Skip to main content

அ.தி.மு.க.-பா.ஜ.க. சீட்டு மல்லுக்கட்டு!

Published on 11/02/2019 | Edited on 04/03/2019

திகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே, அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கிடையே நடைபெறும் சீட்டு மல்லுக் கட்டு... கூட்டணி உறுதி என்கிற இறுதி அறிவிப்பையே தள்ளிவைத் துள்ளது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

எண்ணிக்கை குறைந்தாலும் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிதான் அமையும். காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272-ல் 42 தொகுதிகள் குறைந்து 230 தொகுதிகளில் வெற்றி பெறும். மாயாவதியும் அகிலேஷும் கைகோர்க் கும் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு பழைய வெற்றி கிடைக்காவிட்டாலும் அங்குள்ள 80 தொகுதிகளில் 35 இடங்களை ஜெயிக்கும். அதனால் அடுத்து அமையப் போவது பா.ஜ.க. தலைமை யிலான கூட்டணி அரசுதான். அதில் அ.தி.மு.க. மந்திரிசபையில் இடம்பெறும் என்கிற இந்த "கேரட்டை' காட்டிதான் தமிழகத் தில் உள்ள கட்சிக் குதிரைகளை பா.ஜ.க. வளைத்து வருகிறது.

eps



மத்திய அமைச்சர் ஆசையில்தான் அ.தி.மு.க. தலைவர்கள் தங்களது பிள்ளைகளை களமிறக்குகிறார்கள். ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தில் தொடங்கி தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி ஆகியோரது வாரிசுகளோடு லேட்டஸ்டாக எம்.சி.சம்பத், வளர்மதி ஆகியோரின் மகன்களும் களம் காண தயாராகி வருகிறார்கள். ஜெயித்தால் மந்திரி... தோற்றால் ஒரு தேர்தல் அனுபவம் என ஜெ. இல்லாத அ.தி.மு.க.வை குடும்ப கட்சியாக மாற்ற முயற்சி நடக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

"இவ்வளவு இருந்தும் ஏன் பா.ஜ.க.வுடன் கூட்டணி என அ.தி.மு.க. அறிவிக்க தயங்குகிறது' என கேட்டால், ""வெயிட் பண்ணுங்க சார்'' என அ.தி.மு.க.வில் இருந்து பதில் வருகிறது. "திருப்பூரில் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு வருமா?' என பா.ஜ.க.வினரிடம் கேட்டால் "அந்த கூட்டத்தில் கூட்டணி பற்றிய ஒரு சில சிக்னல்கள்தான் வரும்' என்கிறார்கள். "பிப்ரவரி 24-ம் தேதி ஜெ.வின் பிறந்தநாள் வருகிறது. அன்று வேட்பாளர்கள் பெயர்களுடன் அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது' என மென்று முழுங்குகிறார்கள் அ.தி. மு.க.வினர்.

""பா.ஜ.க. சார்பில் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், அ.தி.மு.க. சார்பில் நேரடியாக தங்கமணி, வேலுமணி... மறைமுகமாக ஜக்கி வாசுதேவ், கேரள கவர்னர் சதாசிவம் ஆகியோர் கூட்டணி குறித்து பேசுகிறார்கள். இதில் ஆரம்பகட்ட பேச்சுகள் முடிவடைந்து விட்டன. ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் அ.தி. மு.க.விற்கு 25 சீட் மற்ற கட்சிகளுக்கு 15 சீட் என முடிவானது. இதையே தம்பிதுரை எதிர்க்கிறார். "பா.ஜ.க.வின் கையில் 15 தொகுதிகள் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். இது எம்.ஜி.ஆர்., ஜெ. உருவாக்கிய கட்சி. அதை பா.ஜ.க.விடம் அடகு வைப்பதை அ.தி.மு.க. தொண்டன் ஏற்க மாட்டான்' என ஓ.பி.எஸ்.சிடமும் இ.பி.எஸ்.சிடமும் நேருக்கு நேர் சண்டை போட்ட தம்பிதுரையிடம், "உங்களுக்கு ராஜ்யசபா சீட் தருகிறோம்' என இருவரும் சமாதானம் பேசினார்கள்'' என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

bjp


""நாம் பா.ஜ.க.வுடன் கூட்டணி போகா விட்டால் நாங்கள் குடும்பத்துடன் சிறைக்கு போவோம். அத்துடன் எங்களை சார்ந்து நிற்கும் கவுண்டர் இன பிரமுகர்கள் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வருமான வரித்துறையின் ரெய்டுகளில் சிக்குவோம்'' என்றும் ஜக்கி வாசுதேவும் கேரள கவர்னர் சதாசிவமும் எச்சரிக்கிறார்கள் என ஓ.பி.எஸ்.சும் இ.பி.எஸ்.சும் சொன்னதை ராஜ்யசபா சீட் என்கிற "கேரட்'டோடு ஏற்றுக் கொண்டார் தம்பிதுரை என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

அ.தி.மு.க.வின் தொகுதிகள் போக மீதமுள்ள 15 தொகுதி களில் பா.ஜ.க.வுக்கும் பா.ம.க.வுக்கும் பெரும் மோதல் வெடித்துள்ளது. பா.ம.க.விடம் பேசி வரும் நிர்மலா சீதாராமனிடம் முதலில் புதுச்சேரியோடு சேர்த்து ஏழு தொகுதி என ஆரம்பித்த பா.ம.க., 6 அடுத்து 5 என ஒவ்வொரு படியாக இறங்கியது. ஒரு கட்டத்தில் நிர்மலா சீதாராமன் "அன்புமணி மீது மருத்துவ கல்லூரி அனுமதியில் நடைபெற்ற ஊழல் வழக்கு இருக்கிறது. உங்களுக்கு தி.மு.க. முகாமில் வரவேற்பில்லை' என வெடித்திருக்கிறார். அதற்கு பதிலளித்த பா.ம.க.வோ, ""பா.ஜ.க. 10 தொகுதிகளை கேட்கிறது. எங்கும் நீங்கள் நோட்டாவை தாண்டி வாக்குகள் பெறவில்லை. அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் வாக்குகளில் வெற்றி பெற நினைக்கிறீர்கள். அது நியாயமா?'' என கேட்டிருக்கிறார்கள்.

""கூட்டணி பேச்சுவார்த்தையில் ஜெ. பாணியை பின்பற்றி வந்தால் வரவேற்போம். போதாதென்றால் எங்களுக்கு பாதிப்பில்லை'' என சொல்லிவிட பா.ம.க. ரெடியாகிவிட்டது. அ.தி.மு.க.வும், ""25 தொகுதிகளுக்கு குறையாமல் இதுவரை நாங்கள் போட்டியிட்டதில்லை'' என உறுதியாக நிற்கிறது. கடைசியாக பா.ஜ.க. 10 தொகுதியில் இருந்து தனது தொகுதிகளை குறைக்க முடிவு செய்துள்ளது. தே.மு.தி.க., புதிய தமிழகம், ஜி.கே.வாசன், கொங்கு கட்சி போன்றவை "கொடுப்பதை வாங்கிக் கொள்கிறோம்' என்ற நிலையில் உள்ளன.

ஆனால் தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா "நான் மதுரையில் நிற்பேன்' என்கிறார். அதேபோல் ஜி.கே.வாசன் தனது சொந்த ஊரான தஞ்சாவூரை கேட்கிறார். தமிழிசை தென்சென்னை, வானதி கோவை, திருப்பூர் சி.பி.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் பொன்னார், தஞ்சையில் கருப்பு முருகானந்தம் ஆகியோர் போட்டியிட நிர்மலாவை அணுகியுள்ளனர். தென்சென்னை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் வெற்றி பெற்ற தொகுதி. கோவை, திருப்பூர் ஆகியவை வேலுமணியின் வாரிசு குறி வைக்கும் தொகுதி. மதுரை அ.தி. மு.க.வின் தொகுதி. பா.ஜ.க.விற்கு வாக்கு உள்ள பகுதிகளில் பா.ஜ.க. நிற்ப தோடு அ.தி.மு.க. தொகுதிகளையும் குறிவைத்து தாமரையை மலரச் செய்வது சரியா? என்கிற போர்க்குரல்கள் அ.தி.மு.க.வில் கேட்கிறது.

இதற்கிடையே மதுரையில் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரையை களமிறக்குகிறார் டி.டி.வி.தினகரன். அதுபோல திருச்சிக்கு சாருபாலா தொண்டைமான் என தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணிக்கு கிலி கொடுக்கும் வேட்பாளர்களை செலக்ட் செய்து வைத்துள்ளார் டி.டி.வி.தினகரன். இந்த இழுபறிக்கு நடுவில் குக்கர் சின்னம் டி.டி.வி.க்கு போய்விடக்கூடாது என்பதிலும் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரக்கூடாது என்பதிலும் ஒரு புதிய கண்டிஷனையும் பா.ஜ.க.விடம் எடப்பாடி முன்வைத்துள்ளார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.

-தாமோதரன் பிரகாஷ்

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.