Skip to main content

பிக்பாக்கெட்காரனின் நல்ல மனசு! நடிகர் ராஜேஷ் பகிரும் சுவாரசிய சம்பவம்!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

actor rajesh

 

நடிகர் ராஜேஷ், பல்வேறு துறைகளில், அகண்ட வாசிப்பும் ஆழ்ந்த அறிவும் உள்ளவர். அவர் நம்மிடம் தொடர்ந்து பல வரலாற்று நிகழ்வுகளையும், பிரபலங்களுடனான தனது நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் அவர் பகிர்ந்துள்ள சுவாரசிய செய்தி ஒன்று...

 

"மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். நான் வேலை பார்த்த பள்ளியின் ஆசிரியர்கள் சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தனர். நான் அனுமதி வாங்கிச் சென்று அவர்களுக்குத் தேவையானதெல்லாம் வாங்கிக் கொடுப்பேன். அப்போது சிறையில் இருந்த ஜெய்சிங் என்ற ஆசிரியர் சிறை நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி பழைய வழக்குகளை எல்லாம் படித்து பார்த்திருக்கிறார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து இப்போதுவரை உள்ள வழக்குகளைப் படித்திருக்கிறார். அதில் இருந்து ஒரு சுவாரசியமான 'பிக்பாக்கெட்' வழக்குப் பற்றி சொன்னார். கேட்பதற்கே சுவாரசியமாக இருந்தது.

 

1913-லிருந்து 1917 வரை வெல்லிங்டன் பிரபு பம்பாயில் கவர்னராக இருந்திருக்கிறார். 1917-லிருந்து 1923 வரை சென்னையில் பணிபுரிந்தார். அவர் பம்பாயில் வேலை பார்க்கும்போது இங்கிருந்த ஐ.ஜி.யிடம் 'பம்பாயில் உள்ள பிக்பாக்கெட் திருடர்கள் எல்லாம் திறமையானவர்களாக இருக்கிறார்கள். பிரான்ஸ், இத்தாலியில் இருப்பவர்களை விட பெரிய ஆட்களாக இருக்கிறார்கள்' என வியந்து கூறியிருக்கிறார். உடனே சென்னையில் இருந்த ஐஜி 'இங்குள்ள பிக்பாக்கெட் திருடர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. ஒரு முறை இங்கு வந்து பாருங்கள்... யார் திறமையானவர்கள் என்று உங்களுக்குத் தெரியும்' என்று கூறியிருக்கிறார். அவரும் நான் பொறுப்பு மாறி வரும் போது பார்க்கிறேன் என்றார். பின் அவர் ஒரு நாள் இங்கு புதிதாக பதவி ஏற்க வருகிறார்.

 

இங்கிருந்த ஐஜி ஒரு திட்டம் போடுகிறார். நேராக சிறைக்குச் சென்று சிறந்த பிக்பாக்கெட் திருடனை கூட்டி வாருங்கள் என அதிகாரியிடம் கேட்டிருக்கிறார். அவரும் ஒருவரை அழைத்து வந்திருக்கிறார். இந்த ஐஜி அவரிடம் புதிதாக வரும் கவர்னரிடம் பிக்பாக்கெட் அடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அந்தத் திருடனுக்கு கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. பின் ஐஜி எல்லாவற்றையும் விளக்கிச் சொல்கிறார். அவரும் சரி என்கிறார். கவர்னர் வரும் போது ஓடிப்போய் அவர் காலில் விழுகிறார். கவர்னர் எழுப்பி 'என்ன வேண்டும்?' எனக் கேட்க இந்த திருடன் என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள் எனக் கூறிவிட்டு, 'மணி எத்தனை ஐயா?' எனக் கேட்டிருக்கிறான்.

 

அந்தக் காலத்தில் கையில் வாட்ச் கட்ட மாட்டார்கள். கோட் உடன் இணைத்து சட்டைக்குள் வைத்து இருப்பார்கள். அவர் அதை எடுத்து மணி பார்க்க முயற்சிக்க, கடிகாரத்தைக் காணவில்லை. அவர் எங்கேயோ அதைத் தொலைத்துவிட்டோம் என்று நினைக்கையில் இவர் உடனே எடுத்து "இதுவா..." என்றிருக்கிறார். கவர்னருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஒரு நூறு ரூபாயை பரிசாக கொடுத்துவிட்டு "நீ பெரிய திறமைக்காரன்.." எனப் பாராட்டிவிட்டுச் சென்றாராம். அந்தக் காலத்தில் நூறு ரூபாய் என்றால் ஒரு பங்களாவே வாங்கிவிடலாம்.

 

இன்னொரு சுவாரசியமான சம்பவம் உள்ளது. ஒரு பிக்பாக்கெட் திருடனை வக்கீல் ஒருவர் ஜாமீனில் எடுத்துள்ளார். அவர் பணம் கேட்டவுடன் கையில் பணம் இல்லை.. வீட்டிற்கு வாருங்கள் எடுத்துத் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவரும் சரி என்று இவருடன் பேருந்தில் சென்றிருக்கிறார். பாதி வழியிலேயே "சார்... இறங்குங்கள்" என்று சொல்லியிருக்கிறார்... இவருக்கு ஆச்சரியம்.. 'உன் வீடு வேறு ஏரியாவில் இருப்பதாகத் தானே சொன்ன...' எனக் கேட்க, அவன் 'சார் இறங்குங்க' என மீண்டும் சொல்லியிருக்கிறான். இருவரும் இறங்கி விடுகின்றனர். அவருக்கான பணத்தைக் கொடுத்துள்ளான். 'கையில் பணம் இல்லை என்று சொன்னாயே? இப்போது ஏது?' என்று கேட்க, தான் வருகிற வழியில் ஒருவனிடம் பிக்பாக்கெட் அடித்ததைக் கூறியிருக்கிறான்.

 

Ad

 

அதே போல் பிக்பாக்கெட் அடிப்பவர்கள் சிலர் எவ்வளவு நேர்மையாகக் கூட இருப்பார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். என்னுடைய உறவினர் வீட்டிற்கு ஒருவர் வந்தார். வருகிற வழியில் அவர் பையை யாரோ திருடிவிட்டனர். அதில் பத்திரம் எல்லாம் இருந்திருக்கிறது. அவர் அழுக ஆரம்பித்துவிட்டார். 'திரும்பி வந்துவிடும்' என்று அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்தோம். அதே போல் அந்தப் பத்திரம் அவருக்குத் திருப்பிக் கிடைத்துவிட்டது. பிக்பாக்கெட் அடிப்பவர்கள் அதில் பணம் ஏதும் இல்லையென்றால் உடனே அதைக் கவரில் போட்டு தபால் நிலையத்தில் போட்டு விடுவார்களாம். முகவரி இல்லாமல் வந்தால் அவர்கள் அதைக் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். இப்படித்தான் பலருடைய உடைமைகள் திரும்பிக் கிடைத்துள்ளன.   

 

 

 

Next Story

கலைமாமணி ராஜேஷை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி, கமல்

Published on 21/09/2022 | Edited on 22/09/2022

 

Rajini and Kamal congratulate  actor Rajesh

 

கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நாயகனாகவும் குணச்சித்திர கதாப்பாத்திரமாகவும் நடித்து வந்தார் கலைமாமணி நடிகர் ராஜேஷ்.
ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் திரைத்துறை வருவதற்கு முன்பு சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். ஆசிரியராக பணியாற்றியபோது திரைத்துறையில் நுழைய ஆசையிருந்தது; அதன்படி திரைத்துறையில் கால் பதித்தார்

 

திரைத்துறையில் இயற்கையான நடிகர் என்று பாராட்டப்பட்ட ராஜேஷ் சுமார் 45 ஆண்டுகளில் 150 படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போதும் நான்கு படங்களில் நடித்து வரும் இவர் கடந்த சில வருடங்களாக ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார், மேலும், ஜோதிடத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களையும் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கியவர்களையும் பேட்டி எடுத்தும் வந்தார்.

 

நக்கீரன் யூடியூப் சேனலில் சரித்திரம் என்ற நிகழ்ச்சியில் பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை நேர்காணல் செய்திருந்தார். நான்கு தொடராக வந்த நிகழ்ச்சி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. 

 

Rajini and Kamal congratulate  actor Rajesh

 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக அரசு  நியமித்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அந்த நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு நபர்களும் அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்

 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், கலைமாமணி நடிகர் ராஜேஷை நேரில் அழைத்தது வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பில் நடிகர் ராஜேஷுக்கு பொன்னாடை அணிவித்து, நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இவரை தொடர்ந்து கமல்ஹாசனும் நடிகர் ராஜேஷை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

இதனிடையே தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் ராஜேஷ் பொறுப்பேற்று கொண்டதை அறிந்த சிவகுமார், தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் தான் வரைந்த ஓவிய புத்தகத்தையும் நடிகர் ராஜேஷுக்கு வழங்கி மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார். 

 

 

 

Next Story

எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திற்கு தலைவராக நடிகர் ராஜேஷ் நியமனம்

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

tamilnadu goverment appointed actor rajesh as a head of tamilnadu goverment m.g.r film training centre

 

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். இப்போதும் முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை படத்தில் நடித்திருந்தார். 

 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்பக் கல்வி நுணுக்கங்கள் மற்றும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முதன்மை நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பல தரப்பட்ட திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பிற திரைப்படத் துணைப்பாடங்களையும், மாணவர்களுக்குக் கற்றுத் தருவதே முக்கிய இலக்கு ஆகும். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் சென்னை தரமணியில் 15.25 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வருகிறது.

 

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் ஒரு தலைவர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் பணிகளை செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள அந்நிறுவனத்தின் தலைவராக திரைப்பட நடிகர் ராஜேஷ் அவர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது" என குறிப்பிட்டுள்ளது.