Skip to main content

"நீங்கதான் வீட்டை திறக்கணும்" - ஆதரவாளர் வீட்டிற்கு 7 மாதங்கள் கழித்து சர்ப்ரைஸ் விசிட் அடித்த காமராஜர்

Published on 28/01/2022 | Edited on 29/01/2022

 

 

actor rajesh

 

நடிகர் ராஜேஷ், சினிமா, இலக்கியம், ஜோதிடம், ஆன்மீகம், சினிமா பிரபலங்களுடனான அவருடைய நெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், காமராஜரின் தீவிர ஆதரவாளரான சற்குணம் என்பவர் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருப்பார்கள். அதனால்தான் தங்களது ரசிகர்களை எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் அப்படியே அரசியலுக்கும் மாற்றினார்கள். எங்கள் ஊரில் சற்குணம் என்று ஒருவர் இருந்தார். அவர் காமராஜரின் தீவிரமான ரசிகர்; அவரது ஆதரவாளரும்கூட. அவர், ஊரில் ஒரு சொந்த வீடு கட்டினார். அந்த வீட்டை காமராஜர்தான் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். காமராஜருக்கு இது மாதிரியான செண்டிமெண்ட் விஷயங்களெல்லாம் பிடிக்காது. சற்குணம் காமராஜரிடம் வந்து கேட்க, இதற்காக நான் பட்டுக்கோட்டை வரணுமா, எனக்கு வேலை இருக்கு... நான் வரல என்று கூறிவிட்டார். அப்படியென்றால் நான் வீட்டைத் திறக்கமாட்டேன் என்று கூறி சற்குணம் வீட்டைப் பூட்டிவிட்டார். அப்படியே 7 மாதங்கள் கடந்துவிட்டன.

 

காமராஜர் ஒரு வேலை விஷயமாகப் பட்டுக்கோட்டைக்கு வருகிறார். வேலையை முடித்துவிட்டு அணைக்காடுல சற்குணம்னு ஒருத்தர் இருக்கார்ல... அவர் வீட்டுக்கு வண்டிய விடுங்கணே என்கிறார் காமராஜர். கார் சற்குணம் வீட்டை வந்தடைகிறது. வீட்டில் சற்குணம் இல்லை. அவர் எங்கோ வெளியே சென்றிருப்பதாக அருகில் இருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒருவரை அனுப்பி அவரை அழைத்துவரச் சொல்லிவிட்டு 45 நிமிடங்கள் அங்கேயே காமராஜர் காத்திருந்தாராம். காமராஜர் வந்திருக்கிற விஷயம் தெரிந்ததும் 'ஐயா...' என்று ஓடிவந்து அவர் காலில் விழுந்துள்ளார் சற்குணம். பின், காமராஜர் அந்த வீட்டை திறந்து வைக்க, வீட்டிற்குள் அழைத்துச் சென்று காமராஜரை அமரவைத்துள்ளார் சற்குணம்.

 

"என்னயா சந்தோசமா... இதுக்காகத்தான் என்னை இழுத்தடிச்சியா.. இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன், அப்படியே உன் வீட்டை திறந்து வச்சுட்டேன்... இப்ப திருப்தியா" எனக் கேட்டுள்ளார் காமராஜர். சற்குணத்திற்கு மகிழ்ச்சி தாங்கவில்லையாம். பின், காமராஜர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். 

 

அதன் பிறகு, காமராஜரின் இறுதி ஊர்வலத்தில் நான் சற்குணத்தைப் பார்த்தேன். காமராஜரின் உடலைச் சுமந்து சென்று கொண்டிருந்த லாரிக்கு முன்னால் அழுதுகொண்டே சற்குணம் சென்று கொண்டிருந்தார்".

 

 

Next Story

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
PM Modi remembers former CM of Tn

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில், ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக நேற்று (18.03.2024) தமிழகம் வந்திருந்தார். இதனையடுத்து பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சேலத்திற்கு வந்தார். அங்கு கெஜல்நாயக்கன்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார். முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் கைகளைப் பிடித்துக்கொண்டு மோடி நலம் விசாரித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சித் தலைவர்களான ஓ.பி.எஸ்., ராமதாஸ், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

PM Modi remembers former CM of Tn

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்தார்.

Next Story

“அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்” - அமைச்சர் துரைமுருகன்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

What Annamalai says is a lie filtered through Jamakalam  Minister Duraimurugan

 

அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியின் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்திருப்பதை இன்று (23.9.2023) வெளிவந்த தனியார் நாளிதழ் ஒன்றில் ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதில் ‘தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தை பாதுகாக்க 12 அணைகளை கட்டினார். ஆனால், ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திமுக 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது’ என்று ஒரு தவறான குற்றச்சாட்டை அண்ணாமலை திமுக மீது சுமத்தி இருக்கிறார். நித்தம் நித்தம் இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்திகளைப் பேசி வம்பில் மாட்டிக் கொள்வதை அண்ணாமலை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்று தான் இந்த தவறான குற்றச்சாட்டு. பெருந்தலைவர் காமராஜர், கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை போன்ற அணைகளை கட்டினார் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், திமுக ஆட்சியில் 5 அணைகளை மட்டுமே கட்டினார்கள் என்று அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்.

 

நம்பியாறு அணை, பொய்கையாறு அணை, கொடுமுடியாறு அணை, கடானா அணை, இராமநதி அணை, பாலாறு - பொருந்தலாறு அணை, மருதாநதி அணை, பரப்பலாறு அணை, வடக்கு பச்சையாறு அணை, பிளவுக்கல் அணை, மோர்தானா அணை, அடவிநயினார் அணை, ராஜாதோப்பு அணை, ஆண்டியப்பனூர் ஓடை அணை, சாஸ்தா கோயில் அணை, குப்பநத்தம் அணை, இருக்கன்குடி அணை, செண்பகத்தோப்பு அணை, நங்காஞ்சியார் அணை, நல்லதங்காள் ஓடை அணை,  மிருகண்டாநதி அணை, வரதாமநதி அணை,  வரட்டாறு வள்ளிமதுரை அணை இப்படி 40க்கும் மேற்பட்ட அணைகளை கட்டியது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி. ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளை சொல்வது தவறில்லை. ஆனால், அவ்வாறு சொல்வதற்கு முன், சொல்கிற குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். இது என்னுடைய நீண்டகால அனுபவத்தில் அண்ணாமலைக்கு நான் சொல்கிற ஒரு யோசனையாகும். இல்லாவிட்டால், அவர் கூறும் குற்றச்சாட்டு யாவும் புஸ்வாணமாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.