AD Discovery of a 15th century archer's sculpture

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே தென்னமநல்லூரில் 600 ஆண்டுகள் பழமையான வில் வீரனின் நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தென்னமநல்லூரை சேர்ந்த க.சிவன் என்பவர், தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாகக் கொடுத்த தகவல்படி, மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் ஆனந்தகுரமன், மணிகண்டன், தர்மர், வைகிராஜா ஆகியோர் கொண்டக் குழுவினர் அப்பகுதியை மேற்பரப்பு கள ஆய்வு செய்தபோது மன்னில் பாதி புதைந்த நிலையில் கி.பி.15- ம் நூற்றாண்டை சேர்ந்த வில் வீரன் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது, "சங்க காலம் முதல் இன்றுவரை தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை ஒரு முக்கிய பங்காக உள்ளது. நடுகல் என்பது போரில் இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் வீரம் பேசும் நினைவுக்கல். பெருநிரை (பெருந்திரள் வீரர்களை) விலக்கி மாண்டு போன வீரனுக்காக எடுக்கப்படும் நினைவுக் கல்லாகும். அதன்படி தென்னமநல்லூரில் கண்டறியப்பட்ட வில் வீரன் நடுகல் சிற்பம் 4 அடி உயரம், 2 அடி அகலம் 12 செ.மீ தடிமனும் கொண்டக் கருங்கல்லான தனி பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

AD Discovery of a 15th century archer's sculpture

வீரனின் உருவத்தில் இடது கையில் வில்லை ஏந்தியவாறு, வலது கை இடுப்பில் சொருகப்பட்ட நீண்ட வாளை பிடித்தவாறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வலது புறம் சரிந்த கொண்டையானதை அள்ளி முடிக்கப்பட்டும், காதுகளில் காதணி, கழுத்தில் சரபளி சவடி, பதக்கம் போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்கிலியும் காணப்படுகிறது. சன்னவீரம் என்பது போருக்கு செல்லும் வீரர்கள் அணிவதாகும். வீரனின் முதுகுப் பகுதியில் அம்புக்கூட்டில் 11 அம்புகள் உள்ளது. வீரனின் இடுப்புபகுதியில் சலங்கை மற்றும் பதக்கம் கொண்ட அணிகலன்களும், கை, கால்களிலும் வீரக்கழலும் அணிந்து கொண்டு முன்னங்காலை ஊன்றி போருக்கு செல்லவதைப் போன்று நின்ற நிலையில் காணப்படுகிறது.

இச்சிற்பத்தை ஆய்வு செய்யும்போது இப்பகுதியில் வில் வித்தையில் புகழ் பெற்று இறந்த போர் வீரனின் நினைவை பறைசாற்றுவதற்காக எழுப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். இதன் காலம் கி.பி. 15- ம் நூற்றாண்டு சேர்ந்தவை. தற்போது மக்கள் வேட்டைக்காரன் கோவில் என்று வழிபட்டு வருகின்றனர்" என்றார்.