Skip to main content

“சசிகலாவை மட்டுமல்ல... ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்-ஸையும் விசாரியுங்கள்” - கே.சி. பழனிசாமி

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

ADMK Ex MP KC Palanisamy comment on Arumugasamy and Aruna Jagadhesan commission
கோப்புப் படம்

 

தமிழ்நாடு சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 17ம் தேதி முதல் 19 வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. இதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. இரண்டு அறிக்கைகளும் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தி தமிழ்நாட்டை பரபரப்பாக்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியை சந்தித்து உரையாடினோம். 

 

அவர் தெரிவித்த கருத்தில் சில...


ஆறுமுகசாமி ஆணையமும், அருணா ஜெகதீசன் ஆணையமும் சட்டசபையில் அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறார்கள். இந்த மாதிரியான நேரத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பான பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவைக் காவலர்களால் வெளியேற்றப் பட்டிருக்காங்க. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?


கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக அதிமுகவை வழி நடத்திய ஜெயலலிதா மரணம் குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிற பொழுது, எடப்பாடி பழனிசாமி எல்லா கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து அது விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தால் போற்றுதலுக்கு உரியவராக பார்க்கப்பட்டிருப்பார். மாறாக, ‘ரோம் பற்றி எரிகின்றபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்த மன்னனைப் போல’ அதிமுக தொண்டர்கள் உணர்ச்சிப் பிழம்பில் கொதித்துக் கொண்டிருக்கும்போது இந்த மாதிரியான சப்பை விசயங்களுக்காக பிரச்சனை செய்வது அவர்கள் அந்த அறிக்கையை தவிர்க்க நினைக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

 

ஜெயலலிதா இறந்த தேதி குறித்த முரண்பட்ட தகவல் உள்ளது, ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த தவறிவிட்டார்கள், ஜெ. மற்றும் சசி மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்குள் சுமூகமான உறவு இல்லை, என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விசயங்களைப் பற்றி உங்கள் கருத்து?

 

இறந்த தேதி குறித்து ஆணையம் குறிப்பிட்ட தேதியில் தொலைக்காட்சி செய்திகள் அப்போதே வந்தன. பின்னர்தான் அதை மறுத்திருந்தாங்க. சசிகலா மீண்டும் இணைந்த பிறகு கட்சியின் நிதி தொடர்பான விசயங்களை எடப்பாடி கவனிக்கட்டும் என அம்மா சொல்லி இருந்தது, அவர்களுக்கிடையில சுமூகமான உறவு இல்லைங்கிற மாதிரி தான் இருந்தது. அதுபோல இந்த ஆணையம் சுட்டிக்காட்டி இருக்கிற பல விசயங்கள் சரியாக இருக்குமென்பது தான் என்னோட பார்வை.

 

சசிகலா, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவர் சிவராமன் உள்ளிட்ட எட்டு பேரை மீண்டும் விசாரிக்கணும்னு ஆணையம் பரிந்துரை வழங்கியிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?


குற்றவியல் சட்டப்படி எப்.ஐ.ஆர் போட்டு அவங்கள விசாரிக்கணும். கூடவே ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இரண்டு பேரையும் விசாரிக்கணும். இவங்க தானே அம்மா மறைவுக்கு பிறகு முதலமைச்சர்களாக இருந்தவர்கள். ஒரு குற்றத்தை மறைக்க துணை போகிறவர்களும் குற்றவாளிகள் தானே! ஓ.பி.எஸ் அந்த காலகட்டத்தில் முதல்வராக இருந்தவர். ஈ.பி.எஸ் அதன் பிறகு 4 ஆண்டுகள், 3 மாதங்கள் முதல்வராக இருந்தவர். ஏன் அவர்கள் இந்த உண்மையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்யவில்லை? குறைந்த பட்சம் அம்மா இறந்த தேதியையாவது ஏன் மாற்றி அறிவிக்கவில்லை? அதிமுக தொண்டர்களின் கொந்தளிப்பை அடக்குவதற்காகத் தானே இந்த ஆணையமே அவர்களால் அமைக்கப்பட்டது! இந்த ஆணையத்தின் மீது, உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பெற்ற தடையை விலக்குவதற்கான நடவடிக்கையைக் கூட எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது எடுக்கவில்லை. அவர்கள் அப்போதிருந்து இப்போது வரை இதை தவிர்க்கவே முயற்சிக்கிறார்கள்.

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லிருக்காங்களே. அது பற்றி...


சம்பவம் நடந்தப்போ மாவட்ட ஆட்சியரும் சரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சரி அந்த மாவட்டத்திலேயே இல்லன்னு சொல்லிருக்காங்க. எடப்பாடி பழனிசாமி கூட அப்போ வெள்ளந்தியா சொல்லிருப்பாரு, “டி.வில பார்த்துதான் நான் அந்த செய்திய தெரிஞ்சிகிட்டேன்”னு. அப்போ அந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யாரு, முதலமைச்சர் உத்தரவு இல்லாமல் அந்த துப்பாக்கி சூடு நடந்துடுச்சான்னு எல்லாமே விசாரிக்கப்படனும். காலுக்கு கீழ சுடனும் என்கிற விதியை மீறி மார்பிலும் தலையிலும் சுட்டிருக்காங்க. அப்போ அந்தப் படுகொலை வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருக்கு. ஸ்டெர்லைட்ல பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி இருந்திருக்கார் அவரும் விசாரிக்கப்படனும்.

 

 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.