Skip to main content

பாமக மீது அதிமுகவிற்கு மரியாதை இல்லை... அன்புமணிக்கு ராமதாஸ் போட்ட அதிரடி உத்தரவு... பாமக மீது கோபத்தில் எடப்பாடி!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

ஒவ்வொரு வருடமும் ஆங்கிலப் புத்தாண்டுக்கு முதல்நாள் பா.ம.க.வின் சிறப்புப் பொதுக் குழுவைக் கூட்டி செயல் திட்டங்கள் பற்றி விவாதிப்பார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். கடந்த 31-ந்தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் கூடியது. டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி தொடங்கி கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அரசியலில் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வரும் பல கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றியுள்ளனர்.

 

pmk



நிறைவேற்றப்பட்ட 18 தீர்மானங்களில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என்பது இந்த பொதுக்குழுவுக்குப் புதிது. ஆனால், தேசிய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரித்து அன்புமணி வாக்களித்துள்ள நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது முரணாக இருக்கிறது. பொதுக்குழுவில் பேசிய பலரும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. தலைமை தங்களை வஞ்சித்து விட்டதாகவும் கெஞ்ச வைத்ததாகவும் குமுறியிருக்கிறார்கள். குறிப்பாக, கூட்டணி தர்மத்தை மீறி பெரியண்ணன் பாணியில் அ.தி.மு.க. மா.செ.க்கள் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினர்.

 

pmk



இந்த நிலையில், மைக் பிடித்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் பேச்சில் அ.தி.மு.க.வுக்கு எதிராக கோபம் கொப்பளித்திருக்கிறது. "தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது. கூட்டணியே வேண்டாம் என்கிற கொள்கையில் இருந்தோம். ஆனால், அந்த கொள்கையை மாற்றி கூட்டணி என்கிற நிலைப்பாட்டை எடுத்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தோம். ஆனா, ஏன் கூட்டணிக்குள் போனோம்னு யோசிக்க வைத்துவிட்டார்கள். ஒரு சீட்டுக்கு அரை சீட்டுக்கு கால் சீட்டுக்குன்னு கெஞ்ச வைத்து விட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வந்தது. ஆட்சியை தக்க வைக்க இடைத்தேர்தல் எங்களுக்கு முக்கியம். விட்டுக்கொடுங்கள். உள்ளாட்சியில் சரி செய்யப்படும் என்றனர். விட்டுக்கொடுத்தோம். நாம் கூட்டணி சேராவிட்டால் அ.தி.மு.க. ஆட்சி இன்றைக்கு இருந்திருக்காது. உள்ளாட்சியில் எங்கள் கட்சியில் உழைக்கிறவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என சொல்லி போராடியும் குறைந்த அளவே தந்தனர். தேர்தலில் கூட்டணியை அங்கீகரிக்கவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது'' என அ.தி.மு.க.வை கடுமையாக தாக்கினார். இதனை பொதுக்குழு உறுப்பினர்கள் கைதட்டி ஆமோதித்தனர்.

 

admk



இறுதியில் பேசிய டாக்டர் ராமதாஸ், "பல மாநிலங்களில் இளைஞர்கள் முதலமைச்சர்களாக பதவிக்கு வந்திருக்கிறார்கள். வெறும் அரசியல் பின்புலம் மட்டுமே இதற்குக் காரணம் கிடையாது. மக்களிடம் நெருக்கம் வேண்டும். அத்தகைய உழைப்பு பா.ம.க.வில் இருப்பதாக தெரியவில்லை. கடுமையாக உழைத்தால் மட்டுமே 80 தொகுதிகளில் 80 லட்சம் வாக்குகளைப் பெற முடியும். அப்படி வாக்குகளை வாங்கினால்தான் ஆளும்கட்சியாக பா.ம.க. வரும். பதவியை வாங்குகிற வரையில் தான் நீங்கள் உழைப்பதாக தெரிகிறது. அதற்குபிறகு யாரும் உழைப்பதில்லை. உழைக்க தயாராக இல்லாதவர்கள் பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகி விடுங்கள்'' என்றார் மிக கோபமாக.

ராமதாஸின் இந்த பேச்சு, அன்புமணி இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவே இருந்தது என்கிறார்கள் பா.ம.க. பொதுக் குழு உறுப்பினர்கள். அன்புமணியின் பேச்சுக்கு ஏதேனும் பின்னணிகள் உள்ளதா? என பொதுக்குழு உறுப்பினர்களிடம் கேட்டபோது, "திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை; தனித்துதான் பா.ம.க. போட்டியிடும் என்கிற முடிவு வட தமிழகத்தில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. ஆனா, எம்.பி.யாக வேண்டும் என நினைத்த அவருக்கு நம்பிக்கை இல்லை. எம்.பி.யாக வேண்டுமானால் நாடாளுமன்றத் தேர்த லில் கூட்டணி வைக்க வேண்டும். ஒருவேளை தோத்துப் போனாலும் ராஜ்யசபா மூலம் எம்.பி.யாக வேண்டும் என முடிவு செய்தார். கூட்டணி வைத்தார்கள். எம்.பி.யானார் அன்புமணி.

தேர்தல் உடன்பாடுகளில் பா.ம.க.வின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியது அ.தி.மு.க. தலைமை. அதனால் பா.ம.க. மீது அ.தி.மு.க.வுக்கு மரியாதை இல்லாமல் போனது. அதனை உள்ளாட்சியில் வெச்சு செய்தனர். கட்சித் தொண்டர்களுக்குரிய வாய்ப்புகளை வாங்கித்தர அன்புமணியால் முடியவில்லை. அதனை மறைக்கவும் தொண்டர்களை சமாதானப்படுத்தவும்தான் அப்படி பேசினார். இந்த உரசல் கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேற அச்சாரமாக இருக்கும்.


அதனால்தான் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அன்புமணியின் தம்பிகள்படை, தங்கைகள்படை, மக்கள் படைகளை வலிமைப்படுத்துவது குறித்து தனி தீர்மானமும் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து தைலாபுரத்தில் கட்சியின் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்'' என சுட்டிக்காட்டினார்கள்.


பா.ம.க. பொதுக்குழுவில் பேசப்பட்டவற்றை இஞ்ச் பை இஞ்சாக எடப்பாடிக்கு அனுப்பி வைத்துள்ளது மாநில உளவுத்துறை. இதுகுறித்து விசாரித்தபோது, "அன்புமணிக்கு பதவி கிடைக்கிற வரையில் ஒரு நிலைப்பாடும், கிடைத்ததும் வேறு ஒரு நிலைப்பாடும் எடுப்பதே பா.ம.க.வின் பாலிசி. கூட்டணியில் இருப்பதும் விலகுவதும் அவர்கள் விருப்பம்' என நெருக்கமான அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி'' என்கின்றனர் உளவுத் துறையினர்.

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.