Skip to main content

நிலம் வழங்கிய விவசாயிகளை வஞ்சிக்கும் ஆவின் நிர்வாகம்; 44 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்!

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Administration of Aain deceiving farmers who have given land; The struggle continues for 44 years!
ஆவின் பால் பண்ணை

 

சேலம் ஆவின் பால் பண்ணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்காமல் 44 ஆண்டுகளாக ஏமாற்றி வரும் நிர்வாகத்தைக் கண்டித்து, சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்.

 

சேலத்தை அடுத்த சித்தனூரில், 1984ம் ஆண்டு முதல் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இதற்காக சித்தனூர், ரொட்டிக்காரன் வட்டம், தளவாய்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 44 விவசாயிகளிடம் இருந்து 1979ம் ஆண்டு, 54 ஏக்கர் நிலத்தை ஆவின் நிர்வாகம் கையகப்படுத்தியது. 

 

Administration of Aain deceiving farmers who have given land; The struggle continues for 44 years!

 

கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்த 25 குடும்பத்தினருக்கு மட்டும், பால் பண்ணைக்கு ஒதுக்குப்புறமாக தலா மூன்று சென்ட் பரப்பளவுள்ள 38 வீட்டு மனைகளை ஆவின் நிர்வாகம் ஒதுக்கியது. அந்த நிலத்தில் விவசாயிகள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். 

 

நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்திற்கு வீட்டு மனை ஒதுக்கீடு, மனைக்கான கிரயப் பத்திரம் ஆகியவை வழங்கப்படும் என அப்போது ஆவின் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. ஆனால் 44 ஆண்டுகள் ஆகியும் வீட்டு மனைகளுக்கு கிரயம் செய்து தராமல் ஆவின் நிர்வாகம், ஏழை விவசாயிகளை வயிற்றில் அடித்து விட்டதாக புலம்புகின்றனர்.  

 

நிலம் வழங்கிய விவசாயிகள் தமிழக முதல்வர், பால்வளத்துறை ஆணையர், செயலாளர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைவரின் அலுவலக கதவுகளையும் தட்டிப்பார்த்தும், தீர்வு கிடைக்கவில்லை என்கிறார்கள். இது தொடர்பாக, சேலம் ஆவின் பால் பண்ணைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவராமன் நக்கீரனிடம் பேசினார். 

 

Administration of Aain deceiving farmers who have given land; The struggle continues for 44 years!
சிவராமன்

 

அவர் தெரிவித்ததாவது; ''சேலம் ஆவின் பால் பண்ணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, அன்றைய அரசு வழிகாட்டி மதிப்பின்படி உரிய விலையைக் கொடுத்து நிர்வாகம் கிரயம் செய்து கொண்டது. அப்போது ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தில் குடியிருந்த 25 குடும்பத்தினருக்கு 38 காலி மனைகளை நிர்வாகம் ஒதுக்கியது. 

 

ஆனால், அந்த வீட்டு மனைகளுக்கு இன்று வரை பயனாளிகள் பெயரில் தனி நபர் கிரயம் செய்து கொடுக்காமல் ஆவின் நிறுவனம் தந்திரமாக இழுத்தடித்து வருகிறது. ஆவின் பொது மேலாளரைக் கேட்டால், பால்வளத்துறை ஆணையர்தான் இப்பிரச்சனையில் முடிவெடுக்க முடியும் என்கிறார். ஆணையர் அலுவலகத்தில் கேட்டால், வருவாய்த்துறையைக் கையைக் காட்டுகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு, ஆவின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தியபோது, அப்போது பால் வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் நேரடியாக எங்களிடம் பேசினார். 30 நாள்களில் கிரய பத்திரம் வழங்கப்படும் என்றார். அதுவும் பொய்யாகி விட்டது. 

 

வீட்டு மனைகளுக்கு தனி நபர் கிரயம் செய்து கொடுக்கப்படாததால் பட்டா பெற முடியவில்லை. பட்டா இல்லாததால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியம், வங்கிக் கடன் உள்ளிட்ட பயன்களைப் பெற முடியவில்லை. நிலத்தையும் விற்க முடியவில்லை. ஆவின் அதிகாரிகள் திடீரென்று, 'மேற்கூரை உங்களுக்கு; அடிநிலம் எங்களுக்கு,' எனக் கூறுகின்றனர். 

 

எங்கள் பிரச்சனையை ஆரம்பம் முதல் நக்கீரன் பத்திரிகை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. நக்கீரனில் செய்தி வந்த பிறகுதான் எங்கள் பிரச்சனை மீது அரசின் கவனம் குவிந்தது. இத்தனை நாளாக எங்களுக்கும் ஆவினுக்கும் மட்டுமே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேறு இடத்தில் 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தரும்படி வருவாய்த்துறையிடம் ஆவின் நிர்வாகம் கேட்கிறது. 

 

ஆனால் வருவாய்த்துறையோ, வணிக ரீதியான பயன்பாட்டிற்காக தனியார் கிரயம் பெற்ற நிலத்திற்கு மாற்று இடம் ஒதுக்க முடியாது என கைவிரித்துவிட்டது. இதில், வருவாய்த்துறையை சம்பந்தப்படுத்தவே தேவை இல்லை என்பதுதான் எங்கள் தரப்பு வாதம். நிலம் வழங்கிய அப்பாவி விவசாயிகளை ஏமாற்றுவதற்காக ஆவின் நிர்வாகம் இப்படியான தந்திரங்களை கையாள்கிறது. எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்'' என்கிறார் சிவராமன். 

 

இது ஒருபுறம் இருக்க, 1987ம் ஆண்டு மே 5ம் தேதி நடந்த ஆவின் நிர்வாகக்குழுக் கூட்டத்தில், 'பால் பண்ணைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு அளித்த வீட்டு மனைகளுக்கு பால்வளத்துறை ஆணையரின் அனுமதி பெற்று தனிநபர் கிரயம் செய்து கொடுக்கலாம்,' என தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது நமது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. 

 

அதேநேரம், 1997ம் ஆண்டு செப். 11ம் தேதி, ஐஏஎஸ் அதிகாரி முத்துசாமி தலைமையில் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில், 'நிலம் வழங்கிய விவசாயிகள் அல்லது அவர்களின் வாரிசுகளுக்கு கிரய பத்திரம் வழங்க ஆவின் நிர்வாக இயக்குநருக்கே அதிகாரம் உள்ளது,' என பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக இவ்வளவு தரவுகள் இருந்தும் சேலம் ஆவின் அதிகாரிகளும், சென்னை பால்வளத்துறை அதிகாரிகளும் மாறி மாறி கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். 

 

Administration of Aain deceiving farmers who have given land; The struggle continues for 44 years!
சரோஜா

 

ஆவினுக்கு நிலம் வழங்கியவர்களுள் ஒருவரான சரோஜா கூறுகையில், ''பால் பண்ணைக்கு நிலம் கொடுத்தோம். அதற்காக எங்களுக்கு கொடுத்த வீட்டு மனைக்கு தனி நபர் கிரயமோ பட்டாவோ ஆவின் தரவில்லை. வீட்டுக்கு பட்டா இல்லாததால் எங்களை புறம்போக்குனு சொல்றாங்க. சொந்தமாக வீடு இல்லாததால் மகன், மகளுக்கு திருமணம் கூட செய்து வைக்க முடியல. 

 

எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனையில் 10 லட்ச ரூபாய் கடனை உடனை வாங்கி இரண்டு வருஷத்துக்கு முன்பு வீடு கட்டிட்டோம். கரண்டு ஆபீசுல போய் கரண்டு கேட்டோம். அவங்களோ ஆவின் பால் பண்ணையில் போயி தடையில்லா சான்று வாங்கிட்டு வாங்கனு சொல்லிட்டாங்க. மறுபடியும் அவங்க காலில் போயி விழணுமான்னு போகவே இல்ல. ரெண்டு வருஷமாக கரண்டு இல்லாம மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்துலதான் இருக்கோம்'' என்றார். 

 

Administration of Aain deceiving farmers who have given land; The struggle continues for 44 years!
மயில்வேல்

 

விவசாயிகள் அலங்காரம்மாள், மயில்வேல் கவுண்டர் ஆகியோர் கூறுகையில், ''44 வருஷத்துக்கு முன்னாடி போலீசு வண்டிய கூட்டிக்கிட்டு வந்து ஆறு காசுக்கும் மூணு காசுக்கும் எங்க நிலத்தை எல்லாம் பால் பண்ணைக்கு எடுத்துக்கிட்டாங்க. தண்ணீ பாயற காட்டுக்கு 6000 ரூபாயும், தண்ணீ பாயாத காட்டுக்கு ஏக்கருக்கு 5000 ரூபாயும் கொடுத்தாங்க. 

 

Administration of Aain deceiving farmers who have given land; The struggle continues for 44 years!
அலங்காரம்மாள்

 

எங்களுக்கு பால் பண்ணை நிர்வாகம் இலவச வீட்டு மனை கொடுத்தாங்க. அந்த நிலத்தை எங்கள் பெயரில் கிரயம் செய்து, பட்டா கொடுக்கும்படி யார் யார் காலிலோ விழுந்துட்டோம். இதுவரை கிடைக்கல. எங்களுக்கு இப்பவே 85 வயசாச்சுங்க. சாகும்போது நாங்க புறம்போக்கா சாகக்கூடாது. எங்கள் நிலத்துக்கு ஆவின் நிர்வாகம் கிரய பத்திரம் கொடுக்கணும்'' என கண் கலங்கச் சொன்னார்கள்.

 

சேலம் ஆவின் நிறுவன பொது மேலாளர் (பொறுப்பு) சண்முகத்திடம் கேட்டபோது, ''நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு ஆவின் ஒதுக்கீடு செய்த நிலத்திற்கு தனி நபர் கிரயம் வழங்குவது தொடர்பான கோப்புகள் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக பால்வளத்துறை ஆணையர், ஆவின் நிர்வாக இயக்குநர் ஆகியோர்தான் முடிவெடுக்க முடியும். எங்கள் அளவில் எந்த முடிவும் எடுக்க இயலாது'' எனத் தெரிவித்தர். 

 

Administration of Aain deceiving farmers who have given land; The struggle continues for 44 years!
அமைச்சர் மனோ தங்கராஜ் 

 

இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் கேட்டபோது, ''சேலம் ஆவின் நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்கள் தொடர்பான பிரச்சனை குறித்து கவனத்துக்கு வந்தது. அது தொடர்பான கோப்புகளை விரைவில் ஆய்வு செய்து நல்ல முடிவெடுக்கப்படும்'' என நம்பிக்கையூட்டும் பதிலைச் சொன்னார். 

 

 

 

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.