Skip to main content

தெரிந்துதான் இதையெல்லாம் செய்கிறீர்களா???

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

அதிமுக அரசின் மிக மோசமான யோசனைகளில் ஒன்று. மழை வரவேண்டும் என்பதற்காக யாகங்கள் செய்ய சொன்னது. இத்தனை வருட தமிழ்நாட்டின் ஆட்சியில் இப்படியொரு திட்டத்தை யாரும் செய்ததில்லை. மழை வருவதற்கான எந்த வழியையும் செய்யாத அதிமுக அரசு யாகம் நடத்திவிட்டால் மழை வந்துவிடும் என நம்புவது எவ்வளவு முட்டாள்தனம். 
 

admk


கடந்த ஏப்ரல் 29ம் தேதி மழைவரவேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் செய்யவேண்டும் என கோவில்களின் நிதி நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் அரசு துறையான அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை மற்றும் அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.  

இந்நிலையில் தற்போதும் மழைவேண்டி யாகம் நடத்த அதிமுகவினருக்கு கூட்டாக உத்தரவிட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோட்டிலுள்ள ஒரு கோவிலில் யாகம் நடத்தியுள்ளார். புயல்வந்தபோது வீழ்ந்த மரங்களுக்கெல்லாம் மாற்று நடவடிக்கைகளாக என்ன செய்தீர்கள் என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு விடையில்லை, முறையாக பராமரிக்க வேண்டிய இயற்கை கொடைகளை பராமரிக்கவில்லை, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதியளித்ததனால், ஆண்டாண்டு காலமாக தானாக வளர்ந்த மரங்களெல்லாம் அரை நிமிடத்தில் வெட்டப்பட்டது. முறையாக தூர்வாரி நீர் சேமிக்கவேண்டிய இடங்களையெல்லாம் தூர்வார நடவடிக்கை இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக போராட்டம் நடந்து, நீதிமன்றம் தடைபோட்ட எட்டுவழிச்சாலையை மீண்டும் கொண்டுவருவோம் என முதல்வர் கூறியிருக்கிறார். 

இப்படியாக செய்வதையெல்லாம் செய்துவிட்டு மழைவேண்டும் என்று யாகம் நடத்தினால் எல்லாம் சரியாகிவிடுமா. இதுஒரு சங்கிலிதொடர் நாம் ஒரு இடத்தில் செய்யும் தவறு ஒட்டுமொத்த சுழற்சியையும் பாதிக்கும். காலம்காலமாக நாம் செய்த தவறின் விளைவைதான் இங்கு நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

அதே தவறை மீண்டும் செய்யாமல், அதை சரிசெய்ய என்ன செய்யலாம் என்ற வழியைக் காண்பதும், அதை செயல்படுத்துவதும்தான் அறிவியல் பார்வையும், சரியான பார்வையும் கூட. அதைவிட்டுவிட்டு மூடநம்பிக்கையில் திளைத்து யாகம் செய்வது தவறானதாகும். நீங்கள் தனிமனிதர்கள் அல்ல, ஒரு அரசாங்கம் அதை கருத்தில்கொண்டு செயல்படவேண்டும். இதையெல்லாம் தெரியாமல் செய்கிறீர்களா அல்லது அனைத்தும் தெரிந்தும் இப்படி செய்கிறீர்களா என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.