Skip to main content

நடிகர் விஜய் நடித்த பிகில் ஊதுமா? தடைபோடும் அரசு...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

ஆளும்கட்சியை அடிக்கடி பகைத் துக்கொள்வதால் நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் சமீபகாலமாக சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. அவர் நடித்த "காவலன்', "தலைவா', "மெர்சல்', "சர்கார்' உள்ளிட்ட படங்கள் சிக்கலை சந்தித்தன. அதன் பிறகு ஏற்பட்ட சமரச முயற்சிகளில் அப்படங்கள் ரிலீஸானது. இந்த வரிசையில், தீபாவளிக்கு வரவிருக்கும் விஜய்யின் "பிகில்' படம் தற்போது ஆளும்கட்சியின் கோபப் பார்வையில் சிக்கியிருக்கிறது.
 

bigil



தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் "பிகில்' படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய விஜய், பேனர் சரிந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோபத்தைக் காட்டாமல், லாரி டிரைவர் மீதும், பேனர் அச்சடித்தவர் மீதும் கோபப்படுகின்றனர், பழி போடுகின்றனர். யாரை எங்கு உட்கார வைக்கணுமோ அங்கு அவரை உட்கார வைக்க வேண்டும்'' என முதல்வர் எடப்பாடி அரசை கடுமையாகத் தாக்கினார். இதற்காக, "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' என்கிற திருக்குறளையும் விஜய் சுட்டிக் காட்ட, விழாவே கைதட்டல்களால் அதிர்ந்தது.

"ஆடியோ ரிலீஸில் விஜய் பேசிய பேச்சு முழுவதையும் கேட்க விரும்பினார் எடப்பாடி. உளவுத்துறையினர் மூலம் விஜய்யின் பேச்சு எடப்பாடிக்கு போட்டுக் காட்டப்பட்டது. தன்னைத்தான் தாக்குகிறார் என்பதை உணர்ந்த எடப்பாடி, "சினிமாவில் இமேஜ் உள்ள அந்த தம்பி (விஜய்), ஏன் இப்படி சம்பந்தமில்லாத விசயங்களை அந்த விழாவில் பேச வேண்டும்? அரசியல் செய்ய நினைக்கிறாரா?' என தனது கோபத்தை மூத்த அமைச்சர்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன்பிறகு சில உத்தரவுகள் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டன'' என்கிறார்கள் மாநில உளவுத் துறையினர்.
 

eps



இதுகுறித்து மேலும் நாம் விசாரித்தபோது, "அரசியல் ஆர்வம் அதிகமுள்ள நடிகர் விஜய், தனது படங்களில் ஆளும்கட்சியை சீண்டும் வகையில் காட்சிகள் மற்றும் வசனங்கள் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவருடைய "தலைவா' படத்தில் அப்படிப்பட்ட சில காட்சிகள் இருந்தன. அதாவது, "எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கு எனது மகனிடமும் (விஜய்), அறிஞர் அண்ணாவிடம் இருந்த அறிவு என்னிடமும் இருக்கின்றன. தமிழகத்தில் அடுத்த முதல்வர் என் மகன்தான்' என விநியோகஸ்தர்களிடம் அடிக்கடி சொல்வார் விஜய்யின் அப்பா சந்திரசேகர். இதனை மையப்படுத்தும் வகையில்தான் "தலைவா' படம் எடுக்கப்பட்டது. அதற்கேற்ப, "டைம் டூ லீட்' என்கிற துணைத்தலைப்பும் அந்த படத்துக்கு வைக்கப்பட்டதுடன் சில காட்சிகளும் வசனங்களும் புகுத்தப்பட்டிருந்தன.


இந்த விவகாரம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியவர, படம் ரிலீஸாகும் முதல்நாள் அப்படத்திற்கு சிக்கல் முளைத்தது. குறிப்பாக, விஜய்யின் "தலைவா' படம் ரிலீஸாகும் தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் வர... அந்த தியேட்டர் உரிமையாளர் பாதுகாப்பு கேட்டு காவல்துறையை அணுக, பாதுகாப்பு தர மறுத்தது காவல்துறை. இதனால் படத்தை ரிலீஸ் செய்வதிலிருந்து தியேட்டர் உரிமையாளர் பின்வாங்கினார். தமிழகம் முழுவதும் இதே பாணியில் தியேட்டர் உரிமையாளர்கள் பின்வாங்க, படம் ரிலீஸாகவில்லை. இதனால் விஜய்யும் படத் தயாரிப்பாளரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, ஜெயலலிதாவை சந்திக்க தவமிருந்தனர் விஜய்யும் அவரது தந்தையும். ஒரு கட்டத்தில், அவர்களுக்கு அனுமதி கிடைக்க, சாஷ்டாங்கமாக மன்னிப்பு கேட்டதுடன், சில காட்சிகளும் வசனங்களும் நீக்க சம்மதித்தனர். படமும் ரிலீசானது. அதன்பிறகு அமைதியான விஜய், ஜெயலலிதா இல்லாத சூழலில் எடப்பாடி அரசை அவ்வப்போது சீண்டி வருகிறார்.

இந்த நிலையில், தலைவா படத்தின் போது ஜெயலலிதா எடுத்த அதே லகானை தற்போது எடுக்க ஆலோசித்து சில யோசனைகள் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் அரசு தரப்பிலிருந்து பாஸ் செய்யப்பட்டிருக்கிறது. கடந்தவாரம் அது குறித்து ஆலோசனை நடத்திய திரையரங்க உரிமையாளர்கள் சிலர், "அரசாங்கத்தை பகைத்துக்கொண்டு படத்தை ரிலீஸ் செய்யணுமா?' என விவாதித்துள்ளனர். இதற்கிடையே, சென்சார் போர்டிலும் தமிழக அரசு அதிகாரிகள் தலையிட்டிருக்கிறார்கள். இதனால், சென்சாருக்கு அப்ளை செய்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் சென்சார் செய்யும் பட்டியலில் "பிகில்' படத்தை சேர்ப்பதில் இழுபறி நீடித்தது. ஆக, ஆட்சியாளர்களை அட்டாக் பண்ணியதால் விஜய்யின் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதில் தடையை ஏற்படுத்தி வருகிறது ஆளும் கட்சி'' என பின்னணிகளை சுட்டிக் காட்டுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

"பிகிலுக்கு தடை ஏற்படுத்தும் ஆட்சியாளர்களின் திட்டத்தையறிந்து அதிர்ச்சியடைந்த விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினியின் உதவியை நாடியிருக்கிறார். ஆனால், இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட ரஜினி அவசரம் காட்டவில்லை. விஜய்யின் தனிப்பட்ட கருத்துக்களால் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் குறித்து ரஜினிக்கு விபரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடியை சந்தித்து சமரசம் பேசவும் தயாராகி வருகிறார் விஜய். ஆனால் அந்த சந்திப்பு ரகசியமாக இருக்க வேண்டும் எனவும் திட்டமிடப்படுகிறதாம். இதற்கிடையே, சென்சார் விசயத்தில் பா.ஜ.க.வின் ஆதரவைப்பெற டெல்லியை அணுகும் முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது'' என்கிறார்கள் கோலிவுட் தரப்பினர். எதிர்ப்பு வளையத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், ஆட்சியாளர்கள் மனது வைத்தால்தான் தீபாவளிக்கு பிகில் ஊதுவார் நடிகர் விஜய்.
 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.