Skip to main content

நடிகர் விஜய் நடித்த பிகில் ஊதுமா? தடைபோடும் அரசு...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

ஆளும்கட்சியை அடிக்கடி பகைத் துக்கொள்வதால் நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் சமீபகாலமாக சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. அவர் நடித்த "காவலன்', "தலைவா', "மெர்சல்', "சர்கார்' உள்ளிட்ட படங்கள் சிக்கலை சந்தித்தன. அதன் பிறகு ஏற்பட்ட சமரச முயற்சிகளில் அப்படங்கள் ரிலீஸானது. இந்த வரிசையில், தீபாவளிக்கு வரவிருக்கும் விஜய்யின் "பிகில்' படம் தற்போது ஆளும்கட்சியின் கோபப் பார்வையில் சிக்கியிருக்கிறது.
 

bigil



தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் "பிகில்' படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய விஜய், பேனர் சரிந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோபத்தைக் காட்டாமல், லாரி டிரைவர் மீதும், பேனர் அச்சடித்தவர் மீதும் கோபப்படுகின்றனர், பழி போடுகின்றனர். யாரை எங்கு உட்கார வைக்கணுமோ அங்கு அவரை உட்கார வைக்க வேண்டும்'' என முதல்வர் எடப்பாடி அரசை கடுமையாகத் தாக்கினார். இதற்காக, "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' என்கிற திருக்குறளையும் விஜய் சுட்டிக் காட்ட, விழாவே கைதட்டல்களால் அதிர்ந்தது.

"ஆடியோ ரிலீஸில் விஜய் பேசிய பேச்சு முழுவதையும் கேட்க விரும்பினார் எடப்பாடி. உளவுத்துறையினர் மூலம் விஜய்யின் பேச்சு எடப்பாடிக்கு போட்டுக் காட்டப்பட்டது. தன்னைத்தான் தாக்குகிறார் என்பதை உணர்ந்த எடப்பாடி, "சினிமாவில் இமேஜ் உள்ள அந்த தம்பி (விஜய்), ஏன் இப்படி சம்பந்தமில்லாத விசயங்களை அந்த விழாவில் பேச வேண்டும்? அரசியல் செய்ய நினைக்கிறாரா?' என தனது கோபத்தை மூத்த அமைச்சர்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன்பிறகு சில உத்தரவுகள் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டன'' என்கிறார்கள் மாநில உளவுத் துறையினர்.
 

eps



இதுகுறித்து மேலும் நாம் விசாரித்தபோது, "அரசியல் ஆர்வம் அதிகமுள்ள நடிகர் விஜய், தனது படங்களில் ஆளும்கட்சியை சீண்டும் வகையில் காட்சிகள் மற்றும் வசனங்கள் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவருடைய "தலைவா' படத்தில் அப்படிப்பட்ட சில காட்சிகள் இருந்தன. அதாவது, "எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கு எனது மகனிடமும் (விஜய்), அறிஞர் அண்ணாவிடம் இருந்த அறிவு என்னிடமும் இருக்கின்றன. தமிழகத்தில் அடுத்த முதல்வர் என் மகன்தான்' என விநியோகஸ்தர்களிடம் அடிக்கடி சொல்வார் விஜய்யின் அப்பா சந்திரசேகர். இதனை மையப்படுத்தும் வகையில்தான் "தலைவா' படம் எடுக்கப்பட்டது. அதற்கேற்ப, "டைம் டூ லீட்' என்கிற துணைத்தலைப்பும் அந்த படத்துக்கு வைக்கப்பட்டதுடன் சில காட்சிகளும் வசனங்களும் புகுத்தப்பட்டிருந்தன.


இந்த விவகாரம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியவர, படம் ரிலீஸாகும் முதல்நாள் அப்படத்திற்கு சிக்கல் முளைத்தது. குறிப்பாக, விஜய்யின் "தலைவா' படம் ரிலீஸாகும் தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் வர... அந்த தியேட்டர் உரிமையாளர் பாதுகாப்பு கேட்டு காவல்துறையை அணுக, பாதுகாப்பு தர மறுத்தது காவல்துறை. இதனால் படத்தை ரிலீஸ் செய்வதிலிருந்து தியேட்டர் உரிமையாளர் பின்வாங்கினார். தமிழகம் முழுவதும் இதே பாணியில் தியேட்டர் உரிமையாளர்கள் பின்வாங்க, படம் ரிலீஸாகவில்லை. இதனால் விஜய்யும் படத் தயாரிப்பாளரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, ஜெயலலிதாவை சந்திக்க தவமிருந்தனர் விஜய்யும் அவரது தந்தையும். ஒரு கட்டத்தில், அவர்களுக்கு அனுமதி கிடைக்க, சாஷ்டாங்கமாக மன்னிப்பு கேட்டதுடன், சில காட்சிகளும் வசனங்களும் நீக்க சம்மதித்தனர். படமும் ரிலீசானது. அதன்பிறகு அமைதியான விஜய், ஜெயலலிதா இல்லாத சூழலில் எடப்பாடி அரசை அவ்வப்போது சீண்டி வருகிறார்.

இந்த நிலையில், தலைவா படத்தின் போது ஜெயலலிதா எடுத்த அதே லகானை தற்போது எடுக்க ஆலோசித்து சில யோசனைகள் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் அரசு தரப்பிலிருந்து பாஸ் செய்யப்பட்டிருக்கிறது. கடந்தவாரம் அது குறித்து ஆலோசனை நடத்திய திரையரங்க உரிமையாளர்கள் சிலர், "அரசாங்கத்தை பகைத்துக்கொண்டு படத்தை ரிலீஸ் செய்யணுமா?' என விவாதித்துள்ளனர். இதற்கிடையே, சென்சார் போர்டிலும் தமிழக அரசு அதிகாரிகள் தலையிட்டிருக்கிறார்கள். இதனால், சென்சாருக்கு அப்ளை செய்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் சென்சார் செய்யும் பட்டியலில் "பிகில்' படத்தை சேர்ப்பதில் இழுபறி நீடித்தது. ஆக, ஆட்சியாளர்களை அட்டாக் பண்ணியதால் விஜய்யின் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதில் தடையை ஏற்படுத்தி வருகிறது ஆளும் கட்சி'' என பின்னணிகளை சுட்டிக் காட்டுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

"பிகிலுக்கு தடை ஏற்படுத்தும் ஆட்சியாளர்களின் திட்டத்தையறிந்து அதிர்ச்சியடைந்த விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினியின் உதவியை நாடியிருக்கிறார். ஆனால், இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட ரஜினி அவசரம் காட்டவில்லை. விஜய்யின் தனிப்பட்ட கருத்துக்களால் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் குறித்து ரஜினிக்கு விபரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடியை சந்தித்து சமரசம் பேசவும் தயாராகி வருகிறார் விஜய். ஆனால் அந்த சந்திப்பு ரகசியமாக இருக்க வேண்டும் எனவும் திட்டமிடப்படுகிறதாம். இதற்கிடையே, சென்சார் விசயத்தில் பா.ஜ.க.வின் ஆதரவைப்பெற டெல்லியை அணுகும் முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது'' என்கிறார்கள் கோலிவுட் தரப்பினர். எதிர்ப்பு வளையத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், ஆட்சியாளர்கள் மனது வைத்தால்தான் தீபாவளிக்கு பிகில் ஊதுவார் நடிகர் விஜய்.
 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.