுத்து முடித்ததும் பொறுப்பாளரிடம் அடுத்த 100 வாக்காளர்களின் விபரங்கள் தரப்படும். இது ஒரு செயின் லிங்க். இந்த பணியில், விசயத்தை கசியவிடாத இளைஞர்களை ஈடுபடுத்துகிறோம். இவர்களுக்கு தினசரி 800 ரூபாய் சம்பளம். இதுமாதிரி நிறைய டெக்னிக்குகளை பயன்படுத்தி பணப்பட்டுவாடா செய்யப் பட்டு வருகிறது'' என்று விவரிக்கின்றனர்.  
 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.