Skip to main content

ஊடக சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் அரசு கேபிள்!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

டெல்லியில் உள்ள தொலைத்தொடர்பு தொடர்பான சிக்கல்களை விசாரிக்கும் ஆணையம் தமிழக அரசு நடத்தும் அரசு கேபிள் மீது அபராதம் விதித்திருக்கிறது. இந்த நடவடிக்கை அரசு கேபிள் கம்பெனியை மூடுவதற்கான முன்னோடி என்கிறார்கள் அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்.

மதுரை மாநகராட்சி ஊழல் தொடர்பாக உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதுபற்றி சத்யம் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 11-ஆம் தேதி விவாத நிகழ்ச்சியில் பேசினார் என்பதற்காக அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் மீது கிரிமினல் வழக்கு ஒன்றை சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் பரிந்துரையின் பேரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்தார். அத்துடன் அந்த விவாத நிகழ்ச்சியை நடத்திய சத்யம் டி.வி.யை அரசு கேபிளில் தெரியாதவாறு துண்டித்தார்.

 

admk



இதை எதிர்த்து சத்யம் டி.வி.யின் பார்வையாளர்கள் மூன்றுபேர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். வழக்கு தொடரப்பட்டவுடன் அதை மறைக்க நினைத்த தமிழக அரசு, அரசு கேபிளில் கட்டணம் குறைக்கப்படும் என அறிவித்தது. அத்துடன் சத்யம் டி.வி.யில் அந்த விவாதத்தை நடத்திய அதன் பொறுப்பாசிரியர் அரவிந்தாக்ஷனை வெளியேற்ற வேண்டும் என்கிற கண்டிஷனோடு மறுபடியும் சத்யம் டி.வி.யை அரசு கேபிளில் தெரியவைத்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த ஆணையம், தன்னிச்சையாக ஒரு டி.வி.யின் ஒளிபரப்பை முடக் கியதால் அரசு கேபிளுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளது என்கிறது தொலைக்காட்சித்துறை வட்டாரம்.

 

cable tv



இதுபற்றி சத்யம் டி.வி. பொறுப்பாசிரியர் அரவிந்தாக் ஷனை கேட்டோம். "அரசு கேபிளில் சத்யம் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. அதை மறுபடியும் கொடுத்துவிட்டார்கள்'' என்று நிலவரத்தைச் சொன்னார். சென்னை பத்திரிகையாளர் சங்க பொதுச்செயலாளர் "டைம்ஸ் ஆஃப் இண்டியா' சங்கர், ""தனியார் கையில் கேபிள் டி.வி. இருந்த போது அவர்கள் துண்டிப்பு வேலைகளைச் செய் தார்கள் என்பதற்காகத்தான் அரசு கேபிள் டி.வி. உதயமானது. அரசு கேபிள் டி.வி. சத்யம் டி.வி. மீது இதுபோன்ற துண்டிப்பு நடவடிக்கையை மேற் கொண்டதால் சத்யம் டி.வி.யின் பார்வையாளர்கள் ஆணையத்தில் வழக்குப் போட்டு அரசு கேபிள் டி.வி.க்கு அபராதம் விதிக்க வைத்திருக்கிறார்கள். இனிமேலாவது அரசு அதன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்கிறார்.


"இதுபோன்ற துண்டிப்பு நடவடிக்கைகளை யார் செய்வது?' என தமிழக அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனில் பணிபுரிபவர்களிடம் கேட்டோம். ""இந்தியாவில் தமிழக அரசைத் தவிர வேறெந்த மாநில அரசும் கேபிள் டி.வி.யை நடத்தவில்லை. இந்திய அரசின் தொலைத்தொடர்பு கொள்கையை நடைமுறைப்படுத்தும் டெலிபோன் ரெகுலேட்டர் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் சட்டதிட்டங்களிலே "எந்த மாநில அரசும் கேபிள் டி.வி. நடத் தக்கூடாது' என தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழக அரசு கேபிள் டி.வி. நடத்துவதற்காக தொலைத்தொடர்பு ரெகுலேட்டர் அத்தாரிட்டி (டிராய்), ஒரு தற்காலிக லைசென்ஸ்தான் தந்திருக்கிறது. அரசு கேபிள் மீது புகார்கள் வருமானால் அந்த தற்காலிக லைசென்ஸ் ரத்து செய்யப்படும். இதன் மேனேஜிங் டைரக்டரான சங்கர் என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப் பட்டிருக்கிறார். அவருக்கு கீழே 11 டைரக்டர்கள் இயங்குகிறார்கள். அதில் இரண்டுபேர் உள் ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் கீழ் இயங்கும் அதிகாரிகள். ஒருவர் ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளர், இன்னொருவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் முதன்மைச் செயலாளர். இவர்களைத் தவிர தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரி, எல்காட் நிறுவன எம்.டி., நிதித்துறை கூடுதல் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் ஆகியோர் இருக்கிறார்கள். அவர்கள் அமைச்சர் வேலுமணி சொல்வதைச் செய்கிறார்கள். வேலுமணிதான் தந்தி டி.வி., புதிய தலைமுறை, சன் டி.வி., காவேரி டி.வி. ஆகியவற்றை அரசு கேபிளில் முன் வரிசையிலிருந்து பின்வரிசைக்கு கொண்டு சென்றவர். அவர்தான் சத்யம் டி.வி.யை அரசு கேபிள் இணைப்பிலிருந்தே நீக்கியவர். சத்யம் டி.வி. நிர்வாகிகள் அமைச்சரிடம் பேசியபோது, "பொறுப்பாசிரியர் அரவிந்தாக்ஷனை நீக்குங்கள்' என கட்டளையே போட்டார் என்கிறது கேபிள் டி.வி. வட்டாரம்.


இப்படி எந்த டி.வி.யில் யார் வேலை செய்யவேண்டும் என அரசு உட்பட வெளியிலிருப்பவர்கள் தீர்மானிப்பது தவறு. காவேரி டி.வி.யில் வேலை பார்த்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியான கருத்து ஒன்றிற்காக வேலையை விட்டு விலகியுள்ளார். ஊடகம் என்பது சுதந்திரமானது, அதனால்தான் வெளிநாட்டு முதலீட்டில் ஊடகங்கள் வந்தாலும் அதன் ஆசிரியர் குழு இந்தியர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிற நடைமுறை இந்தியாவில் இருக்கிறது. அதன் அடிப்படையே தெரியாமல் எடப்பாடி அரசு நடந்துகொள்கிறது' என கொந்தளிக்கிறார்கள் சென்னை பத்திரிகையாளர்கள்.
 

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.