Skip to main content

2000 ஆண்டு பழமையான ‘தமிழி’ எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுப்பு

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

2000 year old pot with Tamil script found  Pandyan Fort

 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு  சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

இது குறித்து சிவகங்கை தொல்நடைக் குழுவின் நிறுவனர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, சிவகங்கை  தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, தலைவர் நா.சுந்தரராஜன், கள ஆய்வாளர் கா.சரவணன் பாண்டியன் ஆகியோர் கோட்டைப் பகுதியில் அவ்வப்போது மேற்பரப்பு கள ஆய்வு செய்து வந்தோம். கடந்த ஞாயிற்றுக் கிழமை  சரவணன் ஒரு பானை ஓட்டில் கீறல் தெரிவதாக எனக்குத் தகவல் தெரிவித்தார். கள மேற்பரப்பில் கிடந்த ஓட்டை எடுத்து சுத்தம் செய்து பார்த்ததில் அது தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு என்பது உறுதி செய்யப்பட்டது.

 

கானப்பேரெயில்

 

காளையார்கோவில் கானப் பேர் என்றும், கானப்பேரெயில் என்றும் இலக்கியங்களில் வழங்கப்படுகிறது. ஐயூர் மூலங்கிழார் எழுதிய புறநானூற்றுப் பாடல் 21, கானப் பேரெயில் கோட்டை ஆழமான அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் மீன் பூத்தது போலப் பதுங்கி இருந்து பகைவரைத் தாக்கும் எயில்களையும், சுற்றிலும் வெயில் நுழைய முடியாத இருண்ட காப்புக்காடுகளையும் உடையது என்கிறது.

 

2000 year old pot with Tamil script found  Pandyan Fort

 

எச்சமாய் நிற்கும் பாண்டியன் கோட்டை

 

தற்போதும் பாண்டியன் கோட்டை கோட்டைகளுக்கான இலக்கணத்தோடு எச்சமாய் மண் மேடாய் காட்சி தருகிறது. வட்ட வடிவிலான இக்கோட்டையில் ஆழமான அகழி இன்றும் காணப்படுகிறது. கோட்டையின் நடுவில் நீராவி குளமும் காணப்படுகிறது. 37 ஏக்கரில் இக்கோட்டை  மேட்டுப் பகுதியாகக் காணப்படுவதோடு இதன் அருகே உள்ள  ஊரும் மேட்டுப்பட்டி என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்விடம் முத்து வடுகநாதர் மற்றும் மருது பாண்டியர் காலத்தில் நாணயச் சாலையாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுவர். நான்கு பக்கங்களிலும் வாயிலைக் கொண்ட கட்டிடம் ஒன்று சிதைந்த நிலையில் இன்றும் உள்ளது. அதன் கிழக்கு வாயில் தரைதளத்தில் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது.

 

கோட்டைக் காவல் தெய்வங்கள்

 

கோட்டை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல் தெய்வங்களை வைத்து வணங்குவது மன்னர்கள் மற்றும் மக்களின் இயல்பாக இருந்துள்ளது. அதன் நீட்சியே இன்றும் கிழக்குப் பகுதியில் கோட்டை முனீஸ்வரர் கோவிலும் தெற்குப் பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவிலும் வழிபாட்டில் உள்ளது.

 

வாள்மேல் நடந்த அம்மன் கோவில்

 

பாண்டியன் கோட்டையின் தெற்குப் பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் நடைபெறுகிற திருவிழாவில் ஏழாம் திருநாள், காளையார்கோவிலில் புகழ் பெற்ற காளீஸ்வரர் கோவிலுக்கும் இக்கோவிலுக்கும் தொடர்புடையதாக இருப்பது மட்டுமல்லாமல் பாண்டிய மன்னனுக்கு பொய்ப்பிள்ளைக்காக மெய்ப்பிள்ளை தந்த கதை, விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

 

சொக்கர் மீனாட்சி கருவறைக் கோவில்

 

காளையார் கோவிலில் மூன்று சிவன் கருவறைகளும் அம்மன் கருவறைகளும் தனித்தனியாக உள்ளன. இதில் சொக்கர் மீனாட்சி கருவறைக் கோவில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகுண பாண்டியன் என்கிற மன்னன் கட்டுவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இக்கோவில் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு திருத்தலங்கள் 14ல் ஒன்றாக உள்ளது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டோடு பிற கல்வெட்டுகளும் இக்கோவிலில் காணக் கிடைக்கின்றன.

 

பாண்டியர்களோடு தொடர்புடைய கானப் பேரெயில்

 

புறநானூறு குறிப்பிடுகிற  வேங்கை மார்பனை வென்று கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெரு வழுதி தொடங்கி, காளையார்கோவில் சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் 13ம் நூற்றாண்டில் பணியாற்றிய பாண்டிய அரசு அலுவலர்களின் பெயர்கள் 18 பெயர் குறிப்பிடப்படுவதால் இவ்வூர் பாண்டியர்களோடு நீண்ட காலம் தொடர்பில் இருந்ததை அறிய முடிகிறது.

 

சங்க காலத்தோடு தொடர்புடைய பொருள்கள்

 

பாண்டியன் கோட்டையில் மிகவும் பழமையான சங்ககால செங்கல் எச்சங்கள், கீழடியில் கிடைத்தது போன்ற கையால் செய்யப்பட்ட மேற் கூரை ஓட்டு எச்சங்கள் மேலும் சிறுவர்கள் விளையாடும் வட்டச் சில்லுகள், விலங்கு விரட்டவோ கவண் எறியவோ பயன்பட்ட சிறிய அளவிலான உருண்டைக்கல், பந்து போன்ற மண் உருண்டைகள் போன்றவை மேற்பரப்பு கள ஆய்வில் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

நீராவி குளத்திலிருந்து தோண்டப்பட்டுள்ள வாய்க்கால்

 

கோட்டையைச் சுற்றி ஆழமான அகழி இன்றும் காணப்படுகிறது. மேலும் கோட்டையின் நடுவே காணப்படும் குளம் நிறைந்து தண்ணீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இதைச் சுற்றியுள்ள குடியிருப்புகள்  நீர் வடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளானதால் கோட்டையின் நடுவில் உள்ள நீராவி குளத்திலிருந்து வாய்க்கால் வெட்டப்பட்டு பின்னர் அகழியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 

 

கீழடி போன்று காணப்படும் மண் சுவர்கள்

 

நீர் வடிவதற்காக வெட்டப்பட்ட இந்த வாய்க்கால்கள்   4 அடி  ஆழமுடையனவாக உள்ளன. கீழடியில் வெட்டப்பட்டுள்ள அகழாய்வு குழிகளைப் போல இதன் இரண்டு புறங்களிலும் மண் அடுக்குகளும் பானை ஓட்டு எச்சங்களும் உடைந்த நிலையில் அரைகுறையான பானைகளும் காணப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு அகழாய்வுக் குழிகள் போலவே தென்படுகின்றன. இந்த வாய்க்காலில் தான் தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு கிடைக்கப்பெற்றுள்ளது.

 

2000 year old pot with Tamil script found  Pandyan Fort

 

தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு

 

கருப்பு சிவப்பு நிற பானை ஓட்டில் கருப்பிலும் சிவப்பிலும் எழுத்துப்பொறிப்பு காணப்படுகிறது,பானை ஓட்டின் உட்புறம் முழுமையாகக் கரிய நிறமாக உள்ளது.இவ்வோடு 7 செ.மீ அகலமும் 7 1/2 செ.மீ உயரமும் உடையதாக உள்ளது. ஐந்து எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. மோ, ச, ர ,ப ,ன்   ஆகிய தமிழி எழுத்துகள் வெளிப்படையாகத் தெரிகின்றன.

 

தொல்லியல் அறிஞர்கள் கருத்து  

 

எழுத்துகள் தெளிவுற வாசிப்பதற்காக தொல்லியல் அறிஞர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டதில் அவர்கள் ஐந்து எழுத்துகள்  மோ, ச, ர ,ப ,ன்  போன்று வெளிப்படையாகத் தெரிந்தாலும் ர என்கிற எழுத்து த வாக இருக்கலாம் சற்று ஒரு கோடு சிதைவுற்று இருக்கலாம். *மோசதப[ன்]**மோசிதப[ன்] என்று இருந்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சங்க காலத்திலே மோசிகீரன் என்ற பெயர் வழக்கில் உள்ளதால் மோசிதபன் என்று கருதவும் இடம் உண்டு.

 

முறையான அகழாய்வு

 

இவ்விடத்தில் முறையான அகழாய்வைத் தமிழக அரசு தொல்லியல் துறை மேற்கொண்டால் பழமையான கானப்பேர் என அழைக்கப்படும் காளையார்கோவிலின் தொன்மையும் பாண்டியர்களின் கோட்டைக் கட்டுமானங்களும் தமிழகத் தொன்மையும் வெளிப்படும்.

 

சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க முடிவு

 

காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் கிடைக்கப் பெற்ற தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓட்டை அதன் தொன்மையும் பெருமையும் பாதுகாப்பும் கருதி சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க சிவகங்கை தொல்நடைக் குழு முடிவு செய்துள்ளது. மேலும் இந்நிகழ்வில் சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா.நரசிம்மன் உடன் இருந்தார் என்று தெரிவித்தார். 

 

 

Next Story

300 ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

Published on 27/12/2023 | Edited on 30/12/2023
300 years old are inscriptions from later Pandias period in Kalmadam

குமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் அமைந்துள்ளது வீரவநல்லூர் எனும் கிராமம். இந்தக் கிராமத்தில் பழமையான சிவபாண்டி ஆண்டார் கல்மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கல்மடத்தில் 2 பெரிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.  

அதுகுறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் சு. தாமரைப்பாண்டியன் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்பு முனைவர் தவசிமுத்துமாறன் எனக்கு 2 கல்வெட்டுகளுடைய புகைப்படங்களை அனுப்பி இவற்றைப் பிரதி செய்ய முடியுமா? என்று கேட்டார். நான் அவற்றைப் பிரதி செய்ய முயன்றபொழுது கல்வெட்டுப்படிகள் தெளிவாக இல்லாமல் இருந்ததை அறிந்தேன். எனவே நண்பர் பால் பேக்கர், பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் வீரவநல்லூர் கிராமத்துக்குச் சென்றேன். வீரவநல்லூரின் பழைய பெயர் வீரகேரள நல்லூர் என்பதை அறிந்தேன். அங்கு கல்மடத்தில் இருந்த கல்வெட்டுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். இரண்டு கல்வெட்டுகளும் மிகப்பெரியதாக இருந்தன. அதில் ஒரு கல்வெட்டு செப்புப் பட்டய வடிவில் இருந்தது கூடுதல் சிறப்பு. கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு செய்ய கடினமாக இருந்தது. காரணம் கல்வெட்டுகள் முழுவதும் பழந்தமிழரின் அளவைக் குறியீடுகள் நிறைந்து காணப்பட்டன. கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய சில மாதங்கள் தேவைப்பட்டன.

கல்மடத்து வாயிலின் வடக்குப் பக்கத்தில் முதல் கல்வெட்டு அமைந்து காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு செப்புப் பட்டயம் வடிவில் அமைந்துள்ளது. கல்வெட்டு கி.பி.1678 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டில் பாண்டிய மன்னனும் இராமனாச்சியாரும் கணக்கன் பராக்கிரம பாண்டிய பெருமாளும் வழங்கிய தானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

300 years old are inscriptions from later Pandias period in Kalmadam

பாண்டிய மன்னன் அளித்த கொடை: 

பிற்கால பாண்டிய மன்னன் ஒருவன் கி.பி.1641 ஆண்டு வீரகேரள நல்லூர் கல்மடத்தை அமைத்து பட்டயம் மூலம் தானமும் செய்துள்ளான். இவன் வரகுணராம பாண்டியனாக இருக்கலாம். அல்லது அவன் காலத்துக்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னனாக இருக்கலாம். பாண்டியன் வழங்கிய தானநிலம் அகத்து வைக்குடிப் பற்று, வாகையடிப்பகுதி, வடக்குப் பற்று, அரசடிப்பள்ளம், பத்தலடி கீழ்க்கடை, சென்னலடி, பனைவிளை திருத்து ஆகிய பகுதிகளில் இருந்ததாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும் அவன் பனைவிளை, நரசிங்கன் தோப்பு, தோப்பறில் மேத்தியாபிள்ளை நிலத்திலிருந்து வந்த கடமைப் பணத்தையும் தானமாக வழங்கியதாகவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

சாணார் குல இராமநாச்சியார் அளித்த தானம்: 

சாணார் குலத்தைச் சேர்ந்த இராமனாச்சியார் கி.பி.1678 ஆம் ஆண்டு வீரவநல்லூர், வடக்கு அத்திப்பட்டி, அகத்து வைக்குடி பற்று ஆகிய பகுதியில் இருந்த நிலங்களைத் தானமாக வழங்கியுள்ளார். அவர் வழங்கிய அந்த தான நிலத்திலிருந்து கோட்டை 18 1/4 பதக்கு நெல் பாட்டமாகக் கிடைத்ததாகவும் கல்வெட்டு கூறுகிறது. 

கணக்கன் பராக்கிரம பாண்டிய பெருமாள் அளித்த தானம்: 

கணக்கன் பராக்கிரம பாண்டிய பெருமாளும் மேற்படி ஆண்டில் தென்கரை பெரியகுளத்தின் மடை வடக்கு நிலப்பகுதியின் பாட்டம் நெல், அகத்து வைக்குடிப் பற்றில் நெடுங்குளம் மடை திடலடி நிலத்தின் கடமைப் பணம், கேப்பங்குழி கடமைப் பணம், காஞ்சிறையடி விளைநிலத்தின் பாட்டப்பணம், அகத்து வைக்குடி மனை 2க்கும் இலுப்பைகளுக்குமான பாட்டப்பணம் ஆகியவற்றைத் தானமாகக் கொடுத்ததாகக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது.

தானங்களின் மூலம் நடந்த பூசைகள்:

மேற்படியாரின் மேற்படி தானங்கள் மூலம் சிவிந்திரமுடைய நயினார் வகைக்கும் அகத்துவைக்குடி வகைக்கும் நெல் கோட்டை 118 1/2 வீசம் 3ம் வரவாக கிடைத்தமை பற்றியும் கல்வெட்டு சுட்டிக் காட்டுகிறது. இந்தப்படி மடத்திற்கு வந்த வரவு மூலம் பிள்ளையார் பூசை, மகேசுவரபூசை, கார்த்திகை மாதம் மூலம் பிறந்தநாள் மகேசுவர பூசை, அத்தம் பிறந்தநாள் மகேசுவர பூசை ஆகியவற்றின் செலவுக்கு மடத்தின் பண்டாரத்திலிருந்து நெல் கொடுக்கப்பட்டுள்ளன. தலை மடத்தோப்பில் அணைஞ்ச பெருமாளும் செந்திப் பெருமாளும் சேர்ந்து கட்டிய கல் அம்பலத்துக்கு மாசி மாதம் முதல் வைகாசி மாதம் வரையிலான பூசை செலவுக்கு பணமும் நெல்லும் கொடுக்கப்பட்டுள்ளன. அதுபோல தண்ணீர் வார்க்கிற ஆளுக்கும் கூலியாக நெல் வழங்கப்பட்டுள்ளது. சித்திரை பரணி பூசை, சங்கரமாதம் சிறப்புப் பூசை, பிரதோச பூசை, கார்த்திகை மாதம் அத்தாளப்பூசை, திருக்கார்த்திகை நறுநெய்வார்ப்பு, வெஞ்சன வகை ஆகியவற்றின் செலவுக்கும் மடத்தின் பண்டாரத்தில் இருந்து  நெல் வழங்கப்பட்டுள்ளன. அதுபோல திருப்பள்ளியெழுச்சி பூசை, சிவன் ராத்திரி பூசை, விளக்குப்பூசை, மடத்தாயிக்கு சீலை வாங்குதல், சங்கு ஊதுதல், வெள்ளிமலை வேலாயுதப் பெருமாளுக்கு உசர பூசை, பூரடம் பிறந்தநாளில் மகேசுவர பூசை உள்ளிட்டவைகளுக்கும் மொத்தம் கோட்டை 118 1/2 வீசம் 3 படி பண்டாரத்திலிருந்து செலவு செய்யப்பட்ட செய்திகளும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன.

மேற்படி தன்மப்பிரமாணத் தர்மத்துக்கு ஏதாவது தடங்கல் வந்தால் வீரவநல்லூர் ஊராரும் கோயிமையாரும் வெள்ளிமலை வேலாயுதப் பெருமாள் பண்பாரத்தில் கூடிப் பேசி தீர்ப்பிச்சு கொண்டு தன்மம் தொடர்ந்து நடத்தி வரவேண்டும் என்று கல்லிலும் செம்பிலும் வெட்டி தானம் விட்டுக் கொடுக்கப்பட்டதாகக் கல்வெட்டு எடுத்துரைக்கிறது. மடத்துவாயிலின் தெற்குப் பக்கம் 2வது கல்வெட்டு அமைந்துள்ளது. கல்வெட்டு கி.பி. 1683 ஆம் ஆண்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 2 கற்களில் வெட்டி இணைத்து சுவற்றில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னன் கல்மடம் கட்டியதோடு தானமும் வழங்கிய செய்தியை இக்கல்வெட்டும் சுருக்கமாகக் கூறுகிறது. கல்மடத்திற்கு பிள்ளைமார் சமூகத்தவர் பிள்ளையார் பூசைக்கும், மகேசுவர பூசைக்கும், விசேச பூசைக்கும் கி.பி. 1678 ஆம் ஆண்டு நிலதானம் செய்துள்ள செய்தியையும் கல்வெட்டு குறிப்பிட்டுக் காட்டுகிறது.

சாணார் குல இராமனாச்சியார் மடத்தின் கடனை அடைத்தல்: 

சிவ பாண்டி ஆண்டார் கல்மடத்தின் நிலங்கள் மடத்தின் செலவினங்களுக்காக 750 ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பராக்கிரம பாண்டிப் பெருமாள் என்பவர் மடத்திற்கு படுகமிட்ட வகையிலும் 400 ரூபாய் மடத்திற்கு கடன் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கடன் ஏற்பட்டதால் மடம் செயல்பட முடியாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் கல் மடத்திற்கு ஏற்பட்ட கடன்தொகை 1150 ரூபாயை நாடார் சமூகத்தைச் சேர்ந்த சாணார் நயினார், ஆண்டிச்சி அவர்களின் மகள் இராமனாச்சியார் வழங்கித் தீர்த்து வைத்துள்ளார். அவர் கல்மடத்திற்கு பணமும் நிலமும் தானமாகக் கொடுத்துள்ளார். மேலும் கணக்கன் பராக்கிரம பாண்டியப் பெருமாள் என்பவர் மடத்துக்கு விட்டுக் கொடுத்த அறைப்பிரையை மாற்றி சிறை மடத்து மேல்கரையில் வீடும் கட்டிக் கொடுத்துள்ளார்.

அதுவன்றி மடத்து வேலைக்கு மிடி மகள் சிற்றம்பலமும் அருவியார் மகன் ஆண்டானும் கொடுத்துள்ளார். பறையடிமையாக உலகுடாச்சி மகள் சாத்தியமுலை உண்ணியும் பெரிய மாதி மகள் அணஞ்சியும் முலை உண்ணியும் மேற்படியாளின் கணவன் சேளானையும் வழங்கியுள்ளார் என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இந்தத் தர்மத்தை இராமனாச்சியாரும் பராக்கிரம பாண்டியப் பெருமாளும் சேர்ந்து பராமரித்து வரவேண்டும் என்றும் கல்வெட்டு தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. கல்மடத்திற்கு வழங்கப்பட்ட தானத்தின் மூலம் மடத்தின் கணக்கு பிள்ளைக்கு ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தானம் கி.பி.1682 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

சிவிந்திரமுடைய நயினாருக்கு பால்பாயிதம் வைக்க பண தானம்:

சிவபாண்டி ஆண்டாரின் கல்மடத்திற்கு பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த கணக்கன் பராக்கிரம பாண்டிய பெருமாள் என்பவரும் பண தானம் செய்துள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு மாதந்தோறும் மூல நட்சத்திரத்துக்கு சிவிந்திரமுடைய நயினாருக்கு பால்பாயிதம் வைக்க 200 ரூபாய் தானம் கொடுத்துள்ளார். தானப் பணத்தின் வட்டியின் மூலம் பால்பாயிதம் தொடர்ந்து சுவாமிக்கு வைத்து வரவேண்டும் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தானத்தை அவர் கி.பி.1685 ஆம் ஆண்டில் செய்துள்ளார். கணக்கன் பராக்கிரமப் பாண்டிய பெருமாள் சாணார் குலத்தைச் சேர்ந்த இராமனாச்சியாரை உயர்வு பட மரியாதையுடன் "எங்கள் தாயார்" என்று குறிப்பிட்ட செய்தியையும் மேலும் மடத்தில் கட்டி வைத்த வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்பித்த அண்ணாவிக்கு பணம் 1ம் 1 கோட்டை நெல்லும் ஊதியமாகக் கொடுக்கப்பட்ட செய்தியையும் கல்வெட்டு தெளிவாகக் குறிப்பிடுகிறது. மேற்படி மடத்தின் செலவுகளுக்குத் தானம் செய்யப்பட்ட நிலம், வரவு நிலையிலுள்ள பாட்டம் பணம், கடமைப் பணம் பற்றிய செய்திகளும் கூறப்பட்டுள்ளன. அதோடு மடத்தில் ஒற்றிக்கு வைக்கப்பட்டிருந்த  கடன் பணம் 150ம் வழங்கி மீட்கப்பட்ட செய்தியையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது என்று அவர் கூறினார்.

மேலும் இந்தக் கல்மடமும் அதிலிருக்கின்ற கல்வெட்டுகளும் வரலாற்று முக்கியத்துவமானவை ஆகும். தமிழர் வரலாற்று அடையாளமாகத் திகழும் வீரகேரள நல்லூர் கல்மடம் இடிந்து விழும் நிலையிலுள்ளது. எனவே அரசு உடனடியாகக் கல் மடத்தையும் கல்வெட்டுகளையும் பராமரித்துப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மழை பாதிப்பினால் இடிந்து சேதமான கோட்டை மதில் சுவர்!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

Fortress wall damaged by rain

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது பிரம்மாண்டமான ராஜா தேசிங்கு கோட்டை. ராஜா தேசிங்கு என்ற மன்னன் இந்தக் கோட்டையில் தங்கியிருந்து இப்பகுதியை ஆட்சி செய்துவந்தார். தற்போது இந்தக் கோட்டை தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோட்டையைச் சுற்றிப் பார்க்க தினசரி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அதுவும் பண்டிகை, விடுமுறை காலங்களில் கோட்டையைக் காணவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும்.

 

செஞ்சி நகருக்கு அருகில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மூலம் இந்த நகரில் வியாபாரமும் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. இங்குள்ள ராஜகிரி, கிருஷ்ணகிரி என இரண்டு கோட்டைகள் சுமார் 15 கிலோ மீட்டருக்கு கற்களால் ஆன மதில் சுவரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மதில் சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. இதனால் கோட்டைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுலா பயணிகள் கவலையுடன் கூறுகின்றனர். செஞ்சி கோட்டைப் பகுதியில், ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

 

இதனை தொல்பொருள் துறையினர் உடனடியாக சரி செய்ய வேண்டும்; மீண்டும் மதில் சுவர் அமைக்க வேண்டும்; மேலும், செஞ்சி கோட்டையையும் அதனைச் சுற்றியுள்ள மதில்களையும் ஆய்வுசெய்து, அதைப் பாதுகாக்கும் பணியில் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.