Skip to main content

அதிரவைக்கும் ஆதிச்சநல்லூர் அதிசயங்கள்.. உறையவைக்கும் மண்டையோடு மர்மங்கள்..! 

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

Adhichanallur Excavation skull

 

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கீழடி உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடக்கிற தொல்லியல் அகழாய்வை விட ஆதிச்சநல்லூரின் அகழாய்வுகளில் அதிசயங்களும், அரிய பொக்கிஷங்களும் கிடைத்திருப்பதால் தொல்லியல் ஆய்வு வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதன் காரணமாகவே ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் தொய்வின்றி வேகமெடுத்துள்ளன.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் 1900-லிருந்தே மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவில்லை. அகழாய்வுப் பணி என்று வரும்போது அது சமயம் மட்டுமே, பணிகள் நடைபெறும். அடுத்த பணி எப்போது என்கிற விஷயமே கேள்வியாகி விடுவதால் ஆதிச்சநல்லூர் அடங்கியுள்ள விஷயங்கள் வெளிவராமல் முடங்கியபடியே இருந்தன. முந்தைய காலங்களில் பணிகள் தொடர்ந்து வேகமெடுத்திருக்குமேயானால் தற்போது கிடைத்த பழமையான அதிசயங்கள் 120 வருடங்களுக்கு முன்னமே வெளிப்பட்டிருக்கும் என்கிறார்கள் தொல்லியல் ஆர்வலர்கள்.

 

Adhichanallur Excavation skull

 

கடந்த ஆண்டுகளில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பண்டைய தமிழர்களின் அதிசயத்தக்க ஆதாரங்கள், பழம்பொருட்களின் அடிப்படையாகக் கொண்டு தற்போதைய தி.மு.க.அரசு ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் தொய்வின்றி நடத்தப்பட வேண்டும் என பூரண ஒத்துழைப்பும் கொடுத்தது மட்டுமல்லாமல். தமிழக அரசின் தொடர் முயற்சியால், ஆதிச்சநல்லூரிலேயே உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஏற்பாடுகள் எட்டு மாதங்களுக்கு முன்னேயே மேற்கொள்ளப்பட்டதால் தற்போது அகழாய்வுப் பணிகள் வேகமெடுத்துள்ளன.


1902ன் போது இந்திய தொல்லியல் துறையின் அப்போதைய இயக்குநரான அலெக்சாண்டர் ரியா என்கிற ஆங்கிலேயர் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டபோது பழமையான தங்கம், செப்பு பட்டயங்கள் மண்பாண்டங்கள் போன்ற பண்டைய கால தமிழர்களின் புழக்கத்திலிருந்தவை கிடைத்தன. பெரிய இடைவெளிக்குப் பின் 2004ல் மேற் கொள்ளப்பட்ட அகழாய்வில் ஒன்றிரண்டு எலும்புகளைக் கொண்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.

 

Adhichanallur Excavation skull

 

இப்படி அகழாய்வில் பலவிதமான பொருட்கள் கிடைக்கவே 2004க்குப் பின்னர் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதில், சூட்டு அடுப்பு, ஆயுதங்கள், இரும்பு ஆயுதங்களடங்கிய போர்க்கலன்கள், தமிழர்களின் சங்ககால வாழ்விடப்பகுதி சங்ககால நாணயங்கள், 30 செ.மீ அளவு கொண்ட தங்கத்தால் ஆன காதணிகள், மற்றும் வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், பண்டைய காலத்தின் 70 முதுமக்கள் தாழிகளும் அகழாய்வில் கிடைத்தன. அதோடு ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தரைத்தளச்சாலை, சுண்ணாம்பு மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட சுவரும் வெளிப்பட்டு அதிசயிக்க வைத்தது. அப்போதைய காலத்தில் மரணமடைந்தவர்களை பெரிய தாழிகளில் வைத்துப் புதைக்கும் பழக்கமிருந்தது. அது போன்ற 70 முதுமக்கள் தாழிகள் கிடைத்தாலும், அதில் ஒன்றில் கூட மனிதர்களின் எலும்புக் கூடுகள் முழுவதுமாக இல்லாமல் ஒன்றிரண்டு துண்டு எலும்புகள் மட்டுமே இருந்திருக்கின்றன. மேலும் பழமையான தங்கம், வெண்கலம், செப்பு பட்டயங்கள் உள்ளிட்ட இவைகள் இந்திய தொல்லியல் துறையின் இயக்குநர் தியாக சத்தியமூர்த்தி மற்றும் தமிழக அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் ஆகியோர் இணைந்த குழுக்களின் ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்டன.


இதனிடையே ஆதிச்சநல்லூரின் அகழாய்வில் தொடர்ந்து கிடைக்கும் அரிய பொருட்கள், மற்றும் அகழாய்வுப் பணிகளை உன்னிப்பாகக் கவனித்து வந்த தூத்துக்குடி மாவட்டக் ஆட்சியரான செந்தில்ராஜ், அகழாவுப் பணிகளை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் தற்போது அகழாய்வில் ஈடுபட்டு வருகிற திருச்சி மண்டல அகழாய்வுப் பணி இயக்குநரான அருண்ராஜ் தலைமையிலான குழுவிற்கு வசதியாக தேவைப்படுகிற இடங்களை அனுமதித்திருக்கிறார். அதையடுத்து ஆட்சியர் அனுமதியளித்த இடங்களில் கடந்த ஒரு மாதமாக ஆய்வினை மேற் கொண்டிருக்கின்றனர் அருண்ராஜ் குழுவினர்.

 

Adhichanallur Excavation skull

 

ஏற்கனவே இவரது அகழாய்வில் பல்வேறு வகையிலான பண்டைய தமிழர்களின் உறைவிடப்பகுதி உடைமைகள் கிடைத்தாலும் நான்கு நாட்களுக்கு முன்பு புதிய பகுதிகளில் 120 வருடத்திற்கு முந்தைய தங்கத்தாலான நெற்றிப்பட்டயம், மற்றும் காதணிகள், வளையல்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டதில், துண்டு துண்டான ஒன்றிரண்டு எலும்புகளைக் கொண்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் உமியும் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் பண்டைய தமிழர்கள் ஆரோக்கியமான அரிசி உணவையே உட்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.

 

மேலும் தற்போது, அகழாய்வின் போது இரண்டு பெரிய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் மனிதனின் முழு எலும்புக் கூடுகள் இருந்திருக்கின்றன. மண்டை ஒடு, வாய் மற்றும் பற்கள், உடலின் பிறபாகங்களின் முழுமையான எலும்புக் கூடுகள் இரண்டு முதுமக்கள் தாழிகளிலும் தற்போது கிடைத்துள்ளன. பண்டைய கால மக்களின் உடல் தன்மையை உணர்த்துவதாக இருப்பது பற்றித் தெரிவிப்பவர்களே முன்பு எடுக்கப்பட்ட, தாழிகளில் கிடைத்த துண்டு எலும்புகளைக் கொண்டு மனிதர்களின் பூரணத்தன்மையை அறிய முடியவில்லை. பல கால முயற்சிக்குப் பலனாக உடலின் முழு பாகத்தின் எலும்புத்துண்டுகள் தற்போது கிடைத்தது அதிசயம். பல விஷயங்களை அது உள்ளடக்கியுள்ளது. ஆதிச்சநல்லூரின் உறைவிட மகத்துவம் பற்றியும் தெரியவரும் என்கின்றனர்.

 

Adhichanallur Excavation skull

 

இது குறித்து அகழாய்வுப் பணிகளைப் பல வருடங்களாக உடனிருந்து கண்காணிப்பவரும், ஆய்வில் தொடர்புடைய வரும், தொல்லியல் ஆய்வு ஆர்வலரும் எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் பேசிய போது; ‘அகழாய்வின் போது இது வரையிலும் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. அவைகள் அனைத்துமே மண்டையோடுகளில்லாத துண்டு எலும்புகளே கிடைத்தன. அதனைக் கொண்டு மனிதர்கள் பற்றிய ஆய்வில் முன்னேற முடியவில்லை. 3200 வருடங்களுக்கு முந்தைய இந்த முதுமக்கள் தாழியின் மூலம், மரணமடைந்தவர்களை பண்டைத் தமிழர்கள், பாதுகாப்பின் பொருட்டு தாழிகளில் அடைத்துப் புதைத்துள்ளனர். என்பது மட்டும் தெரியவந்தது.


தற்போது கிடைத்த இரண்டு தாழிகளிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மனித உடலின் முழு எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. துண்டு எலும்புகளைக் கொண்ட தாழிகளை இரண்டாம் நிலை பரியல் (அடக்கம்) என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். அதாவது இறந்தவர்களை முதலில் எரித்து விட்டுப் பின்பு அவர்களை தாழிகளில் வைத்துப் புதைத்திருக்கிறார்கள். அதனால் தான் துண்டு எலும்புகள் காணப்பட்டன. எனவேதான் இந்த முறை இரண்டாம் நிலை பரியல் எனப்படுகிறது.


ஆனால் தற்போதைய இரண்டு தாழிகளில் முழு எலும்புக் கூடுகள். 3200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்கள் ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான காற்று, சுற்றுப்புற மாசு இல்லாத வாழ்க்கை காரணமாக 100 வயது கடந்தும் வாழ்ந்திருக்கிறார்கள். வயது ஏற ஏற அவர்களின் முதுமை காரணமாக முதுகு கூன் விழுந்து வளைந்து விடும். அவர்களால் வேலைகள் செய்யமுடியாது முடங்கி விடுவார்கள். அசையக் கூட முடியாத நிலை ஏற்பட்டு விடும் அவர்கள் உடம்பின் அவயங்கள் சீராக இயங்கும். ஆனால் உயிர் பிரியாமலிருக்கும். அத்தனை எளிதில் சாகமாட்டார்கள். அந்த நிலைப்பாடு வருகிற போது அது போன்ற வயதான முதுமக்களை, முன்னோர்கள் உயிருடன் தாழியில் வைத்துப் புதைத்து விடும் ஆச்சரியமான பழக்கம் இருந்திருக்கிறது. இது முதலாம் நிலை பரியல். இப்படிப் புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புக் கூடுகள் தான் இவைகள் என்கிற கான்சப்ட தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியிலிருக்கிறது. இதன் மூலம் அது உறுதியாகிறது.


கண்டு பிடிக்கப்பட்ட மண்டையோடு பற்கள், கை, கால், முதுகு, பிற எலும்புகள் அனைத்தும் டி.என்.ஏ. பகுப்பாய்விற்காக மதுரை காமராஜர், பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், கிடைத்த எலும்பு கூடுகள் ஆணா, பெண்ணா, எத்தனை வயதிருக்கும் என்பன போன்ற நமது முன்னோர்கள் பற்றிய அரிய விஷயங்கள் வெளிவரும். சந்தேகங்கள் தீரும். ஆனா ஒன்று மட்டும் நிச்சயம் 3200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நம் தமிழ் வம்சத்தவர்கள் சாதாரண சராசரியாக 100 வயது கடந்தும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதியாக உணர முடிகிறது’ என்றார் புருவங்களை உயர்த்தியபடி.


கற்பனையையும் தாண்டிய ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் உள்ளடக்கியிருக்கிறது 3200 ஆண்டு முந்தைய கால பழமையான ஆதிச்சநல்லூரின் நமது தமிழர்களின் வாழ்க்கை முறைகள்.

 

 

Next Story

உலகப் பாரம்பரிய வார விழா; தொன்மைப் பொருட்கள் கண்காட்சி

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக் குழு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து நடத்திய உலக பாரம்பரிய வார விழாக் கொண்டாட்டம் 2023 தொன்மைப் பொருட்கள் கண்காட்சி சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் சிவகங்கை தொல்நடைக் குழுவின் தலைவரும் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான நா. சுந்தரராஜன்  தலைமை வகித்தார், சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர் சு. காளீஸ்வரன் வந்தோரை வரவேற்றார். சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா நோக்க உரையாற்றினார். சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி தொல்நடைக் குழு பெருமைமிகு வழிகாட்டி செ. கண்ணப்பன் முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்ட அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்  (பொறுப்பு) திருமதி ஜெயமணி அவர்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தும் போது, மரபு நீட்சியை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அடுத்த அடுத்த தலைமுறைக்கு பண்பாட்டையும் மரபையும் பாதுகாக்க முடியும் சிவகங்கையில் உலகப் பாரம்பரிய வார விழா கொண்டாடுவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.

 

சிவகங்கை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சங்கர், சிவகங்கை மகளிர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனீஸ்வரன், காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி மேனாள் முதல்வர் வள்ளி, பள்ளி ஆய்வாளர் இராதா கிருஷ்ணன்,சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர் வித்தியா கணபதி ஆகியோர் வாழ்த்துரைத்தனர். சிவகங்கை தொல்நடைக்குழு செயலர் இரா.நரசிம்மன் நன்றியுரைத்தார்.

 

இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து மூன்று ஆண்டுகளாக உலகப் பாரம்பரிய விழாவை கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்தரங்க நிகழ்வாக நடைபெற்ற உலக பாரம்பரிய வார விழா இந்த ஆண்டு கண்காட்சியாக நடத்தப்பட்டது.

 

இந்த ஆண்டு நடைபெற்ற இக்கண்காட்சியில் 600 க்கு மேற்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சிவகங்கை தொல்நடைக் குழுவினர், அவ்வப்போது மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் கிடைத்த பொருள்களை காட்சிப்படுத்தியிருந்தனர். இதில் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவகங்கை சுற்றுப்பகுதியில் கிடைத்த இரும்பு உருக்கு ஆலை எச்சங்கள், மண்ணால் ஆன குழாய்கள், இரும்புக் கழிவுகள் காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் கிடைத்த தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடு,எலும்பு முனைக்கருவி, பானையோட்டுக் குறியீடுகள், சங்க கால செங்கல் மற்றும் மேற்கூரை ஓட்டு எச்சங்கள், வட்டச் சில்லுகள், ராஜராஜ சோழன்  பீஜப்பூர் சுல்தான் நாணயங்கள் உட்பட பழமையான நாணயங்களும் இருந்தது.

 

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக இணைச்செயலர் பீர்முகமது அவர்களது பத்தாண்டு கால சேகரிப்பில் உள்ள கலைநயமிக்க வெண்கலப் பொருள்கள், மரப் பொருள்கள், கத்திகள், வாள்கள், பழமையான செட்டிநாட்டு புழங்கு பொருட்கள், உரல் உலக்கை பழமையான கண்ணாடிப் பொருட்கள், இன்றைய பயன்பாட்டில் இல்லாத பழமையான மின்சாதன பொருட்கள், பலதரப்பட்ட தொலைக்காட்சிகள் பல வகையான வானொலிகள் முதலியவற்றுடன்  மௌண்ட் லிட்ரா பள்ளி மாணவர்கள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய பனையோலைகள் பழமையான விளக்குகள் மற்றும் மன்னர் பள்ளி மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வளரி, வாள் பழமையான மின்சாதன பொருட்கள், விளக்குகள் ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் காட்சிப் படுத்தப் பெற்றிருந்தன.

 

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தொல்நடைக் குழு வைச்சேர்ந்த பொருளர் பிரபாகரன், இணைச் செயலர் முத்துக்குமார், சரவணன்,பாலமுருகன், அலெக்ஸ் பாண்டியன், முத்துக் காமாட்சி, மீனாள், மற்றும் மன்னர் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள் பர்வத ரோகிணி, பழனிவேல் முருகன், தனலட்சுமி காந்தி அழகப்பன், வெங்கட கிரி,பிரசாத், மனோகரன் ஆகியோர்  செய்திருந்தனர். சிவகங்கை மன்னர்  கல்வி நிறுவனங்கள்  மற்றும் சிவகங்கை நகரைச் சுற்றியுள்ள பள்ளிகள் என மூவாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தொன்மைப் பொருட்கள் கண்காட்சியை கண்டு களித்தனர்.

 

 

Next Story

கீழடியை போல பனங்குடியில் பழமையான கழிவுநீர்க் குழாய் கண்டுபிடிப்பு

Published on 15/10/2023 | Edited on 15/10/2023

 

Discovery of ancient sewage pipe in Panangudi like Keezhadi

 

சிவகங்கை மாவட்டத்தில் பழமையான  தொல்லெச்சங்கள் பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. தற்போது சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம், பனங்குடிப் பகுதியில் பனங்குடிக் கண்மாய் மயிலாடும்போக்கு என்னும் இடத்தில் வித்தியாசமான அமைப்பில் ஓடுகள் கிடைப்பதாக பனங்குடியைச் சேர்ந்த சசிக்குமார்,பாண்டியன் இளங்கோ, முத்தரசு ஆகியோர்  சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, செயலாளர் இரா.நரசிம்மன் துணைச் செயலாளர் முத்துக்குமார், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அப்பகுதியில்  மேற்பரப்புக்கள ஆய்வு செய்தனர்.

 

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா  செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, 'பனங்குடிக் கண்மாய் மயிலாடும்போக்கு பகுதியில் கண்மாய்க் கரையை அகலப்படுத்துதல் மற்றும் உயர்த்தும் பணி நடைபெற்றது. அப்பணியின் பின்பு அங்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் குழந்தைகள் விளையாடும் பொழுது வித்தியாசமான மண் ஓடுகள் கிடைத்திருக்கின்றன. அவற்றை அவர்கள் பெரியவர்களிடம் காண்பித்துள்ளனர், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஊர்க்காரர்கள் இது ஏதாவது பழமையான ஓடாக இருக்கும் என்ற அளவில் விட்டுவிட்டனர். இந்நிலையில் நாங்கள் அவ்விடத்தில் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டோம். இங்கு காணப்பட்ட கழிவுநீர்க் கால்வாய் போன்ற அமைப்பு மண்ணால் உறை போன்று செய்யப்பட்டு ஒன்றின் மேல்  ஒன்றாக  கோர்வையாக அடுக்கி படுக்கை வசத்தில் நீர் போவதற்கான அமைப்பாக ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளது. இதுபோன்ற கழிவுநீர்க் குழாய் அமைப்புகள் சிந்துச் சமவெளி நாகரிகம் தொட்டு காணப்படுகிறது என்றாலும் தமிழகத்திலும் கீழடி போன்ற அகழாய்வுகளில் இவ்வாறான கழிவு நீர்க் குழாய்கள் காணக் கிடைக்கின்றன.

 

கீழடியில் காணப்பட்ட கழிவுநீர்க்குழாய்களை விட  இவை அளவில் சற்று பெரியதாக இருக்கிறது. இதன் அமைப்பு முறையும் கீழடி அகழாய்வில் கிடைத்த குழாயினும்  மாறுபட்டதாகவே  தெரிகிறது. பனங்குடி மயிலாடும் போக்கு கண்மாயை அடுத்து சுமார் 15 ஏக்கருக்கு பானை ஓடுகள் பரந்து விரவிக் கிடக்கின்றன. இதில் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மேலும் வட்டச்சில் எச்சங்களை  கண்டெடுத்தோம்‌.

 

பரந்து விரிந்து கிடக்கிற பானை ஓடுகளைக் கொண்டும் குழாய் வடிவத்தில் கிடைக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் பிற தேவைக்காக பயன்படுத்தப்பட்ட குழாய் அமைப்பைக் கொண்டும் இது வாழ்விடப் பகுதி என்பதை நாம் அறிய முடிகிறது. மேலும் இப்பகுதியிலிருந்து 700 மீட்டர் தொலைவில் பெருங்கற்கால கல்வட்ட எச்சங்களையும் காண முடிகிறது‌. அந்த கல் வட்ட எச்சங்களுக்கிடையே முதுமக்கள் தாழி பானை ஓடுகளும் மேற்பரப்பில் காணக் கிடைக்கின்றன.

 

இவ்விடத்தில் தொல்லியல் துறையினர் விரிவான ஆய்வை மேற்கொண்ட பிறகே முழுமையான தகவல் தெரியவரும், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் நாம் பேசிய பொழுது மாவட்ட நிர்வாகம் வழியாக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார் .இது குறித்து கிராம மக்களிடையே  தொன்மையை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தோம்' என்றார்.