Skip to main content

"இந்த நரிகளின் வாலை ஓட்ட நறுக்கி விரட்டாதவரை இந்த இழிநிலை துடைத்து எறியப்படாது” - சீமான்

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

சி.பி.சி.இ பாடத்திட்டத்தில் தமிழினத்தின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது என்றும் அதற்கு காரணமாக இருக்கும் தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை தமிழ்நாட்டில் கால் ஊன்றவிட விடமாட்டேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதில் இருந்து.   

 

 

s

 

 

இந்தப் பாடத்திட்டத்தை நீக்கவில்லை என்றால் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து உன்னை அறவே நீக்குவோம் என்று மக்களாகிய நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி என்னை இழிவுபடுத்திய அவனுக்கு என் நிலத்தில் ஒற்றை ஓட்டுக்கூட இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுக்காதவரை உன் மானம் காப்பாற்றப்படாது. தமிழன் இழிவானவன் அல்ல பெருமைக்குரியவன். தமிழ் குடியில் பிறந்ததனாலே அவன் பெருமைக்குரியவன் என்கிறார் புரட்சிப்புலவர் பாரதிதாசன். அவர் சொல்கிறார், 


பண்டைப் பெரும் புகழ் உடையோமா, இல்லையா?
பாருக்கு வீரத்தை சொன்னோமா, இல்லையா?
எண்டிசை வாய்மையால் ஆண்டோமா, இல்லையா?
எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா? என்கிறார்.


இந்த நரிகளின் வாலை ஓட்ட நறுக்கி விரட்டாதவரை இந்த இழிநிலை துடைத்து எறியப்படாது, நீ கெஞ்சிக்கொண்டிருந்தால் அவன் உன்னை மிஞ்சிக்கொண்டே இருப்பான். இது தமிழினத்தின் தன்மான இழப்பு. அந்தப் பாடத்தை நீக்கு என்று சொன்னோம் அப்போது அவன் கேட்கவில்லை, இப்போது நாம் என்ன செய்வது என்றால் முட்டுக்கு முட்டுத்தானே வேறென்ன செய்வது. நீ என்னை இழிவு செய்ய நினைத்தால், என் தாய் மண்ணில் உன்னை இழிவுபடுத்தி அழித்து ஒழித்துவிடுவேன், இதுதான் ஒவ்வொரு தமிழ் மகனும் உறுதியாக எடுக்க வேண்டிய நிலைப்பாடு. கெஞ்சி பார்ப்போம், கேட்டுப் பார்ப்போம், கோரிக்கை வைத்துப் பார்ப்போம் எதற்கும் ஒத்துவரவில்லை என்றால் துடைத்து எறிந்து விடவேண்டியதுதான். சி.பி.எஸ்.இ பாடத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை கட்டாயமாக படிக்கவேண்டும். இதன் மூலமாக ஒரு தேசிய இன மக்களை, தமிழனை தன் தாய் மொழியில் இருந்து வெளியேற்றுகிறான், அடுத்தது வரலாற்றிலிருந்து வெளியேற்றுகிறான். ஓர் இனம் தன் மொழியிலிருந்தும் வரலாற்றிலிருந்து வெளியேறுகிறது என்றால் அது செத்துவிடும். இவன், வல்லபாய் பட்டேலை படிக்க வைப்பான். ஆனால், நமது தாத்தன் வ.உ.சி.யை படிக்க வைக்கமாட்டான். நீ ஜான்சிராணியை படிப்பாய். ஆனால், வேலுநாச்சியாரை படிக்க மாட்டாய். பாலகங்காதர திலகரை படிப்பாய். ஆனால், உன் பாட்டன் காமராஜரை படிக்க மாட்டாய். ஏனென்றால் அந்தப் பாடத்திட்டத்தில் அது இருக்காது. இந்தப் புரிதல் எப்போது நமக்கு வருகிறதோ அப்போதுதான் அவனை துடைத்து எறிய முடியும்.

 

 

ss

 

 

 இங்கிருக்கும் ஆட்சியாளர்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு என்று பெயர் வைத்தது நாங்கள்தான் என்பார்கள். ஆனால், தமிழ்நாடு எனப் பெயர் வைக்கச் சொல்லி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் எனும் பெரும் தமிழன் என்பதை மறந்துவிடக்கூடாது. அந்தத் தமிழன் தான் தமிழ்நாட்டிலே இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறான் என்பதை என் உயிரினும் இனிய தம்பி, தங்கைகள், என் அன்பு சொந்தங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவன், அரசியலால் நம்மிடமிருந்த அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டுபோய், நமது வாக்கினால் வலிமை பெற்று, நம்மையே இழிவு செய்கிறான். நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் அதே அரசியல் தளத்தில் அவனை விழுத்தி முடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதுதான் ஒவ்வொரு மானத் தமிழனின் பிறவிக்கடன், வரலாற்றுக் கடமை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் இழிவாக எழுதி விட்டதனால் நாம் இழிவானவர்கள் அல்ல. நம்மை இழிவாக சிந்தித்து எழுதியவன்தான் இழிவானவன் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது பாட்டி ஔவ்வை,
 

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் 
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.  என்கிறாள்.
 

இங்கு இரண்டே இரண்டு சாதிகள்தான் இருக்கிறது. எல்லோரும் ஆண் சாதி பெண் சாதி என்பார்கள். ஆனால் அது சாதி இல்லை பாலினம். சாதி வேறு பாலினம் வேறு, ஒன்று தன்னிடம் இருக்கும் பொருளை மற்றொருவனுக்கு கொடுப்பவன் உயர்ந்த சாதி, மற்றொன்று எல்லாவற்றையும் தனக்கென்று பதுக்குபவன் இழி சாதி, தாழ்ந்த சாதி. தன்னிடம் இருக்கும் பொருளை மற்ற மக்களுக்குக் கொடுப்பவன் எந்தச் சாதி என்று உங்களுக்கு தெரியும், தமிழ் சமூக மக்கள்தான்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான்.


என்று எழுதியது உலகத்திற்கு பொதுமறைகொடுத்த பெருந்தகை நமது வள்ளுவர் பெருமகனார்தான். தமிழ் குடி, என்றும் தாழ்ந்து போகாது அவன் கொடியும், குடியும் என்றும் மேன்மேலும் பறந்து போகும். யார் செய்கிறார்களோ இல்லையோ, இவன் இந்தப் பாடத்திட்டத்தை நீக்கவில்லை என்றால் அவனை எந்த தேர்தலிலும் வெல்வதற்கு நான் விடமாட்டேன். நீங்கள் இதை எல்லாம் கேட்டுவிட்டு, இரண்டு கட்சிகளுக்கு ஓட்டுப்போட்டுவிட்டு படுத்துவிடுங்கள். நாங்கள் அவமானப்பட்டு, வெட்கப்பட்டு, கேவலப்பட்டு வீதிவீதியாக கத்திவிட்டு... தமிழன் என்றாலே மானம், வீரம் இரண்டும் உயிர் என்று வாழவேண்டும் அவன்தான் தமிழன். தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு, மானமும் வீரமும் உயிரென்று வாழவேண்டும் அவன்தான் தமிழன். இதற்கு மேலும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் அந்தப் புத்தகங்களை வாங்கி தீயிட்டு கொளுத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது. அவற்றையெல்லாம் நீங்கள் செய்ய வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் ஏன் என்றால் நீங்கள் படிக்கவேண்டும் வேலைக்கு செல்லவேண்டும். இவர்கள் வழக்கை போட்டு உள்ளே தள்ளி விடுவார்கள். இதற்காகவேதான் எங்களை நேந்த விட்டிருக்கிறார்கள். அதனால், அவற்றை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் தமிழ் சமூகம் ஒருமைப்பட வேண்டும், சாதி, மதம் என்று இல்லாமல் தேசிய இன உணர்வுக்குள் திரள வேண்டும், அப்போதுதான் அது சரியாக வரும். இங்கு கூடியிருப்பவர்கள் எல்லாம் சாதிக்காக மதத்துக்காக கூடவில்லை, தமிழ் சமூகம் தமிழ்ப் பெருங்குடி பிரச்சினை என்பதற்காக கூடியிருக்கிறார்கள்.

 

 நான் என் ஆத்தா அப்பனுக்காக அரசியல் செய்யவில்லை, என் தம்பி, தங்கைகளுக்காகவும் அவர்களுக்குப் பின்னால்வரும் தலைமுறைக்காகவும் அரசியல் செயகிறேன். நாம் தமிழர் எனும் கட்சியை நான் தொடங்கவில்லை, தொடருகிறேன். இதைத் தொடங்கியவர் பெருந்தலைவர் சீ.பா.ஆதித்தனார் தொடங்கினார். அவர் கட்சியை கலைக்காமல் திமுகவில் சேர்ந்துவிடுகிறார் அப்போது, "ஐயா நீங்கள் கட்சியை அப்படியே விட்டுவிட்டு திமுகவிற்கு செல்கிறீர்களே, உங்களுக்குப் பின் இந்த கட்சியை யார் நடத்துவார்கள்?" என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். அதற்கு அவர் "வழி வழியே வரும் தமிழ் பிள்ளைகள் இதனை எடுத்து நடத்துவார்கள்" என்று பதிலளித்தார். அவர் சொல்லி கால் நூற்றாண்டுக்குப்பின் சிவகங்கையிலிருந்து ஒருவன் வந்து இந்த லட்சிய கனவை நகர்த்திக்கொண்டு போகிறேன். இந்த இழிவு என்பது ஒரு பகுதியே, இவன் இன்னும் நம்மளை கேவலம் செய்வான். சிலை வைக்க ஆயிரம் கோடி ரூபாய்க்கு செலவழிப்பான். ஆனால், ரூ. 300 கோடி மட்டும்தான் நிவாரணம் கொடுப்பான். இவர்களை ஒழிக்காமல் நீ நிம்மதியாக வாழ முடியாது. இன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் அண்ணன், சித்தப்பா என்ற உறவை எல்லாம் பார்க்காதீர்கள். சத்தியம், நேர்மை, உண்மை என்பதைதான் நீங்கள் பார்க்க வேண்டும். 

 

 

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.