Skip to main content

எட்டுவழிச்சாலை தீர்ப்பு: சேலத்தில் விவசாயிகள் கும்மியடித்து பாட்டுப்பாடி கொண்டாட்டம்! நக்கீரனுக்கு நன்றி சொன்ன விவசாயிகள்!!

Published on 08/04/2019 | Edited on 09/04/2019

எட்டுவழிச்சாலை திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, சேலத்தில் விவசாயிகள் இனிப்புகள் வழங்கியும், கும்மியடித்து பாட்டுப்பாடியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
 

8 way road


சேலம் & சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தைக் கொண்டு வர நடுவண் பாஜக மற்றும் அதிமுக அரசுகள் தீவிரம் காட்டின. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2,343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தி, நிலத்தை அளந்து எல்லைக்கற்கள் நடப்பட்டன. 
 

எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை, சேர்வராயன் மலையைக் குடைந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது. மேலும், வனப்பகுதிகளில் இருந்து 100 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது. இதனால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படும் என்று இயற்கை ஆர்வலர்கள் தரப்பில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 

இத்திட்டத்துக்காக எடுக்கப்படும் நிலத்தில் 90 சதவீதம், ஏழை சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான ஆண்டுக்கு இருபோகம் விளைச்சல் தரக்கூடிய விளைநிலங்கள் என்பதால் ஐந்து மாவட்ட விவசாயிகளும் ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தனர். 
 

எட்டுவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, பாமக அன்புமணி ராமதாஸ் மற்றும் விவசாயிகள் பலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களும் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இறுதிதீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திங்களன்று (ஏப்ரல் 8) உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தது.

 

8 way road


''எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்காக இதுவரை மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும். இதற்கான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உண்மையில் இந்த திட்டத்தால் யாருக்கும் பயனில்லை. இது பசுமைவழிச்சாலையே இல்லை. எப்படியும் எட்டுவழிச்சாலையை அமைத்திட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டது தெரிய வருகிறது. சுற்றுச்சூழல்துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறவில்லை. மக்களிடமும் கருத்துகள் கேட்கப்படவில்லை,'' என்றும் தீர்ப்பில் தெரிவித்து இருந்தது.
 

இந்த தீர்ப்பு வெளியான சிறிது நேரத்தில் சேலம் உள்ளிட்ட, இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் ஐந்து மாவட்ட விவசாயிகளும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
 

சேலம் குள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள், ஏற்கனவே அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மனிடம் கோரிக்கை மனு கொடுத்து வேண்டுதல் வைத்திருந்தனர். விவசாயிகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், அம்மனுக்கு இன்று பொங்கல் வைத்து நன்றி செலுத்தினர். அப்போது வள்ளி என்ற விவசாயிக்கு திடீரென்று அருள் வந்து சாமியாடினார். பூசாரி முருகேசனும் சாமி ஆடினார். மேலும், அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடித் தீர்த்தனர். பெண்களும், ஆண்களும் வட்டமாக சேர்ந்து கொண்டு பாஜக, அதிமுக அரசுகளைக் கண்டித்தும், தீர்ப்புக்கு நன்றி சொல்லியும் கும்மியடித்து பாட்டுப்பாடினர். 
 

சேலம் ராமலிங்கபுரம் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதிகளில் நிலத்தை அளந்து நடத்தப்பட்டு இருந்த எல்லைக்கற்களை விவசாயிகளே பிடுங்கி எறிந்தனர். வீரபாண்டி அருகே கூமாங்காடு பகுதியில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
 

தீர்ப்பு குறித்து குள்ளம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் பன்னீர்செல்வம், சித்ரா, செல்வி, வீரமணி ஆகியோர் கூறுகையில், ''எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்காக எங்களுடைய வாழ்வாதாரமாக இருந்து வரும் நிலங்கள் முழுமையும் பறிபோகும் நிலை இருந்தது. ஒருவேளை இந்த திட்டம் அமலுக்கு வந்திருந்தால் நாங்கள் இந்நேரம், தெருவில் பிச்சைதான் எடுத்துக் கொண்டிருப்போம். இல்லாவிட்டால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்போம்.

 

8 way road

 

எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாமல், கல்யாணம் காட்சி பண்ண முடியாமல் ரொம்பவே தவித்துப் போயிருப்போம். என்றைக்கு எங்கள் நிலத்தை அளக்க வந்தார்களோ அப்போது இருந்தே நாங்கள் நிம்மதியை தொலைத்து, தூக்கத்தை தொலைத்து, சாப்பாட்டை தொலைத்து தவித்துக் கிடந்தோம். நாங்கள் பட்ட மன உளைச்சலுக்கு இப்போதுதான் தீர்ப்பின் மூலம் நிம்மதி கிடைத்திருக்கிறது. 
 

இந்த திட்டத்துக்காக போடப்பட்ட அரசாணையை உடனடியாக எடப்பாடி பழனிசாமி ரத்து செய்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். தானும் ஒரு விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, எக்காரணம் கொண்டும் மேல்முறையீட்டுக்குப் போகக்கூடாது,'' என்றனர்.
 

கூமாங்காட்டைச் சேர்ந்த விவசாயி மோகனசுந்தரம் கூறுகையில், ''உயர்நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டத்தால் சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பலர் மன உளைச்சலில் இறந்து போயுள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். என் வீட்டில்கூட எங்கள் மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாள். அதற்கெல்லாம் இந்த அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?
 

நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி, அதிமுக, பாஜக கூட்டணியை எதிர்த்து இந்த தேர்தலில் வாக்களிப்போம். ஐந்து மாவட்டங்களிலும் உள்ள எங்கள் சொந்தபந்தங்களிடம் செல்போன் மூலம் பேசி வருகிறோம். நிச்சயமாக அவர்கள் இந்த தேர்தலில் தோற்றுப்போவது உறுதி,'' என்றார்.
 

நக்கீரனுக்கு நன்றி சொன்ன விவசாயிகள்:
 

எட்டுவழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரங்களை காணொலியாகவும், தொடர்ந்து கட்டுரைகளாகவும் நக்கீரன் இதழும், இணையமும் வெளியிட்டு வந்தது. ஆரம்பத்தில் நக்கீரன் வெளியிட்ட ஒரு காணொலி பதிவுக்குப் பிறகே, இப்பிரச்சனையில் மற்ற ஊடகங்களும் தீவிரம் காட்டின. அதை சுட்டிக்காட்டி இன்று பல விவசாயிகள் நக்கீரன் பத்திரிகைக்கு நன்றி கூறினர்.

 

 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.