Skip to main content

அரசியலுக்கு வரும்போதே சி.எம். ஆவது எப்படி?

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
kamal rajini vijay


 

கமல் அரசியல் பேசக்கூடாது என்று சொல்லி எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக அமைச்சர்கள் கேலி செய்து செய்தே அவரை அரசியல் கட்சியைத் தொடங்க வைத்தார்கள்.

 

அந்தச் சமயத்திலேயே பாரதிராஜா சொன்னார். கமலை சீண்டாதீர்கள். அரசியல் கட்சியை தொடங்கி நடத்துவது என்று கற்றுக்கொண்டு வந்துவிடுவான் என்றார். அதன்படியே, வெறும் வாய்ச்சவடாலாக இல்லாமல், சொன்னபடியே அரசியல் கட்சியைத் தொடங்கி, படிப்படியாக வளர்வோம் என்று அரசியலை நடத்துகிறார்.

 

அவர் தனது கட்சி நாளையே ஆட்சியைப் பிடிக்கும் என்றோ, தான் முதல்வராவோம் என்றோ ஒருபோதும் கூறியதில்லை.

 

அரசியலுக்கு வரவே மாட்டார் என்று கருதிய கமல் சட்டென்று அரசியலுக்குள் வந்துவிட்ட நிலையில், 1996 ஆம் ஆண்டிலிருந்து அரசியலுக்கு வந்துவிடுவார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் இன்னமும் தனது முடிவை இறுதிப்படுத்த முடியாமல், தனக்கு வரும் புதிய படங்களை ஒப்புக்கொள்வதும், அந்த படங்களின் ரிலீஸுக்கு முன்பு அரசியல் பேசுவதுமாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

 

“நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல வந்துருவேன்”னு ரஜினி தனது ரசிகர்களின் அரசியல் ஆசைக்கு உயிர்கொடுத்துக் கொண்டே, தனது சினிமா வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்திலேயே, தனது திருமண மண்டபத்தின் சிறு பகுதியை கோயம்பேடு சாலை நெருக்கடியை தீர்க்க உதவும் பாலத்திற்காக கையகப்படுத்தியதை காரணமாக கொண்டு கட்சியைத் தொடங்கி அரசியல் தலைவரானார் விஜயகாந்த்.

 

மக்கள் பயன்பாட்டுக்காக அரசு கையகப்படுத்திய சிறு இடத்திற்கு பெரிய இழப்பீடைப் பெற்றுக்கொண்டு, அரசியல் தலைவராகவும் ஆன விஜயகாந்த், பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பை ஏற்கிற அளவுக்கு வளர்ந்தார். ஒரு கட்டத்தில் வைகோவே இவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் நிலைக்கு உயர்ந்தார்.

 

அவரைக் காட்டிலும் ரொம்ப சீனியரான ரஜினியோ தனது ரசிகர்கள் எண்ணிக்கையை இழந்த நிலையில் வயதான காலகட்டத்திலும் இதோ அதோ என்று அரசியல் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார். அப்படியே இருந்தால்கூட பரவாயில்லை. தனது படங்களில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் ரஜினி, நிஜத்தில் மக்கள் போராட்டங்களுக்கு எதிராக கருத்துச் சொல்லி மாட்டிக் கொள்கிறார். எம்ஜியார் ஆட்சியை கொண்டு வருவேன் என்று காமெடி செய்கிறார். அதிமுக கூட்டங்களில் கலைஞர் படத்தை வைக்க வேண்டும் என்று குழப்புகிறார். சிஸ்டம் சரியில்லை என்று சொல்லிக்கொண்டே, திரைப்பட வியாபாரத்திலும், பள்ளிக்கூடம் நடத்தியதிலும் மனைவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலே சொல்லாமல் தவிர்க்கிறார்.

 

இவர்கள் இப்படியென்றால், விஜய் தனது பங்கிற்கு முதல்வர் ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசும்போது நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் என்று உறுதி அளித்திருக்கிறார். அவர் இப்படிச் சொன்னதும், சினிமாவிலேயே நீங்க நடிக்கிறதில்லையே பாஸ் என்று மீம்ஸ்கள் தூள்பறந்தன.

 

சினிமா நடிகர்கள் எல்லோரும் வரும்போதே எம்ஜியாராக கற்பனை செய்துகொண்டே வருகிறார்கள். அவர்கள் ஒரு உண்மையை மறந்துவிடுகிறார்கள். திமுக காங்கிரஸ் என்ற இரண்டு அரசியல் இயக்கங்கள் இருந்த நிலையில் திமுக மாபெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்திருந்தது. திமுகவில் ஒவ்வொரு ஊரிலும் திமுக கிளைக்கு நிகராக எம்ஜியார் மன்றங்களும் இருந்தன.

 

எம்ஜியார் கட்சி தொடங்கியபோது அந்த மன்றங்கள் அனைத்தும் அதிமுக கிளைகளாக மாற்றப்பட்டன. எனவே, எம்ஜியாருக்கு தமிழ்நாடு முழவதும் கட்சிக் கிளை இல்லாத ஊர்களே இல்லை என்ற நிலையை உடனே எட்ட முடிந்தது. அன்றைக்கு தமிழக அரசியலில் திமுக, காங்கிரஸ், அதிமுக என்ற மூன்று கட்சிகள் மட்டும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தன.

 

இப்போது நிலைமை அப்படியல்ல. ரஜினிகாந்தின் ரசிகர்கள் அனைவரும் அவரைப் போலவே வயதானவர்களாக இருக்கிறார்கள். கமல் ரசிகர்களும் அப்படித்தான். அவர்களால் சுறுசுறுப்பாக கட்சிப் பணியாற்ற முடியாது. மக்கள் ஆதரவு இல்லையென்ற உண்மையும் இருக்கிற ரசிகர்களுக்கு புரியும். எனவே, ரஜினியின் கட்சிக்கோ, கமல் கட்சிக்கோ பெரிய அளவில் பணம் செலவழிக்க யாரும் தயாராக இல்லை.

 

இதேதான் எல்லா நடிகருக்கும். ஒரு கட்சியில் இணைகிற யாரும் அந்தக் கட்சிக்கு அல்லது தலைவருக்கு உடனே ஆட்சியைப் பிடிக்கிற சக்தி இருக்கிறதா என்று பார்த்துத்தான் சேர்கிறார்கள். பணம் செலவழிக்கிறார்கள். அப்படி இல்லையென்றால், புதிதாக தொடங்கப்படும் கட்சி, தங்களுடைய செலவுக்கு பணம் தருமா என்று பார்த்தே சேர்கிறார்கள்.

 

மத்தியில் பாஜக ஆளுங்கட்சியாக இருந்தும் அந்தக் கட்சி இன்னமும் இரண்டு சதவீத வாக்குகளைக்கூட எட்ட முடியவில்லை என்ற உண்மை தெரியாமல் யாரும் இல்லை.

 

விஜய், தனது சர்க்கார் படம் வியாபாரம் முடியும்வரை தனது ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்ட அரசியல் பேசுவார். படம் ரிலீஸ் ஆனதும், அடுத்த படத்தில் நடிக்கப் போய்விடுவார். சன் பிக்சர்ஸும் ரஜினியை வைத்து தான் தயாரிக்கும் பேட்ட படத்தின் வியாபாரத்துக்காக இதேபோன்ற மேடையை ரஜினிக்கு ஏற்பாடு செய்யும். அவரும் அரசியல் சாக்கடையை சுத்தம் செய்வதற்காக அவதரித்தவரைப் போல பேசிவிட்டு, இமயமலைக்கு போய்விடுவார்.

 

பாவம் நடிகர்களை தலைவர்களாக நம்பியிருக்கிற ரசிகர்கள்தான்.
 

 

 

 

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.