A rising Strugglr - 'GEN-Z' disturbed the Prime Minister's sleep Photograph: (paksitan)
அண்மையில் சமூக வலைத்தள முடக்கம் காரணமாக வெடித்த GEN-Z தலைமுறை போராட்டத்தின் விளைவாக நேபாள நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதேபோன்ற இன்னொரு போராட்டம் அண்டை நாடான பாக்-லும் தலைதூக்கி இருக்கிறது.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், அதிக கட்டண உயர்வு மற்றும் தவறான தேர்வு மதிப்பீட்டு செயல்முறைக்கு எதிராக மாணவர்கள் மற்றும் GEN-Z ஆர்வலர்கள் தலைமையிலான போராட்டம் வன்முறையாக மாறும் சூழல் ஏற்பட்டு கட்டுப்படுத்த முடியாத நிலையால் கைமீறி துப்பாக்கி சூடு வரை சென்றுள்ளது.
கடந்த மாத தொடக்கத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத்தில் உள்ள யூஏஜெகே (The University of Azad Jammu & Kashmir) பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வு மற்றும் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததாகக் கூறப்படுகிறது. புதிய டிஜிட்டல் மதிப்பெண் மதிப்பீட்டில் 'இ-மார்க்கிங்' முறையை அறிமுகப்படுத்தியது மாணவர்கள் மற்றும் GEN-Z ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இடைநிலை முதலாமாண்டு தேர்வுகளின் முடிவுகள் ஆறு மாதத்திற்குப் பிறகு தாமதமாக வெளியிடப்பட்டன. இந்த மதிப்பீடு ஆயிரக்கணக்கான மாணவர்களிடையே பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.
தாங்கள் எதிர்பாராத விதமாக குறைந்த மதிப்பெண்களைப் பெற்றதாகக் கூறி அந்த முறையை மாற்ற வலியுறுத்தினர். மாணவர்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக மிர்பூரில் உள்ள இடைநிலைக் கல்வி வாரியம் இந்த செயல்முறையை மறுபரிசீலனை செய்ய ஒரு குழுவை அமைத்தது. குழுவின் ஆலோசனைப்படி ஒரு பாடத்திற்கு ரூ.1,500 மறுசரிபார்ப்பு கட்டணத்தை விதித்தது அரசு. இந்த கட்டண உயர்வு மாணவர்கள் மத்தியில் கோபத்தை மேலும் தூண்டியது.
தற்போதுள்ள விதிமுறைகளின் கீழ் 10 சதவீத வருடாந்திர கட்டண உயர்வு பொருந்தும் என்று கூறி பல்கலைக்கழக தரப்பு தெளிவுபடுத்த முயன்ற போதிலும், போராட்டங்கள் தொடர்ந்தன. கட்டண உயர்வு தொடர்பான மாணவர்களின் போராட்டம் அடுத்த கட்டத்தையும் தாண்டி பல்கலைக்கழகத்தில் உள்ள மோசமான வசதிகள், போக்குவரத்து பற்றாக்குறை மற்றும் நிர்வாக அலட்சியம் ஆகியவற்றுக்கு எதிராகவும் திரும்பியது.
இந்தப் பிரச்சனை லாகூர் போன்ற பாகிஸ்தானிய நகரங்களுக்கும் பரவும் நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போராட்டக் களத்தில் நடந்த துப்பாக்கி சூடு நடத்தும் சூழல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் காயமடைந்ததைத் தொடர்ந்து வன்முறையாக மாறியது. துப்பாக்கிச் சூடு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது. மாணவர்கள் டயர்களை எரித்தும், சாலைகளை மறித்தும், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
வன்முறைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்ட அமலாக்க நிறுவனங்களை யூஏஜெகே(The University of Azad Jammu & Kashmir) வலியுறுத்தியது. ஆனாலும் நடவடிக்கை எடுக்க முடியாமல் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கமும் பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்புகளும் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களின் தன்மையால் அதிகளவில் பீதியடைந்துள்ளன. அண்மையில் நேபாளம் மற்றும் பங்களாதேஷின் GEN-Zயின் எழுச்சிகளைக் கருத்தில் கொண்டு பாக் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் கவலைகள் எழுந்தன.
GEN-Z போராட்டத்தின் வன்முறையை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முசாபராபாத்திற்கு ஒரு உயர் அதிகாரம் கொண்ட குழுவை அனுப்பினார். அக்குழு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்து நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் அரசாங்கமும் போராட்டக்காரர்களும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் மற்றும் பூஞ்ச் பிரிவுகளில் இரண்டு கூடுதல் இடைநிலை மற்றும் இடைநிலைக் கல்வி வாரியங்களை அமைக்க பாக் அரசாங்கம் ஒப்புக்கொண்டு தற்போதைக்கு ஒரு சிறிய முற்றுப்புள்ளியை வைக்க முற்பட்டுள்ளது.
நேபாளம் மற்றும் பங்களாதேஷில் ஆட்சிகளை கவிழ்க்கும் நிலைக்கு போன GEN-Zயின் போராட்டம் பாக்கிலும் வெடித்து வருவது அந்நாட்டு பிரதமர் ஷெரிப்பின் தூக்கத்தை வெகுவாக கலைத்துள்ளது.
Follow Us