Skip to main content

2022ஆம் ஆண்டில் பெண்களின் பாதுகாப்பு, பாலின சமத்துவம் சார்ந்த முக்கிய தீர்ப்புகள்

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

- தெ.சு.கவுதமன்

 

நீதிமன்றங்களின் தீர்ப்புகள், வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகள் சில நேரங்களில் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதுண்டு. அதேபோல், இந்த ஆண்டில் பெண்களின் பாதுகாப்பு சார்ந்த 4 வழக்குகளில் நீதிபதிகளின் தீர்ப்பும் கருத்துக்களும் சமூகத்தில் பேசுபொருளாகியுள்ளது.

 

ff

 

கடந்த மே மாதத்தில், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் குழந்தைகளுக்கான சமூக அந்தஸ்து சார்ந்த வழக்கு ஒன்றில், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் குழந்தைகள், இச்சமூகத்தில் அனைவரையும்போல் மரியாதையுடனும் கண்ணியத்துடனும், சமமாக நடத்தப்பட வேண்டும். அதேபோல், விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்யும்போது அவர்களைத் தொந்தரவு செய்யவோ, அவர்களின் குழந்தைகளை அவமானப்படுத்தவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் காவல்துறையிடமிருந்து பாதுகாப்பளிப்பதாக இருந்தது.

 

அதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கேரள நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, பெண்களைக் கொச்சைப்படுத்துவதாகவும், பெண்களின் உடை நாகரிகத்தை அவமதிப்பதாகவும் உள்ளதாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான சந்திரன் என்பவர், இன்னொரு இளம் பெண் எழுத்தாளரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகாரளிக்கப்பட்டது. அதன் விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட பெண் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் உடையணிந்திருந்தார் என்று சந்திரன் தரப்பில் அப்பெண்ணின் புகைப்படங்கள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டது. அதனடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பளித்த கேரள நீதிமன்றம், "அப்பெண் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்தால், இந்திய தண்டனைச் சட்டம் 354ஏ பிரிவு இதற்குப் பொருந்தாது. அது பாலியல் வன்கொடுமையாக ஏற்றுக்கொள்ளப்படாது" எனக் குறிப்பிட்டு, சந்திரனுக்கு ஜாமீன் வழங்கியது. இந்த தீர்ப்பினை பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் கடுமையாக ஆட்சேபித்தனர்.

 

In 2022, women's safety, gender equality important judgments!

 

இதே தீர்ப்பைப்போல், மும்பை நீதிமன்றத்திலும் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. 12 வயது சிறுமியை 39 வயதுடைய நபர் ஒருவர், பாலியல் துன்புறுத்தல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அவர்மீது போக்சோ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டது. ஆனால் நீதிபதி புஷ்பா கனேடிவாலா தனது தீர்ப்பில், ஆடை இல்லாத நிலையில் உடலோடு உடல் தொடுவதுபோல் நடந்துகொண்டால் தான் அது பாலியல் வன்கொடுமையாகக் கணக்கில் கொள்ளப்பட்டு போக்சோ சட்டம் போடப்படும் என்றும், அணிந்திருக்கும் ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு செய்தால் அதற்கெல்லாம் போக்சோ சட்டம் பாயாது என்றும் மிகவும் மோசமான தீர்ப்பை வாசித்தார். அது மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதேபோல், பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேரையும், கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுதலை செய்ததையும், அந்த குற்றவாளிகளை மாலையிட்டு வரவேற்றதையும் மிகுந்த வருத்தத்தோடு பார்க்க வேண்டியிருக்கிறது.

 

இம்மாதத்தில் கேரள நீதிமன்றத்தில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகள் ஒரு வழக்கு தொடுத்தனர். உயர் கல்வி நிறுவனங்களின் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவிகள், இரவு 9.30 மணிக்கு மேல் விடுதியிலிருந்து வெளியே செல்வதைக் கட்டுப்படுத்த, கடந்த 2019ஆம் ஆண்டு கேரள அரசு கொண்டுவந்த அரசாணை, மாணவிகளுக்கு மட்டும் எதிராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அமர்வு, "மாணவர்களையோ, ஆண்களையோ கட்டுப்படுத்தாமல் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் மட்டும் ஏன் இரவில் வெளியே செல்வதற்கான கட்டுப்பாடுகள்? மருத்துவக்கல்லூரி விடுதியில் மாணவிகளுக்கு மட்டும் ஏன் இரவு 9.30 மணிக்குமேல் வெளியே செல்லத் தடைவிதிக்கிறீர்கள்?" என்று கேரள அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

 

மேலும், பெண்களும் இந்த சமூகத்தில் சுதந்திரமாக வாழ வேண்டும். இரவு 9.30 மணிக்கு மேல் வெளியே சென்றால் பெண்களுக்கு தலைகுனிவா? மலையே இடிஞ்சு விழுந்திடுமா? பெண்களுக்குப் பாதுகாப்பானதாக நாட்டை வைத்திருக்க வேண்டியது ஆள்பவர்களின் கடமை! பெண்களுக்கு ஆண்களால் தொந்தரவு என்று கருதினால், அப்படியான சமூக விரோதிகளைப் பிடித்து சிறையில் அடையுங்கள். அதை விடுத்து, பெண்களுக்கு பூட்டு போடுவது எந்தவிதத்தில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பினார். பெண்களுக்கு ஆதரவான இந்த கருத்துக்கு பெண்கள் தரப்பில் ஆதரவையும், ஆண்கள் மத்தியில் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. பெண்களின் உரிமைகள், அவர்களின் முன்னேற்றம் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளுக்கு நீதிமன்ற வழக்குகளும், தீர்ப்புகளும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. பெண்கள் குறித்த சமூகப் பார்வையை மாற்றுவதற்கு இன்னும் இன்னும் முற்போக்கான தீர்ப்புகள் வந்துகொண்டேயிருக்க வேண்டும்.

 

 

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (24.04.2024) தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.