Skip to main content

"என்னண்ணே... இப்படி பண்ணீட்டீங்க...?" -வடியும் ரத்தத்துடன் எம்.ஆர்.ராதாவை கேட்ட எம்.ஜி.ஆர்! 

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

mgr

 

 

கலை, இலக்கியம், தமிழர்கள் வாழ்வியல், ஆன்மீகம், திரைப்பிரபலங்களின் அறியாத பக்கம், அவர்களுடனான தன்னுடைய நெருக்கம் என பல்வேறு தலைப்புகளில் நடிகர் ராஜேஷ் அவர்கள் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் நடிகர் எம்.ஆர். ராதாவின் வாழ்வு குறித்து பேசுகையில் அதில் முக்கிய சம்பவமான எம்.ஜி.ஆர். மீதான துப்பாக்கிச்சூடு குறித்து பகிர்ந்த ஒரு செய்தியைப் பார்ப்போம்.

 

"திராவிடர் கழக தொண்டர்கள், நெருங்கிய நண்பர்கள் என யார் பண உதவி கேட்டு கடிதம் எழுதினாலும் தயங்காமல் மணி ஆர்டர் அனுப்புவார் எம்.ஆர்.ராதா உதவி என்று வீட்டிற்கு தேடி வந்தவர்களுக்கு இல்லை என்று கூறவே மாட்டார். அவருடைய தோட்டம் ராமாவரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் வீட்டிற்கு எதிரே இருந்தது. அங்கே மாமரம், தென்னை மரம் நிறைய இருக்கும். அங்கே காய் பறிக்கிற நாளில் பறித்து முடித்தவுடன் வேலை பார்த்தவர்களை எல்லாம் அழைத்து பை நிறைய காய்களை அள்ளிக் கொடுப்பார். அந்த அளவிற்கு நல்ல மனிதர் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோருக்கெல்லாம் தனித்தனியே ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் அனைவருமே எம்.ஆர்.ராதாவுக்கு ரசிகர்களாக இருப்பார்கள். அனைவரையுமே நையாண்டி செய்வார். பக்திமான், பணக்காரன் என பாரபட்சமே பார்க்க மாட்டார்.

 

அப்படிப்பட்ட ஒருவருக்கு துப்பாக்கியை எடுத்து  எம்.ஜி.ஆரை சுடக்கூடிய மனப்பான்மை எப்படி வந்தது என்பதை அறிய அவரது வாழ்க்கையை நான் பல்வேறு கோணங்களில் ஆய்வுபடுத்தி பார்த்தேன். இந்த சம்பவத்துக்கு முன்பே ஒரு முறை கிட்டு என்ற ஒரு நாடக நடிகருடன் எம்.ஆர்.ராதாவுக்கு முரண் ஏற்பட்டுள்ளது. அந்த நடிகரின் உடைகள் இருந்த பெட்டியினுள் ஆசிட்டை ஊற்றி விட்டார். அன்று அவரால் நாடகத்தில் நடிக்க முடியவில்லை. அடுத்த முறை அவருடன் பிரச்சனை வந்தவுடன் அவரது முகத்திலேயே ஆசிட்டை ஊற்றி விட்டார். அதைப் பிரதிபலிப்பது போலத்தான் பாவமன்னிப்பு திரைப்படத்தில் ஒரு காட்சி இருக்கும்.

 

இதே போல கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உடன் ஏதோ முரண்பாடு ஏற்பட்டு உளுந்தூர்பேட்டையில் சென்று துப்பாக்கி வாங்கி வந்து அவரை சுடச் சென்றார். 'நீ சுட்டால் நல்லது தான்.. வாடா..' என என்.எஸ்.கிருஷ்ணன் நெஞ்சை நிமிர்த்தி காட்டினார். பின் எப்படியோ இருவரும் சமாதானம் ஆகிக்கொண்டனர். நடிப்புக்கும், வாழ்வுக்கும் வித்தியாசம் உண்டு. பலர் அதை புரிந்துகொள்வார்கள். சிலர் தாங்கள் நடிக்கும் பாத்திரத்திலிருந்து வெளியே வராமல் ஊறிப்போய்விடுவார்கள். எம்.ஆர்.ராதா அண்ணன் நடித்த பல பாத்திரங்கள் அவர் மனதில் ஆழமாக பதிந்து அவரை இது போன்ற செயல்களைச் செய்யத் தூண்டியிருக்கலாம். 

 

'நமக்கு எதிராக ஒருவன் இருக்கிறான். அவனால்தான் நம் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது' என்று நீங்கள் நினைக்க ஆரம்பித்து விட்டால் உங்கள் கண்களுக்கு அவர் எதிரியாகத்தான் தெரிவார். அதைத்தான் காமாலைக்காரனுக்கு கண்ணில் படுவதெல்லாம் மஞ்சள் என்பார்கள். தன்னுடைய மன உலகத்திலும், சினிமா உலகத்திலும் எம்.ஜி.ஆரை ஒரு வில்லனாக நினைத்து கொண்டதால் அவரை சுடும் அளவுக்கு செல்லும் நிலை வந்து விட்டது என்று நினைக்கிறேன். 'பெற்றால் தான் பிள்ளையா' படம் தொடர்பான பண விஷயங்களும் காரணம் என சொல்வார்கள். ஆனால் உளவியல் அடிப்படையான காரணம் இதுதான்.

 

எம்.ஜி.ஆர். வீட்டிற்கு எதிரேதான் இவரது தோட்டம் இருக்கும். துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பு அங்கேயே காத்திருக்கிறார். எம்.ஜி.ஆர். கார் வீட்டிற்குள் போனதும் சிறிது நேரம் கழித்து இவர் போயிருக்கிறார். எம்.ஜி.ஆர். யார் வந்தாலும் நான் இல்லையென்று சொல்... நான் ஓய்வெடுக்க போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனதால் காவலாளி அவர் இல்லை என்று சொல்லியிருக்கிறார். 'இப்போது உள்ளே போனதை நான் பார்த்தேனே... ஒரு முக்கியமான விஷயம்' என்று கூறி விட்டு உள்ளே சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கிறார். எம்.ஆர்.ராதா துப்பாக்கியை எடுத்து சுட முயலும் போது சுதாரித்து விலகி விடுகிறார். அதனால் அது காயத்தோடு போனது. திரைப்படங்களில் அதுபோன்ற காட்சிகளில் நடித்திருந்ததால் அது எம்.ஜி.ஆருக்கு ஒரு அனிச்சை செயலாகவே பழகிப்போனது. அவர் சுட்டவுடன் எம்.ஜி.ஆர் வழியும் ரத்தத்தை கையில் பிடித்துக்கொண்டே "என்னண்ணே... இப்படி பண்ணீட்டீங்க?" என்று சொல்லியிருக்கிறார். அதன் பின்பு அந்த வழக்கு நீண்ட நாள் நடந்தது.

 

எம்.ஆர்.ராதாவிற்காக என்.டி.வானமாமலை என்ற வழக்கறிஞர்தான் வழக்கு நடத்தினார். ஒரு நாள் எம்.ஜி.ஆர். அவரை தன்னுடைய ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து சென்று இது போன்றுதான் எம்.ஆர்.ராதா என்னை சுட்டார் என தத்ரூபமாக விளக்கி இருக்கிறார். ஒரு விழாவில் என்.டி.வானமாமலை அவர்களை நான் சந்திக்க நேர்ந்த போது அவர் இதை என்னிடம் கூறினார்." 

 

 

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

ஆர்.எம்.வீரப்பனுடனான அனுபவங்கள் - ரஜினி, கமல் உருக்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
rajini kamal about rm veerappan

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராகப் பணியாற்றியவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில், அதிமுக தனி அணி உருவாகக் காரணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்கரான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், நக்கீரன் ஆசிரியர், இளையராஜா, பாரதிராஜா, சிவக்குமார் உள்ளிட்டோர் வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் வீரப்பன் பற்றிய அனுபவங்களை பகிர்ந்தனர். 

ரஜினி பேசுகையில், “ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர்.  அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷியர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி, பேரும், புகழுடன் இன்றும் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ஆர்.எம் வீரப்பன் எப்போதும் பணத்திற்கு பின்னால் போனவர் இல்லை. அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்ந்தவர். எனக்கும் வீரப்பனுக்கும் இடையேயான நட்பு மிக ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. அவர் இப்போது இல்லை என்பது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்றார். 

கமல் பேசுகையில், “ஆர்.எம் வீரப்பனை சிறுவயதில் கலையுலகத்திலும் பின்பு அரசியல் உலகத்திற்கு அவர் சென்ற போதும், உயர்ந்த ஒரு உருவமாகத் தான் பார்த்து கொண்டிருந்தேன். பின்பு எம்.ஜி.ஆர் நடித்த அதே கம்பெனியில் நானும் வேலை செய்வேன் என நினைத்தது கிடையாது. அவருடைய பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவமும் ஞானமும் எனக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால், அது மிகையாகாது. திரையுலகத்திலும், அரசியலிலும் அவர் மூதறிஞர். எம்.ஜி.ஆரின் வலது கையாக திகழ்ந்தவர். அந்த நிலை மாறாமல் என்றும் அவர் நினைவாக இருந்து வாழ்ந்து மறைந்தவர்” என்றார். ரஜினி, கமல் இருவரும் உருக்கமுடன் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.