Skip to main content

வேலூர் தேர்தல்.... ஏ.சி.எஸ். திட்டம் வெற்றி... துரைமுருகன் திட்டம் தோல்வி...

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

 

ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள், முதலியார், வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள், கிருத்துவர்கள், நாயுடு, பிற சமூகத்தினர் வாக்குகள் என உள்ளன. இதில் பெரும்பாண்மை பலத்தோடு உள்ள சமூகமாக இஸ்லாமியர்கள், முதலியார்கள், வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என உள்ளனர். 
 

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக கூட்டணி வேட்பாளராக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார். 
 

acs - duraimurugan


 

ஏ.சி.சண்முகம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2014ல் இதே வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது அதிமுக சார்பில் செங்கூட்டுவன், திமுக கூட்டணி வேட்பாளராக இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியைச் சேர்ந்த அப்துல்ரகுமான் ஆகியோர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அதிமுகவின் செங்கூட்டுவன் வெற்றி பெற்றார். ஏ.சி.சண்முகம் 3,25,000 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். திமுக கூட்டணி வேட்பாளரான அப்துல் ரகுமான் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
 

தாமரைச் சின்னத்தில் நின்றதால்தான் தனக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்பதால் இந்த முறை இரட்டை இலை சின்னத்தில் ஏ.சி.சண்முகம் நின்றார். இஸ்லாமியர்கள் பாஜக மீது அதிருப்தியில் இருந்ததை கணக்கிட்டு அந்த வாக்குகள் மீது கவனம் செலுத்தாமல் மற்ற வாக்குகள் மீது கவனம் செலுத்தினார். முதலியார், நாயுடு, தலித் மற்றும் பிற சமூக வாக்குகளில் கவனம் செலுத்தினார். 
 

திமுகவினரோ, இஸ்லாமிய வாக்குகளோடு மற்றொரு சிறுபான்மையின வாக்குகளான கிருத்துவ வாக்குகள், வன்னியர் வாக்குகள், தலித் வாக்குகள் மீது கவனம் செலுத்தியது. தொகுதியில் இஸ்லாமிய வாக்குகள் 3.5 லட்சமும், கிருத்துவ வாக்குகள் 1.25 லட்சமும், முதலியார் வாக்குகள் 3 லட்சமும், வன்னியர்கள் வாக்குகள் 2.50 லட்சமும், தலித் வாக்குகள் 3 லட்சமும், நாயுடு சமுதாய வாக்குகள் ஒரு லட்சம் மற்றும் இதர சமுதாயத்தினரும் உள்ளனர். 
 

இந்த வாக்குகளில் இரு கட்சிகளும் தங்களுக்கான வாக்குகள் என பிரித்துக்கொண்டு வேலை செய்ததே ஒரு வேட்பாளருக்கு சந்தோஷத்தையும், மற்றொரு வேட்பாளருக்கு ஏமாற்றத்தையும் தந்துள்ளது.
 

திமுக வேட்பாளர் தனது சமுதாய வாக்குகள் பலமாக உள்ள அணைக்கட்டு, ஆலங்காயம், குடியாத்தம், கே.வி.குப்பம் போன்ற பகுதிகளில் உள்ள வாக்குகளும், இஸ்லாமியர்கள் பரந்து வாழும் பகுதிகளான ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டி, வேலூர் பகுதிகளில் உள்ள வாக்குகளும், தொகுதி முழுவதும் பரவலாக உள்ள
குறிப்பாக தனி தொகுதிகளான குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதியில் உள்ள தலித் வாக்குகளும் தங்களுக்கு சாதமாக விழும் என நினைத்தார். 
 

ஏ.சி.சண்முகம் தனது முதலியார் சமுதாய வாக்குகளும், நாயுடு சமுதாயம் மற்றும் பிற சமுதாய வாக்குகளும், மற்றும் தலித் வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என நினைத்து வேலை செய்தார். ஆறு சட்டமன்றத் தொகுதியிலும் இரு வேட்பாளர்களும் வாங்கியுள்ள வாக்குகளை பிரித்து ஆராயும்போது, பல சுவாரஸ்யங்கள் அறிய முடிகிறது.
 

அதில், ஏ.சி.சண்முகம் திட்டமிட்டதுபோல் முதலியார், நாயுடு உள்பட பிற சமுதாய வாக்குகளையும் மற்றும் தலித் வாக்குகளையும் ஓரளவு பெற்றுள்ளார். திமுகவுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வன்னியர் சமுதாய வாக்குகளும், ஏ.சி.சண்முகத்திற்கு பெருவாரியாக கிடைத்துள்ளன. குறிப்பாக அனைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரைவிட ஏ.சி.சண்முகம் கூடுதலாக 20 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். 
 

இதேபோல் தனி தொகுதியான குடியாத்தத்தில் திமுகவைவிட ஏ.சி.சண்முகம் கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளார். அதற்கு காரணம் அந்த தொகுதியில் உள்ள முதலியார் வாக்குளே. கே.வி.குப்பத்திலும் திமுகவைவிட ஏ.சி.சண்முகம் கூடுதலாகவே வாக்குகளை பெற்றுள்ளார். இது திமுகவிற்கு அதிர்ச்சியான ஒரு தகவல்தான். ஏனெனில் திமுக வேட்பாளர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

திமுகவுக்கு முதல் சுற்று முதல் கடைசி சுற்று வரை முன்னணியில் இருந்த தொகுதி எது என்றால் அது வாணியம்பாடிதான். அங்குள்ள இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் செலுத்திய வாக்குகள் திமுகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றன. அதிமுகவைவிட திமுக இந்த தொகுதியில் 28 ஆயிரம் வாக்குகளை கூடுதலாக பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ஆம்பூர் தொகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் வாக்குகளில் 90 சதவீத வாக்குகள் திமுகவுக்கே கிடைத்துள்ளன. அதற்கு அடுத்து வேலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குகளும் திமுகவின் வெற்றிக்கு வழிவகுத்தன. இங்குள்ள கிருத்துவ வாக்குகளும், இஸ்லாமிய வாக்குகள் திமுகவுக்கு பெரிய அளவுக்கு கைக்கொடுத்துள்ளன. திமுகவினர் தங்களுக்கு நிச்சயம் விழும் என்று எதிர்பார்த்த வன்னியர் வாக்குகள்தான் காலை வாரியுள்ளன. இருந்தும் சிறுபான்மையினவாக்குகள், தலித் வாக்குகள் திமுகவை வெற்றிபெற வைத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 




 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.