Skip to main content

காமராஜருடன் இணைந்து தேசியத்தை உயர்த்தியவர் சிவாஜி கணேசன்! -காங்கிரஸ் கலைப்பிரிவினருடன் கலந்துரையாடிய கே.எஸ்.அழகிரி

Published on 14/05/2020 | Edited on 14/05/2020

 

sivaji


கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக கடந்த 50 நாட்களாக நீடித்து வரும் பொது ஊரடங்கினால் நாடு முழுவதும் பல்வேறு பணிகள் முடக்கப்பட்டன. அதில் அரசியல் கட்சிகளின் பணிகளும் அடங்கும். பொது வெளியில் அரசியல் கட்சிகள் நிவாரண உதவிகள் வழங்குவதைத் தவிர, அந்தக் கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகளும் முடங்கிப் போயின! 
              

குறிப்பாக, தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்வு உள்ளிட்ட பல முக்கியப் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன. ஆளும் கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் உள்ளிட்டவைகளுக்கு எதிராக நடத்தப்படும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் மிஸ்ஸிங்! 
             

இந்த நிலையில்தான், அரசியல் நடவடிக்கைகளை ஆன்லைனில் தொடர்வோம் என முடிவு செய்து கட்சியினருடன் காணொலி காட்சி மூலம் பேசத் துவங்கினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். காணொலி காட்சி மூலம் அரசியலை முன்னெடுக்கும் பணியைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். தி.மு.க.வைப் பின்பற்றி தங்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளன. 
 

ddd

                

அந்த வரிசையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகரன், தமிழகம் முழுவதுமுள்ள கலைப்பிரிவின் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நிகழ்வை முன்னெடுத்திருந்தார். சமீபத்தில் நடந்த அந்தக் காணொலி காட்சியின் வழியாகக் கலைப்பிரிவு நிர்வாகிகளுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், கட்சியின் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரனும் விவாதித்தனர்.
                     

கரோனா நெருக்கடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கலைப்பிரிவு சார்பில் செய்யப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், வெளி மாநிலத் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குரிய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசித்தார் கே.எஸ்.அழகிரி. தங்கள் மாவட்டத்திலுள்ள பிரச்சனைகள், அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காத சூழல், தாங்கள் செய்துள்ள பணிகள் என அனைத்தையும் விவரித்தனர் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் கணொலியில் கலந்துகொண்ட கலைப்பிரிவு நிர்வாகிகள். 
                      

KS Azhagiri


இந்த நிகழ்வின் போது, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குறித்த பல நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் கே.எஸ்.அழகிரி. கலைப்பிரிவினருடன் மனம் திறந்த கே.எஸ். அழகிரி, ‘’கலை என்றாலே அது நடிகர் திலகம் சிவாஜிதான். தமிழகத்திற்கு தேசிய சிந்தனைகளை ஊட்டியவர் சிவாஜி. சிவாஜியின் ஒவ்வொரு திரைப்படமும், அவரது அங்க அசைவுகளும், ஒவ்வொரு செயல்பாடும் தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு வலுசேர்த்தது என்பதை யாரும் மறைத்துவிட முடியாது. 


ஒரு காலத்தில் திராவிடமா? தேசியமா? என்கிற சூழல் வந்தபோது, பெருந்தலைவர் காமராஜருடன் தேசியத்தைத் தூக்கி நிறுத்தியவர் அண்ணன் சிவாஜி அவர்கள். இன்றைக்கும் சிவாஜி அவர்களின் பெயரால் கலைப்பிரிவின் மூலம் அதன் தலைவர் சந்திரசேகரனும் மற்ற நிர்வாகிகளும் பல்வேறு பணிகளைச் செய்து வருவது மகிழ்ச்சியைத் தருகிறது‘’ என்று சிவாஜியை நினைவூகூர்ந்தார் கே.எஸ்.அழகிரி.
                           

கலைப்பிரிவு நிர்வாகிகளிடன் தொடர்ந்து பேசிய அவர், ‘’இன்றைக்கு ஒரு உயிர்க்கொல்லி நோய் உலகம் முழுவதும் வந்திருக்கிறது.  பல நாடுகள் சிறப்பாக இந்த விவகாரத்தைக் கையாளுகிறார்கள். இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்மையான ஒத்துழைப்பைக் காங்கிரஸ் தந்து வருகிறது. அதே நேரத்தில், அரசாங்கத்தின் தவறுகள், மெத்தனப்போக்குகள், இயலாமைகள், அதனால் ஏற்படும் இழப்புகளை எடுத்துச் சொல்ல வேண்டிய எதிர்க்கட்சி பொறுப்பில் நாம் இருக்கிறோம். 
                                

http://onelink.to/nknapp

 

ஒரு பேரிடர் நிகழ்ந்துள்ள நேரத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கலாமே தவிர அவர்கள் செய்கிற தவறுகளைக் கண் மூடித்தனமாக ஆதரித்து விட முடியாது. அப்படித் துணை போனால் வரலாறு நம்மை மன்னிக்காது‘’ என்பதில் தொடங்கி இந்தப் பேரிடர் காலத்தில் மத்திய-மாநில அரசுகள் செய்துள்ள பல தவறுகளையும் சுட்டிக்காட்டியதுடன், பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்ய கலைப் பிரிவு நிர்வாகிகளுக்கு வலியுறுத்தினார் கே.எஸ்.அழகிரி.


 

 

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார்.